பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மறைந்த பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவியின் உடல், சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு கவர்னர் ரோசய்யா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுசீலா, சச்சு உள்ளிட்ட பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், பெட்டாபுரத்தில், 1928ல் அஞ்சலிதேவி பிறந்தார். இளம் வயதில் சென்னை வந்து, நாடகங்களில் நடித்தார். இவரது அஞ்சலிகுமாரி என்ற இயற்பெயரை, அஞ்சலி தேவி என, மாற்றியவர், இயக்குனர் புல்லையா. அஞ்சலி தேவி, 1936ல், "ராஜா ஹரிசந்திரா என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். அவரது நடிப்பு திறமையை பார்த்த, எல்.வி.பிரசாத், "கஷ்டசீவி என்ற படத்தில், முக்கிய பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்தார். இதை தொடர்ந்து, "லவகுசா, அனார்கலி, சதி சாவித்ரி உட்பட, தெலுங்கு, தமிழ், கன்னட மொழிகளில் பல்வேறு வேடங்களில், 500 படங்களில் அஞ்சலி தேவி நடித்துள்ளார்.
தமிழிலில், பி.யு.சின்னப்பாவுடன், "மங்கையர்கரசி எம்.ஜி.ஆர்., உடன், "சர்வாதிகாரி, மர்மயோகி, சக்கரவர்த்தி திருமகன் ஜெமினி கணேசனுடன், "கணவனே கண்கண்ட தெய்வம் ரஜினியுடன், "அன்னை ஓர் ஆலயம் படங்களில் அஞ்சலி தேவி நடித்துள்ளார். இவர் சொந்தமாக,"அஞ்சலி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை துவங்கி, தெலுங்கு மொழியில் முதல் வண்ண படமான, "லவகுசா உட்பட, 27 படங்களையும், "சீரடி சத்ய சாய் தெய்வ கதா என்ற தொலைக்காட்சி தொடரையும் தயாரித்துள்ளார். சிறந்த நடிகைக்கான தேசிய விருது மற்றும் பிலிம்பேர் விருது உட்பட, பல விருதுகள் பெற்றுள்ளார். சென்னையில் உள்ள, தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை துணை தலைவர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார்.
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்த அஞ்சலி தேவிக்கு முன், மூச்சு திணறல் ஏற்பட்டு, வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி ஜனவரி 13ம் தேதி பிற்பகல், 2:00 மணிக்கு மாரடைப்பால் இறந்தார். அஞ்சலி தேவியின் "பேத்திகள் அமெரிக்காவில் இருந்து வரவேண்டி இருந்ததால் இறுதிசடங்குகள் வியாழக்கிழமை அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி , சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்த அவரது உடல் சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அஞ்சலி தேவியின் உடலுக்கு கவர்னர் ரோசய்யா, பிரபல பின்னணி பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா, தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ், நடிகைகள் சச்சு, காஞ்சனா, வைஜெயந்தி மாலா, நடிகர்கள் ராஜேஷ், சரத்பாபு உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசு சார்பில் அமைச்சர் பா.வளர்மதி உள்ளிட்ட 3 அமைச்சர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது. பின்னர் அவரது அஸ்தி, குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில், சாஸ்திரிகள் மூலம் சென்னை மெரினா கடற்கரையில் மாலை கரைக்கப்பட்டது.