மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
பிரபல கர்நாடக இசை கலைஞரும், தமிழில், சுட்டும் விழி சுடரே... வசீகரா... போன்ற சில சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருப்பவரும், ஆஸ்கர் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்ட ஒரே இந்திய பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீ, 44வது கோவா சர்வதேச திரைப்பட விழாவில், சினிமாவில் இசை என்பது பற்றி மாஸ்டர் கிளாஸ் என்ற நிகழ்ச்சியில் பேசினார். இசைப்பிரியர்களின் அரங்கம் நிறைந்த நிகழ்ச்சியாக இது இருந்தது. அவர் பேசியதிலிருந்து இதோ...
* பாம்பே ஜெயஸ்ரீ என்ற பெயர் எப்படி வந்தது?
பொதுவாக கர்நாடக இசை கலைஞர்கள் தங்கள் ஊர் அல்லது குடும்பத்தின் பெயரை தங்கள் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்வது வழக்கம். கோல்கட்டாவில் நான் பிறந்தாலும், பம்பாயில் தான் வளர்ந்தேன். என் பெற்றோர்கள் தான் எனக்கு முதல் குரு. பிறகு பாலா மணி என்பவரிடமும், சென்னைக்கு வந்து வயலின் மேதை லால்குடி ஜெயராமனிடமும் இசை பயின்றேன். லால்குடி ஜெயராமன் பிரபல வயலின் வித்துவானாக இருந்தாலும், நன்றாக பாடுவார். இசைக் கருவிகள் வாசிக்கும் கலைஞர்கள் நிறைய பேர் நன்றாக வாய்ப்பாட்டும் பாடுவார்கள். நான் பம்பாயிலிருந்து சென்னைக்கு இசை கற்றுக் கொள்ள வந்தவள். ஒரு விமர்சகர் என்னை பாம்பே ஜெயஸ்ரீ என்று குறிப்பிட்டு எழுதினார். பின்னாளில் அந்த பெயரே நிலைத்து விட்டது.
* திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு எப்படி வந்தது?
இளையராஜா சார் தான் எனக்கு படங்களில் பாடும் வாய்ப்பு முதலில் கொடுத்தார். அவர் ஒரு ஜீனியஸ். பல்கலைக்கழகம் என்றே சொல்லலாம். அவ்வளவு ஞானம். எப்படி வார்த்தையை அழுத்தமாக பாடவேண்டும், எப்படி உணர்வு கொண்டு வர வேண்டும், பாடும்போது எப்படி மூச்சுவிட வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தார். வியட்நாம் காலனி என்ற படத்தில் கையில் வீணையை ஏந்தும் கலைவாணியே... என்ற பாடல். பிஹாக் ராகத்தில் அமைந்த பாட்டு. படத்தின் ஆரம்பத்தில் டைட்டீலில் வரும்போது அந்தபாட்டு வரும். அந்தப்பாட்டு பெரிய ஹிட் ஆகவில்லை.
சென்னைக்கு வருவதற்கு முன்பு, பம்பாயில் பள்ளி, கல்லூரி மாணவியாக பல விளம்பர பாடல்கள்(ரேடியோ, டி.வி.,) பாடியிருக்கிறேன். இருபது வினாடிகள் மட்டுமே வரும் பாடல்கள். ரெக்ஸோனா, பாண்ட்ஸ், ட்ரீம்ப்ளவர் டால்கம் பவுடர் போன்ற விளம்பரங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம் போன்ற பல மொழிகளில் பாடியிருக்கிறேன். மொழிக்கு மொழி தனித்தன்மை உண்டு. அவற்றை அறிந்து கொண்டேன். நிகழ்ச்சியின் போது அந்த விளம்பர பாடல்களை பாடியும் காண்பித்தார்.
* ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வசீகரா பாடல் பாடியது பற்றி?
ஹாரிஸ் ரொம்ப ஹாப்பி மியூசியன். மின்னலே படத்தில் முதன்முறையாக நான், ஹாரிஸ், தாமரை மூவரும் ஒன்று இணைந்தோம். பிறகு மீண்டும் கஜினி படத்தில் சுட்டு விழிச் சுடரே... என்ற பாடலை பாடும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு பாடல்களும் பெரிய அளவில் ஹிட் ஆகி பாப்புலராகிவிட்டன.
* லைப் ஆப் பை படத்தில் பாடியது பற்றி?
16 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு மகன் பிறந்தான். அவனுக்கு என் அம்மா, பாட்டி பாடிய மற்றும் நிறைய சினிமா பாடல்கள் எல்லாம் பாடி தாலாட்டு பாடுவேன். ஒரு நண்பரின் தூண்டுதலின் பேரில் வாத்ஸல்யம் என்ற ஆல்பம் பண்ணினேன். தாய், குழந்தை இடையே உள்ள பிணைப்பு பாசம் தான் அந்த ஆல்பம். மற்றொரு நண்பர் மூலமாக டைரக்டர் ஆங்லீ-யின் தொடர்பு கிடைத்தது. உலகப் புகழ் பெற்ற இயக்குனர் ஆங்லீ படத்தின் கதையையும், பாட்டின் பின்னணியையும், பின்னர் பை வளர்ந்த பிறகு தனியாக கடலில் இருக்கும்போது தாய் பாசத்தை உணர்த்த வேண்டும் என்பதையும் விளக்கினார். நான் எழுதிய அந்த தாலாட்டு பாடலை பாடினேன். ஆங்லீக்கு பரிபூரண மகிழ்ச்சி.பாடலை பம்பாயில் ரெக்கார்டிங் செய்தார். லாஸ் ஏஞ்சல் நகரிலும் அந்த பணி தொடர்ந்தது. லைப் ஆப் படத்தை ஆமதாபாத்தில் சென்று பார்த்தபோது எனக்கு அழுகையே வந்துவிட்டது. இயக்குநர் ஆங்லீ, கனடாவை சேர்ந்த இசை அமைப்பாளர் மைக்கேல் டானா, சென்னையை சேர்ந்த நான், எங்களின் மூவரது காம்பினேஷன் நன்றாக ஒர்க்-அவுட்டானது. ஆங்லீக்கு தமிழ் புரியாவிட்டாலும் எனது குரல் எந்த இடத்தில் சாப்ட்டாக இருந்தது, எங்கு லவுடாக இருந்தது என்பதில் மிகவும் தெளிவாக இருந்தார்.
* நீங்கள் பாடிய அந்தப்பாடல் ஆஸ்கர் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டபோது எப்படி இருந்தது?
என்னால் முதலில் நம்ப முடியவில்லை. டி.வி.யில் செய்தியை கேட்டதும் அவ்வளவு மகிழ்ச்சி. ஆஸ்கர் பரிசளிப்பு விழாவிற்கு சென்றது மறக்க முடியாத அனுபவம். சிறந்த பாடல், சிறந்த பாடகிக்கான பரிசு வேறு ஒருவருக்கு அறிவிக்கப்பட்டபோது மூன்று விநாடிகள் மட்டுமே வருத்தமாக இருந்தது. பின்னர் அந்த எண்ணம் மாறி, இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்ப்பாடல் ஒன்று ஆஸ்கருக்கு சிபாரிசு செய்யப்பட்டு கெளரவத்தை கொண்டு வர முடிந்தது என்று எண்ணியபோது மிகவும் பெருமையாக இருந்தது. ஆங்லீ, மைக்கேல் டானா இருவருக்கும் மனமார நன்றிகளை கூறிக் கொள்கிறேன் என்றார்.
பாம்பே ஜெயஸ்ரீ, விரைவில் வெளிவர இருக்கும் யான் படத்திலும் மற்றும் புதிய இந்தி படத்திலும் பாடியிருக்கிறார். பதினெட்டு திரைப்பட பாடல்கள் மட்டுமே அவர் பாடியிருந்தாலும், அவற்றில் பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் பாம்பே ஜெயஸ்ரீ பேசும்போது மைக் மற்றும் ஸ்பீக்கர்கள் சரியாக இல்லாததால் பார்வையாளர்களுக்கு அதிக இரைச்சலையும், சத்தத்தையும் கொடுத்தது. இதனால் அரங்கில் சிறிது சலசலப்பு நிலவியது.
- கோவாவிலிருந்து எஸ்.ரஜத் -