ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மணிரத்னத்தின் மோதிரக்கையில் குட்டு பட்டவர் கெளதம். ஆனால், அவரது இயக்கத்தில் நடித்த கடல் கெளதமுக்கு ஒரு விலாசமாக அமைந்தபோதும், பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தவில்லை. ஆனபோதும், சில படங்களை கைப்பற்றி சுறுசுறுப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார். அதோடு, நடித்து வரும் படங்கள் திரைக்கு வரும்போது கமர்சியல் ஹீரோ லிஸ்டில் நானும் இருப்பேன் என்கிறார் கெளதம். இனி அவரிடம் சில கேள்விகள்...
* மணிரத்னத்தின் மோதிரக்கையில் குட்டு வாங்கியது பற்றி?
இந்திய அளவில் அவர் மிகப்பெரிய டைரக்டர் என்பது எனக்குத் தெரியும். அப்பா அவர் இயக்கத்தில் நடித்த அக்னிநட்சத்திரம் படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன். அசந்து போயிருக்கிறேன். அதனால் அப்படிப்பட்ட ஒரு பிரமாதமான டைரக்டர் படத்தில் நான் அறிமுகம் ஆகிறேன் என்கிறபோது சொல்ல முடியாத சந்தோசத்தை உணர்ந்தேன். அதனால், ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நம்பிக்கைகளுடன் கடல் படத்தில் நடித்தேன். பல காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்த நிஜமாலுமே அடி வாங்கினேன், நிஜமாலுமே அழுதேன். இதையெல்லாம் மணி சார் என்னிடமிருந்து வரவழைத்தார். அந்த வகையில, முதல் படத்திலேயே மணிரத்னம் சாரின் மோதிரக்கையினால் குட்டு வாங்கிய அதிர்ஷ்டசாலியாகி விட்டேன்.
* கடல் எதிர்பார்த்த வெற்றி பெறாதபோது மனநிலை எப்படி இருந்தது?
சினிமாவில் வெற்றி தோல்வி என்பது ரொம்ப சகஜம். இதே மணிரத்னம் சார் இந்திய அளவில் எத்தனையோ மெகா ஹிட் படங்களை கொடுத்தவர். இருப்பினும் சில சமயங்களில் சறுக்கி விடுவது இயல்புதானே. ஆனால் என்னைப்பொறுத்தவரை அதை எனக்கு மிகப்பெரிய அடையாளமாக கருதுகிறேன். மேலும், அவர் படத்தில் நடித்ததினால்தான் கடல் கெளதம் என்றால் அனைவருக்கும் தெரிந்த நடிகராகி விட்டேன். அதனால் படம் எதிர்பார்த்த வெற்றி இல்லை என்றாலும், மணி சார் படத்தில் நடித்தது எனக்கு கிடைத்த பெரிய வெற்றிதான். மேலும் எனது தந்தையும் சினிமாவில் எத்தனையோ வெற்றி தோல்விகளை சந்திதத்வர் என்பதால், எதையும் ஒரேமாதிரியாக ஏற்றுக்கொள்ளும் மனநிலை என்னிடம் உளளது.
* எந்த மாதிரியான கதைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறீர்கள்?
இப்போதைககு நான் ஒரு இளவட்ட நடிகன். அதனால், காதல் காமெடி கலந்த ஜாலியான கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். வை ராஜா வை, சிப்பாய், என்னமோ ஏதோ உள்பட பல படங்களில் நடிக்கிறேன். இந்த படங்கள் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளன. அதனால் எனது முழு கவனத்தையும் செலுத்தி நடித்து வருகிறேன்.
* காதலை விட காமெடி காட்சிகளில் நடிப்பது கடினம் என்கிறார்களே?
உண்மைதான். காதலிப்பது எல்லோருக்குமே பிடித்தமான விசயம். அதிலும் நான் இப்போது டீன்ஏஜ் பையன் என்பதால் ரொம்ப பிடித்தமான விசயமும்கூட, அதனால் காதல் காட்சிகளில் உடனே பற்றிக்கொள்வேன். அதேசமயம், காமெடி என்கிறபோது கொஞ்சம் கடினமாகத்தான் உள்ளது. மற்றவர்களை சிரிக்க வைப்பது எத்தனை கஷ்டம் என்பதை உணர்கிறேன். என்றாலும், தியேட்டருக்குள் வரும் ரசிகர்களை நூறு சதவிகிதம் திருப்திபடுத்தி அனுப்ப வேண்டும் என்பதற்காக, கதைக்கும் காட்சிக்கும் தேவையான நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தி வருகிறேன்.
* உங்களுக்கு ரோல் மாடல் யார்?
என் அப்பாதான். அவர் எல்லா ஏரியாவிலும் புகுந்து விளையாடிய நடிகராயிற்றே. காதல், ஆக்சன், செண்டிமென்ட், காமெடி உள்பட அனைத்து ரசங்களையும் கலந்து கொடுக்கும் நவரசநாயகன் கார்த்திக் என் அப்பா என்பதால், அவரை ரோல்மாடலாக கொண்டு நடித்தாலே போதும் என்று நினைக்கிறேன். நான் ஒவ்வொரு படத்திலும் நடிப்பதற்கு முன்பு எந்தமாதிரியான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று என் அப்பாவிடம் ஆலோசனை கேட்கிறேன். அவர் சொல்லும் அறிவுரைகளையும் சேர்த்து எனது பாணியில் நடித்து வருகிறேன். தாத்தா, அப்பாவின் பெயரை காப்பாற்றும் நடிகராக வேண்டும் என்ற கவனமும், பொறுப்பும் என்னிடம் இருந்து கொண்டேயிருக்கிறது.
* லட்சுமிமேனனும, நீங்களும் நெருங்கிய பழகுவதாக கூறப்படுகிறதே?
கடல் படத்தில் நடித்தபோது துளசி நாயரிடம் பழகினேன். அதேபோல், சிப்பாய் படத்தில் நடித்து வரும்போது லட்சுமிமேனனிடம் பழகினேன். உடன் நடிக்கும் கோ-ஆர்ட்டிஸ்களுடன் நெருங்கி பழக வேண்டும்,. எங்களுக்குள் ஒரு புரிதல் இருந்தால்தான் காட்சிகளில் தத்ரூபமாக நடிக்க முடியும். மேலும், அவர் நன்றாக சகஜமாக பேசி பழக்கக்கூடியவர். அதனால் நாங்கள் கேமரா முன்பு நின்ற முதல்நாளிலேயே எனக்கு நல்லத்தோழியாகி விட்டார். இதேபோல் என்னுடன் நடிக்கும் அனைத்து நடிகர்-நடிகைகளுடனும் நான் ப்ரண்டாகத்தான் பழகி வருகிறேன். ஆனால் நீங்கள் நினைப்பதுபோன்று எந்த நடிகையுடனும் எனக்கு காதல் இல்லை. சினிமாவில் காதலிப்பதோடு சரி. மற்றபடி என்னுடன் நடிக்கும் அனைத்து நடிகைகளுமே எனக்கு தோழிகள்தான்.
* இளவட்ட நடிகர்களில் யாரை உங்களுக்கு போட்டியாக கருதுகிறீர்கள்?
இப்போதுதான் சினிமாவில் பிள்ளையார் சுழி போட்டு எனது பயணத்தை தொடங்கியிருக்கிறேன். இந்த நேரத்தில் வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே என்னிடம் உள்ளது. மற்றபடி எந்த நடிகரையும் எனக்கு போட்டியாக நினைக்கவில்லை. அந்த அளவுக்கு இன்னும் நான் பெரிய நடிகராகிவிடவில்லை.
* மல்டி ஹீரோ வாய்ப்புகள் வந்தால் ஏற்பீர்களா?
கதையும், அதில் எனது கதாபாத்திரமும் பிடித்திருந்தால் நடிப்பேன். முக்கியமாக என்னுடன் நடிக்கும் அந்த இன்னொரு நடிகரின் கேரக்டருக்கு இணையாக எனக்கு தரப்படும் கேரக்டரும இருக்க வேண்டும். மேலும்,அப்படி ஒரே படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஹீரோக்கள் நடிக்கிறபோதுதான் நடிப்பில் ஆரோக்யமான போட்டிகள் ஏற்படும். அதை நானும் வரவேற்கிறேன். பாலிவுட் சினிமாவைப்போன்று தற்போது தமிழ் சினிமாவிலும் மல்டி ஹீரோ கதைகள் அதிகரித்து வருவது வரவேற்க வேண்டிய விசயம்தான்.
* இன்றைய சினிமாவில் நடிகர்களின் வளர்ச்சிக்கு என்னென்ன தேவை என்று நினைக்கிறீர்கள்?
நல்ல கதையும், நல்ல டைரக்டர்களும்தான் தேவை. கதைதான் படங்களின் வெற்றியை தீர்மானிக்கிறது. குறிப்பாக, அதை படமாக்கும் விதம் டைரக்டர்களின் கையில்தான் உள்ளது. அதனால் நல்ல கதையும், டைரக்டர்களும்தான் வெற்றியை உறுதிபடுத்துகிறார்கள். அதனால் என்னை வெற்றிப்பட நாயகனாக்கும் கதைகளையும், என்னை சிறந்த நடிகனாக்கும் டைரக்டர்களையும் வரவேற்கிறேன் என்கிறார் கெளதம்.