இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
டைரக்டர் பாலா, பரதேசியில் என்னை மெருகேற்றியதால், இப்போது ஒவ்வொரு படத்தையும் கவனமாக செலக்ட் பண்ணி நடிக்கிறேன் என்று சொல்லும் அதர்வா, இரும்புக்குதிரையைத் தொடர்ந்து ஈட்டியில் நடித்து வருகிறார். அதோடு, இப்படம் என்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் படமாக அமைந்திருக்கிறது என்றும், வெற்றி ஒன்றே சினிமா உலகில் எதிர்காலத்தை முடிவு செய்யும், இதில் வாரிசுகளுக்கு என்று தனி ஆதரவு கிடையாது என கூறியுள்ளார். அவர் அளித்த விறுவிறுப்பான பேட்டி இதோ...
* பாலாவின் பரதேசியில் நடித்த அனுபவம் உங்களை எப்படி மாற்றியிருக்கிறது?
அந்த படத்துக்கு முன்பு வரை ஒரு சாதாரண காதல் நாயகனாக நடிக்க வேண்டும் என்பது மட்டுமே எனது எண்ணமாக இருந்தது. ஆனால் பரதேசியில் நடித்த பிறகு வித்தியாசமான கதைகளில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அந்த அளவுக்கு எந்த மாதிரியான கதைகளிலும நடிக்க முடியும் என்ற தைரியத்தை எனக்கு ஏற்படுத்திக்கொடுத்தவர் பாலா சார்தான். அதாவது அதுவரைக்கும் ஒரு சாதாரண கல்லாக இருந்த என்னை ஒரு கலைஞனாக, சிலையாக வடித்தவர் பாலாதான். அதனால் இனி நான் நடிக்கிற ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டே நடிக்கிறேன். அதனால்தான் பரதேசிக்குப்பிறகு நிறைய கதைகள் கேட்டு அதில் இரண்டு கதைகளை மட்டுமே ஓகே செய்தேன். ஒன்று இரும்புக்குதிரை, இன்னொன்று ஈட்டி. இந்த படங்களில் மாறுபட்ட அதர்வாவை பார்க்கலாம்.
* ஈட்டி படத்துக்காக நிறைய பயிற்சிகளை நீங்கள் எடுத்ததாக கூறப்படுகிறதே?
இந்த படத்தில் தடகள ஓட்டப்பந்தய வீரராக நடிக்கிறேன். அதனால் ஒரு பயிற்சியாளர் மூலம் ஓட்டப்பந்தயத்தில் எப்படி ஓட வேண்டும். ஒரு தடகள வீரன் எப்படி தனது உடல்கட்டை வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் அறிந்து அதற்கேற்ப என்னை மாற்றியிருக்கிறேன். இந்த படத்தைப்பார்க்கும் ரசிகர்களும் என்னுடன் ஓடிக்கொண்டேயிருப்பார்கள். அந்த அளவுக்கு படத்தின் கதையோட்டமும் விறுவிறுப்பாக அமைந்திருக்கிறது. படத்தை இயக்கி வரும் ரவிஅரசு ஒவ்வொரு காட்சியையும் அந்த அளவுக்கு நேர்த்தியாக செதுக்கியிருக்கிறார். அதனால் இந்த படம் என்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதாக அமையும். இன்னும் சொல்லப்போனால் அடுத்த சூர்யா என்கிற அளவுக்கு எனது லெவலை இப்படம் மாற்றும் என்று நூறு சதவிகிதம் நம்புகிறேன்.
* இப்படத்தில் உங்களுடன் ஜோடி சேர்ந்துள்ள ஊதா கலரு ரிப்பன் ஸ்ரீதிவ்யாவுடன் கெமிஸ்ட்ரி எந்த அளவுக்கு ஒர்க்அவுட்டாகியுள்ளது?
ஸ்ரீதிவ்யா நல்ல நடிகை. எப்போதுமே எனர்ஜியுடன் துறுதுறுவென்றிருப்பார். அதனால் நானும் அவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் ரொமாண்டிக் மட்டுமின்றி ஜாலியாகவும் இருக்கும். காரணம், எங்களுக்கிடையே காதல் மட்டுமின்றி காமெடியையும் பற்ற வைத்து போட்டிருக்கிறார் இயக்குனர். அதனால் முதன்முறையாக கதாநாயகியுடனும் காமெடி காட்சியில் நடித்திருக்கிறேன். சாதாரணமாக பேசும்போதே காமெடியாக நாங்கள் பேசிக்கொள்வதால் நடிக்கிறபோது அது இன்னும் நன்றாக ஒர்க்அவுட்டானது. அதனால், ஈட்டி படம் எனது பல முகங்களை காட்டும் விதத்தில் அமைந்திருக்கிறது.
* படப்பிடிப்பு தளத்துக்கு வருவதற்கு முன்பு ஹோம் ஒர்க் செய்யும் வழக்கம் உண்டா?
எனது முதல் படமான பாணா காத்தாடியில் இருந்தே இதை கடைபிடிக்கிறேன். ஒவ்வொரு படத்தின் கதையையும் கேட்டதுமே, அது எனக்கு எந்த அளவுக்கு செட்டாகும் என்பதை மைண்டில் ஏற்றி வீட்டில் இருந்தபடியே நடித்துப்பார்ப்பேன். அதில் என்னால் இயக்குனர்கள் எதிர்பார்க்கிற நடிப்பை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்ட பிறகே ஏற்றுக்கொள்வேன். அதோடு நிறுத்தாமல், முன்பே ஹோம் ஒர்க்கில் இறங்கி விடுவேன். நாளைக்கு படப்பிடிப்பு என்றால் இன்றே ரிகர்சல் பார்த்துக்கொள்வேன். அப்படி செய்வதால் படப்பிடிப்பில் எளிதாக நடித்து விட முடிகிறது. நிறைய டேக் வாங்காமல் ஓரிரு டேக்கிலேயே ஓகே செய்து விடலாம். இதற்கெல்லாம் மேலாக அந்தந்த கதாபாத்திரத்திற்கேற்ப எனது பாடி லாங்குவேஜையும் சில மாதங்களாக தயார் செய்வேன். அதனால்தான் எனது ஒரு படத்துக்கும் அடுத்த படத்திற்குமிடையே அதிக காலஅவகாசம் ஏற்படுகிறது.
* இப்படி செய்வதால் உங்களுக்கும், ரசிகர்களுக்குமான இடைவெளி அதிகமாகுமல்லவா?
இதற்கு முக்கிய காரணம், எண்ணிக்கையில் குறைவான படங்களாக கொடுத்தாலும், தரமான படங்களாக கொடுக்க வேண்டும் என்ற ஆசைதான். ஆனபோதும், வருடத்துக்கு இரண்டு படமாவது கொடுத்து விட வேண்டும் என்ற முயற்சியில் இப்போது இறங்கியிருக்கிறேன். பாலாவின் பரதேசிக்காக வருடக்கணக்கில் எடுத்துக்கொண்டேன். ஆனால் அதற்கு நல்ல பலனே கிடைத்தது. அதனால் இப்போது இரும்புக்குதிரையை முடித்ததுமே, ஈட்டியில் இறங்கிவிட்டேன். இந்த படத்தை முடித்ததும் அதற்கடுத்த படத்தில் நடிப்பேன். இப்படி ஒவ்வொரு ஆறு மாதத்துக்கும் ஒரு படத்தை முடித்துக்கொண்டேயிருப்பேன். ஆக, ஒன்றன்பின் ஒன்றாக படங்கள் திரைக்கு வந்து கொண்டேயிருக்கும்.
* ஜனனி அய்யருடன் ஒரு படத்தில்கூட நடிக்காதபோதும் காதல் கிசுகிசுவில் சிக்கிக்கொண்டது எப்படி?
ஒரு விழாவில் அவரை எதேச்சையாக சந்தித்தேன். பாலா சார் இயக்கியிருந்த அவன் இவன் படத்தில் அவர் நடித்திருந்ததால், அதையடுத்து பரதேசியில் நான் நடிப்பதை அறிந்து அதுபற்றி விசாரித்துக்கொண்டிருந்தார். அப்படித்தான் எங்களுக்கு நட்பு ஏற்பட்டது. ஆனால், அது நாங்கள் சந்தித்துக்கொண்டது சினிமா விழாவாக இருந்ததால், அங்கு வந்த மீடியாக்கள் நாங்கள் சிரித்து பேசிக்கொண்டதாக காதலாக சித்தரித்து விட்டார்கள். அதனால் இப்போது எந்த நடிகையுடனும் வெளி இடங்களில் நான் அதிக பேச்சு வைத்துக்கொள்வதில்லை.
* பரதேசிக்குப்பிறகு அதர்வா சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி விட்டதாக கோலிவுட்டில் ஒரு புகார் உள்ளதே?
என் தந்தையும் ஒரு நடிகர் என்பதால். நான் சினிமா தெரியாதவன் அல்ல. சில படங்களில் மட்டுமே நடித்திருக்கும் எனக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள. மார்க்கெட் உள்ளது என்பதையும் நான் அறிவேன். அதனால் நான் கடுமையாக சம்பளத்தை உயர்த்தி விட்டதாக வெளியான செய்திகளில் துளியும் உண்மையில்லை. இதுவரை நான் நடித்த அனைத்து படங்களுக்கும் தயாரிப்பாளர்களாக முடிவு செய்த சம்பளத்தைத்தான் வாங்கிக்கொண்டு வருகிறேன். இந்த அளவுக்கு சம்பளம் கொடுத்தால்தான் நடிப்பேன் என்று கெடுபுடி செய்கிற அளவுக்கு நான் ஒன்றும் பெரிய நடிகர் இல்லை. அதேசமயம் வித்தியாசமான கதைகளில்தான் நடிப்பேன் என்பதில் கெடுபிடி செய்கிறேன். சாதாரணமாக வழக்கமான காதல் கதைகளில் நடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
* மல்டி ஹீரோ கதைகளில் நடிக்கும் ஆர்வம் உள்ளதா?
இப்போதுதான் என் பயணத்தை தொடங்கியிருக்கிறேன். இன்னும் அதர்வா இந்த மாதிரியான நடிகர் என்கிற ஒரு அங்கீகாரமே எனக்கு கிடைக்கவில்லை. அதனால் என்னை ஒரு நடிகராக நிலைநிறுத்திக்கொள்ளும் வரை நான் தனி ஹீரோவாக நடிக்கவே விரும்புகிறேன். அப்படி என்னை நிரூபிக்கும்போதுதான் அதர்வாவை எந்த மாதிரியான கதாபாத்திரங்களுக்கு யூஸ் பண்ணலாம் என்பதை டைரக்டர்களாக தீர்மானிக்க முடியும். அதனால் எனக்கென ஒரு பாணியை உருவாக்கும் முயற்சியில்தான் இப்போது ஈடுபட்டிருக்கிறேன்.
* தற்போது ஆக்ஷன் கதைகளுக்கே நீங்கள் முதலிடம் கொடுப்பதாக கூறப்படுகிறதே?
எனது உயரமும், உருவமும் ஆக்சன் ஹீரோ கதைகளுக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும். அதனால்தான் பாடிலாங்குவேஜ்க்கு பொருந்தக்கூடிய ஆக்சன் கதைளுக்கு முதலிடம் கொடுக்கிறேன். மேலும், மரத்தை சுற்றி டூயட் பாடும் கதைகளாக நடித்தால், ப்ளேபாய் ஹீரோ என்கிற முத்திரை விழுந்து விடும். பின்னர் அந்த வட்டத்தில் இருந்து வெளியேற ரொம்ப கஷ்டப்பட வேண்டும். அதனால்தான் ஆரம்பத்திலேயே ஆக்சன் இமேஜ்க்கு மாறி விட்டால் ஹீரோ அந்தஸ்ம் உயரும், மார்க்கெட்டும் உயரும் என்பதால் அந்த பாதையில் பயணிக்கிறேன். அதோடு, இப்போதைக்கு தமிழ் சினிமாதான் எனது முதல் இலக்கு என்றாலும் எதிர்காலத்தில் தென்னிந்திய முழுக்க பரவலாக நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் எனக்குள் உள்ளது.
* வாரிசு நடிகர்களுக்கு சினிமாவில் எந்த அளவுக்கு ஆதரவு கிடைக்கிறது?
எந்த தந்தை செய்த தொழில் என்பதால் நானும் இதற்கு வந்திருக்கிறேன். காரணம், எனக்கு சினிமாவைப்பற்றி நன்றாக தெரியும். ஆனபோதும், வாரிசு நடிகர் என்பதால் தனிப்படட முறையில் எந்த ஆதரவும் கிடைப்பதில்லை. நடிக்கிற படங்களின் வெற்றிதான் நமக்கான ஆதரவை பெற்றுத்தருகிறது. அதனால் சினிமா வாரிசோ, இல்லை வெளியில் இருந்து வந்தவரோ யாராக இருந்தாலும் வெற்றி ஒன்றே சினிமா உலகில் எதிர்காலத்தை முடிவு செய்யும். மற்றபடி வாரிசு நடிகர்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த ஆதரவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்கிறார் அதர்வா.