ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவின் 2013ம் ஆண்டு பல மவுன புரட்சிகளையும், அதிர்வுகளையும் உண்டாக்கிச் சென்றிருக்கிறது. அதில் முக்கியமானது சினிமா ஜாம்பவான்களுக்கு தோல்விகளை பரிசாக கொடுத்து அதிர்ச்சி அடைய வைத்தது. அடுத்த மாற்றம் புதிய, திறமையான இளைஞர்களை அள்ளி அணைத்துக் கொண்டது. மணிரத்னம், பாரதிராஜா, அமீர், போன்ற ஜாம்பவான்கள் மண்ணை கவ்விக்கொண்டிருந்த நேரத்தில் இளம் ரத்தங்கள் சாதனை சரித்திரம் படைத்தனர். அவற்றை பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம்.
ஜி.என்.ஆர்.குமரவேலன் (ஹரிதாஸ்)
பழம்பெரும் இயக்குனர் ஜி.என்.ரங்கராஜனின் மகன் குமரவேலன். பிரகாஷ்ராஜின் சினிமா பட்டறையில் பயின்றவர். நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி என இதற்கு முன் சில படங்களை இயக்கியிருந்தாலும். கமர்ஷியல் சினிமாவில் இருந்து விலகி தன் முகவரியை அழுத்தமாக ஹரிதாஸில் பதித்தார். ஆட்டிசம் பாதித்த ஒரு சிறுவனின் வாழ்க்கையை அவனது போலீஸ் தந்தையுடன் இணைத்து கொடுத்தார். ஆடிசம் சிறுவனின் வாழ்க்கை ஆர்ட்பிலிமாகும் வாய்ப்பிருந்தும் அதனை ஆக்ஷன் கதையாக சொன்ன விதத்தில் ஆச்சயர்மூட்டியவர். கார்பரேட் சினிமாக்களின் சத்ததில் ஹரிதாஸின் குரல் கேட்காமலே போய்விட்டதுதான் சோகம்.
நலன் குமாரசாமி (சூது கவ்வும்)
இப்படியும் கதை எழுத முடியுமா? இப்படியும் திரைக்கதை அமைக்க முடியுமா? என்று மொத்த சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்த படம். நலன் குமாரசாமி என்ற 28 வயது இளைஞனின் முத்திரை படைப்பு. ஆள்கடத்தல் தொடர்பான வழக்கமான கதைதான். அதை சொன்ன விதத்திலும், கற்பனையான ஹீரோயின் கேரக்டரை நுழைத்த விதத்திலும் சினிமாவை வித்தியாசப்படுத்தியவர். 2013ம் ஆண்டில் சிறிய பட்ஜெட்டில உருவாகி பெரிய லாபம் சம்பாதித்த படம்.
நவீன் (மூடர்கூடம்)
ஒரு வீடு அதற்குள் பத்து பேர் இதை வைத்துக் கொண்டு காமெடியாக ஒரு த்ரில்லர் செய்ய முடியுமா. அதோடு நாட்டுக்கு தேவையான சில நல்ல கருத்தையும் சொல்ல முடியமா? என்று மூடர்கூடம் ரிலீசுக்கு முன்பு யாரிடம் கேட்டாலும் அது சாத்தியமில்லை என்றுதான் சொல்வார்கள். அதனை சாத்தியப்படுத்தியவர் நவீன். மீடியாக்களால் பெரிதும் பாராட்டப்பட்ட படம் மக்கள் பார்த்து பாராட்டும் முன்பே தியேட்டர்காரர்கள் பெட்டியை எடுத்து வெளியே வைத்து விட்டார்கள்.
ஆர்.எஸ்.துரை சந்திரசேகர் (எதிர்நீச்சல்)
கே.பாலச்சந்தரின் எதிர்நீச்சல் மாடிப்படி மாதுவாக இருந்த ஒரு சாதுவான இளைஞன் படிப்பால் சாதித்த கதை. மணிமாறனின் எதிர்நீச்சல் தாழ்வு மனப்பாண்மையால் தவித்த ஒரு இளைஞன் விளையாட்டால் உயர்ந்த கதை. "மனிதனுக்கு வைக்கப்படும் பெயர் ஒரு அடையாள குறியீடு அல்ல. அவனுக்காக முதல் தகுதியும் முகவரியும் அதுதான்" என்று சொன்ன படம்.
ராம் (தங்க மீன்கள்)
ராம் இந்த பட்டியலில் வரும் இளைஞரும் அல்ல, சினிமாவுக்கு புதியவரும் அல்ல. ஆனாலும் இந்த பட்டியலில் அவரது தங்க மீன்களை சேர்க்காவிட்டால் அது குறையாகவே இருக்கும். கற்றது தமிழ் படத்துக்கு பிறகு அவருக்கு சினிமாவில் பெரும் போராட்டம்தான். காரணம் கற்றது தமிழ் நல்ல படம் என்று பெயரெடுத்தாலும் ஒடவில்லை. அதனால் ராமின் கால்கள் சினிமாவில் ஓடவில்லை. ஒரு வழியாக கவுதம் மேனன் உதவியால் தமிழ் சினிமாக்களுக்கு தங்க மீன்களை அள்ளித் தந்தார். இன்றைய கல்வி சூழலின் கருப்பு பக்கங்களை துணிச்சலுடன் சொல்லி தந்தைக்கும் மகளுக்குமான உறவை நுணுக்கமாக சொன்ன படம்.
கே.எஸ்.மணிகண்டன் (கண்ணா லட்டு தின்ன ஆசையா)
பாக்யராஜின் இன்று போய் நாளை வா படத்தின் ரீமேக்தான் என்றாலும் அதன் மைய கருவை மட்டும் எடுத்துக் கொண்டு புதிய டிராக்கில் கதை சொல்லி அந்தப் படத்தைவிட அதிகம் சிரிக்க வைத்து சில்லறையையும் அள்ளிய படம். மணி கண்டனுக்கு நிறைய மணியையும் கொடுத்த படம்
பொன்ராம் (வருத்தப்படாத வாலிபர் சங்கம்)
கதை, லாஜிக், அப்படியெல்லாம் எதுவும் இல்லாமல் தியேட்டருக்குள் வந்தவர்களை வயிறு வலிக்க வலிக்க சிரிக்க வைத்து அனுப்பியதன் மூலம் பொன்ராம் சினிமாவின் பார்முக்குள் வந்துவிட்டார்.
ஆர்.எஸ்.பிரசன்னா (கல்யாண சமையல் சாதம்)
ஒரு சின்ன சமாச்சாரத்தை பெரிய சமாச்சாரமாக்கி இரண்டு மணி நேர படமாக எடுத்து ஆண்களை வாய்விட்டும், பெண்களை ரகசியமாகவும் சிரிக்க வைத்த படத்தை கொடுத்தவர்.
ஷாஹித் காதர் (சென்னையில் ஒரு நாள்)
டிராபிக் என்ற மலையாள படத்தின் ரீமேக்தான் என்றாலும் முதல் படத்திலேயே ஏகப்பட்ட நட்சத்திரங்களை இயக்கி மூலப் படத்தைவிட கமர்ஷியலாகவும், பிரமாண்டமாவும் கொடுத்தவர்.
அல்போன்ஸ் புத்திரன் (நேரம்)
ஒரு தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் க்ரைம் திரில்லரை பரபரவென தந்தவர். முழு படத்தையும் கிளைமாக்ஸ் விறுவிறுப்போடு கொண்டு சென்றவர்.
முத்தையா (குட்டிப்புலி)
கிராமத்து பின்னணியில் மண்வாசனையுடன் ஒரு ஆக்ஷன் படம் தந்தவர். விமர்சகர்களின் திட்டுக்களை வாங்கி கட்டிக் கொண்டாலும் கலெக்ஷெனையும் அள்ளிக் கட்டிக்கொண்ட படத்தை கொடுத்தவர்.