திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகேஸ்வரராவ், சிகிச்சை பலன் இன்றி இன்று(ஜனவரி 22ம் தேதி) அதிகாலை காலமானார். 1924-ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி, ஆந்திர மாநிலம் ராமாபுரத்தில், அக்கினேனி வெங்கட்ரத்னம், அக்கினேனி புன்னம்மா தம்பதிகளின் மகனாக பிறந்தவர் நாகேஸ்வரராவ். இவருக்கு ஐந்து சகோதரர்கள். சிறுவயதில் இவரது குடும்பம் மிகவும் கஷ்டத்தில் இருந்தது. பொருளாதார சூழல் சரியில்லாத காரணத்தால் படிப்பை கூட பாதியிலேயே விட்டுவிட்டார்.
பின்னர் நாடக நடிகராக தன் வாழ்க்கையை தொடங்கிய நாகேஸ்வரராவ், 1941ம் ஆண்டு தர்மபத்தினி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து மாயா பஜார், ஸ்ரீகிருஷ்ணாஅர்ஜூன யுத்தம், பாலராஜூ, நாமின்னபந்து, மிஸாம்மா, சக்கராபாணி, லைலா மஜ்னு, அனார்கலி, பிரேம் நகர், பிரேமபிசாகாம் உள்ளிட்ட ஏராளமான சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து புகழ்பெற்றார். இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளவர், தமிழிலும் தேவதாஸ், ஓர் இரவு, மாயக்கண்ணி, பூங்கோதை, மாதர்குல மாணிக்கம், எங்கவீட்டு மகராணி, அலாவுதீனும் அற்புத விளக்கும், வாழ்க்கை ஒப்பந்தம் உள்பட 15 படங்களில் நடித்துள்ளார். ஹீரோவாக மட்டுமல்லாமல் சினிமாவில் ஹீரோயின்கள் வர தயங்கிய காலங்களில் இவரே பெண் வேடமிட்டு ஹீரோயினாகவும் சில படங்களிலும், நாடகங்களிலும் நடித்துள்ளார்.
மறக்க முடியாத தேவதாஸ்
தமிழ்நாட்டு மக்களால் தேவதாசை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அந்த தேவதாஸ் தான் அக்கினேனி நாகேஸ்வரராவ். தமிழிலும் வெளியான தேவதாஸ் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
ஆந்திரத்து சிவாஜி
இந்தியாவிலேயே முதன் முறையாக இட்டாரு மித்ரு என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தவர் இவர்தான். சிவாஜி நடித்த நவராத்திரி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் 9 வேடங்களில் நடித்தார். ஆந்திரத்து எம்.ஜி.ஆர். என்.டி.ராமராவ் என்றால் சிவாஜியாக இருந்தவர் நாகேஸ்வரராவ் தான்.
சினிமாவில் 75 ஆண்டுகள்...
தெலுங்கு சினிமாவை ஐதராபாத்திற்கு மாற்றிய பெரும் பெருமை இவருக்கு உண்டு. மேலும் சினிமாவில் கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் இருந்துள்ளார் நாகேஸ்வரராவ்.
புற்றுநோய் பாதிப்பு
2013-ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக நாககேஸ்வரராவ்வே செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். 90 வயதிலும் யாருடைய துணையும் இன்றி தன்னிச்சையாக தன் தேவைகளை தானே கவனித்துக் கொள்ளும் சக்தியோடு வலம் வந்த நாகேஸ்வரராவை புற்று நோய் தாக்கியது ஆந்திராவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனாலும் அந்த மனுஷன் அசரவில்லை. தனக்கு புற்று நோய் இருப்பது தெரிந்ததும் அதை ரகசியமாக வைக்காமல் மீடியாவை கூட்டி அறிவித்தார்.
100 வயது வரை வாழ்வேன்
மீடியாக்களிடையே அவர் அப்போது பேசும்போது, "எனக்கு புற்று நோய் இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நான் அதற்காக பயப்படவில்லை. இந்த நோய் எனக்கு மன தைரியத்தையும், வலிமையையும் கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு நொடியையும் இப்போதும் அனுபவித்து வாழ்கிறேன். இந்த புற்று நோயால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. நான் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்க போவதால் எனது ரசிகர்களோ எனது நலம் விரும்பிகளோ, உறவினர்களோ என்னை எந்த விதத்திலும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அனைவரின் ஆசீர்வாதத்தால் நான் நூறு வயதை தாண்டி வாழ்வேன்" என்று கூறியிருக்கிறார்.
மரணம்
தான் 100வயது வரை வாழ்வேன் என்று மன உறுதியோடு கூறியிருந்த நாகேஸ்வரராவ்க்கு புற்றுநோயின் தாக்கம் அதிகரிக்க ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இருந்தும் சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை அவர் மரணம் அடைந்தார்.
நடிகராக மட்டுமல்லாமல் அன்னப்பூர்ணா ஸ்டுடியோஸ் என்ற பெயரில் சொந்தமாக படங்களும் தயாரித்து வந்தார். இவரது மனைவி அன்னப்பூர்ணா 2011ம் ஆண்டு இறந்துவிட்டார். இவருக்கு வெங்கட் அக்கினேனி, நாகர்ஜூனா என்ற இரு மகன்களும், சத்யாவதி, நாகசுசீலா, சரோஜா என்ற மூன்று மகளும் உள்ளனர். இவர்களில் நாகர்ஜூனா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் ஆவர். தற்போது நாகேஸ்வரராவ் பேரன்களான நாக சைதன்யா, சுமந்த், சுஸாந்த் ஆகியோரும் நடிகர்களாக உள்ளனர்.
இந்திய அரசின் உயர்ந்த விருதுகள்
தெலுங்கு சினிமாவை ஐதராபாத்திற்கு மாற்றிய பெரும் பெருமை இவருக்கு உண்டு. இந்திய சினிமாவின் மிக உயர்ந்த விருதான தாதா சாகிப் பால்கே விருதும், இந்தியாவின் மிக உயர்ந்த இரண்டாவது பெரிய விருதான பத்மவிபூஷண் விருதும் இவர் பெற்றுள்ளார். இதுதவிர ஏராளமான பிலிம்பேர் விருதுகள், தமிழக மற்றும் ஆந்திர அரசின் மாநில விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
உடல் அஞ்சலி
மறைந்த நாகேஸ்வரராவ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.