மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
45 வருட சினிமா கலைஞரான பாலுமகேந்திரா தற்போது இயக்கியுள்ள படம் தலைமுறைகள். இயக்குனர் சசிகுமாரின் கம்பெனி புரொடக்சன்ஸ் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. பாலுமகேந்திராவின் கதை நேரம் தொடரில் நடித்த சசிகுமார் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும், வினோதினி, ரம்யா ஷங்கர், மாஸ்டர் கார்த்திக் உள்பட பலர் நடித்துள்ள இப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தாத்தா வேடத்தில் பாலுமகேந்திரா நடித்திருக்கிறார். இயக்குனர் சசிகுமார் ஒரேயொரு காட்சியில் மட்டுமே நடித்திருக்கிறாராம்.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி அளவில் சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டுடியோ தியேட்டரில் நடைபெற்றது. அப்போது படத்தைப்பற்றி பாலுமகேந்திரா பேசுகையில், இதுவரை பிலிமில் மட்டுமே படமெடுத்து வந்த நான் இந்த படத்தில் முதன்முறையாக டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கு மாறியிருக்கிறேன். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறேன்.
அதிகம் ஆங்கிலம் தெரிந்து, கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசும் பேரனுக்கும், ஆங்கிலத்தில் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே தெரிந்த தாத்தாவுக்குமிடையே நடக்கும் கதை இது. கலாசாரம் மற்றும் தொழில்நுட்பத்தில் யாருக்கும் நாம் குறைந்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் படம் இது. முக்கியமாக, நமது படைப்புகளைப்பார்த்து அயல்நாட்டுக்காரர்கள் வாய்பிழந்து நிற்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் எடுக்கப்பட்ட படம் என்று சொன்ன பாலுமகேந்திரா, இந்த இடத்தில் இளையராஜாவை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றார்.
நான் கேமராமேனாக பணியாற்றிய வந்தநேரம், ஒரு இசையமைப்பாளரிடத்தில் உதவியாளராக இருந்தார் இளையராஜா. அப்போதே ஒவ்வொரு விசயங்களைப்பற்றியும் துருவி துருவி கேட்பார். அவரிடத்தில் எனது 3வது படமான மூடுபனிக்காகத்தான் இசையமைக்கச்சென்றேன். அது அவரது 100வது படமாகும். அப்போது இணைந்த நாங்கள் இன்று தலைமுறைகள் படம் வரை இணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
இதற்கு காரணம் அவரது ஆழமான உயிரோட்டமான இசைதான். மெளனங்களை புரிந்து கொள்ள முடியாதவர்களால் வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியாது. அந்த வகையில், என் மெளனத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ற இசையை கொடுங்கள் என்று மட்டும்தான் அவரைக்கேட்டேன். அதை புரிந்து கொண்ட அவர், இன்றுவரை என் படங்களைப்பார்த்து அற்புதமான இசையை கொடுத்து வருகிறார்.
அந்த வகையில், என் படங்களில் இளையராஜா ஒரு அங்கமாக இருந்து வருகிறார். அதனால்தான் வேறு இசையமைப்பாளரை நாடினால் என்ன? என்று சிலர் கேட்டபோது அதற்கு நான் செவிசாய்க்கவில்லை. இதுவரை எனது படங்களுககு இளையராஜாதான் இசையமைத்து வருகிறார். இனிமேலும் அவர் மட்டுமே என் படங்களுக்கு இசையமைப்பார் என்று உறுதியாக சொல்லிவிட்டேன் என்கிறார் பாலுமகேந்திரா.