ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட் கருப்பு வெள்ளை சினிமாவின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் சுசித்ரா சென். அவரது மரணத்தை விட அவர் கடைசியாக வாழ்ந்த வாழ்க்கைதான் இந்தி திரையுலகை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
1952ம் ஆண்டு சேஷ் கோதாய் என்ற வங்காள படத்தின் மூலம் நடிகையாக வாழ்க்கையை துவக்கிய சுசித்ரா சென். தன் சொந்த மொழி படங்களில் நடிப்பதையே எப்போதும் விரும்பினார். சாத் பாகே பந்தா, அக்னி பரிக்ஷா, சப்தாபதி ஆகிய வங்காள படங்கள் அவரை மிகச் சிறந்த நடிகையாக அடையாளம் காட்டியது.
அவரது முதல் இந்திப் படமான தேவதாஸ்தான் அவரை கமர்ஷியல் ஹீரோயினாக்கியதோடு, இந்தியா முழுமைக்கும் அறிந்த நடிகையாக்கியது. 1963ம் ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது. ஆனாலும் அவர் கமர்ஷியல் இந்தி படங்களை விட வங்க மொழிப் படங்களில்தான் அதிக ஆர்வம் காட்டினார். அவர் நடித்த சாத் பாகே பந்தா என்ற வங்க மொழிப் படத்திற்காக 1963ம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது பெற்றார். சர்வதே விருதைப் பெற்ற முதல் இந்திய நடிகை சுசித்ரா சென் என்ற புகழையும் பெற்றார்.
1978ம் ஆண்டு சுசித்ரா நடித்த பிரணோய் பாஷா என்ற படம் அவருக்கு பெரிய தோல்விப் படமாக அமைந்தது. அதற்குள் புதியவர்களின் வருகை வண்ணப்படங்களின் ஆதிக்கம், முழுக்க முழுக்க வணிக சினிமா என்று மாறிப்போனதால் சினிமாவை விட்டு முழுவதுமாக விலகினார். தனது மகள் மூன்மூன் சென் அவரைத் தொடர்ந்து பேத்திகள், ரியா, ரெய்மா என அனைவரும் நடிகைகளாகி புகழ் வெளிச்சத்தில் திளைத்த போதும் அவர் தனிமையான வாழ்க்கையையே விரும்பினார்.
கோல்கட்டாவின் பின் தங்கிய பகுதி ஒன்றின் அடுக்குமாடி குடியிருப்பில் தனது சேமிப்பில் மிஞ்சிய சொச்ச பணம், ஒரு வேலைக்காரி உதவியுடன் வாழ்ந்தார். அவர் பெரிய சினிமா லெஜண்ட் என்பது கூட பக்கத்து வீட்டுக்காரர்களுக்குத் தெரியாது. 2005ம் ஆண்டு இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அவருக்கு வழங்கப்பட்டபோது அதனை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்.
தான் சினிமாவில் கொடி கட்டி பறந்த காலத்தில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது, ஒரு படத்தின் தோல்வி மூலமே புறக்கணிக்கப்பட்டது. சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில சோகங்கள் இவற்றின் காரணமாகவே அவர் கடைசி காலத்தில் எளிமையான தனிமை வாழ்க்கையை தேர்ந்தெடுத்ததாக கூறுகிறார்கள்.
அவர் மரண படுக்கையில் விழுந்தபோது மேற்கு வங்க முதல்வர் மம்தா பாணர்ஜி 7 முறை ஓடிச் சென்று பார்க்கிறார். இறந்த பிறகு பிரதமர் இரங்கல் தெரிவிக்கிறார். மகள், பேத்திகள் ஓடோடி வருகிறார்கள். கொல்கத்தாவின் புகழ்பெற்ற ரபிந்திரா சதனில் அவர் உடல் வைக்கப்படுகிறது. ஆயிரக் கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
இந்த அங்கீகாரமும், மரியாதையும் அவர் வாழும் காலத்தில் அவருக்கு வழங்கப்பட்டிருந்தால் அவரது வாழ்வும், மரணமும் இன்னும் கூடுதல் அர்த்தமுள்ளதாகவும், மதிப்புமிக்கதாகவும் இருந்திருக்கும். தன்மானத்துக்காக தனித்து வாழ்ந்த சுசித்ராவின் ஆன்மா சாந்தி அடையட்டும். காலத்தால் அழிக்க முடியாத அவரது காவியங்களால் அவர் தொடர்ந்து இந்த பூமியில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.