‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பெற்றோருடன் செல்ல, சினிமா இயக்குனர் சேரன் மகள் தாமினி, விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, தாமினி, "மேஜர் என்பதால், அவரது விருப்பப்படி செல்வதற்கு, சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்தது.
சினிமா இயக்குனர் சேரனின் இளைய மகள் தாமினி, சென்னையைச் சேர்ந்த சந்துரு என்பவரை காதலித்தார். காதலனுடன் சேர்ந்து கொண்டு, தந்தை சேரனுக்கு எதிராக, சென்னை, போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, "சந்துரு உடன் அனுப்பினால், என் மகளின் உயிருக்கு ஆபத்து; அவளை காப்பாற்றுங்கள் என, போலீசில், சேரன் புகார் கொடுத்தார். இதனால், சென்னை, மயிலாப்பூரில் உள்ள, பெண்கள் காப்பகத்துக்கு, தாமினி அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து, ஐகோர்ட்டில், சந்துருவின் தாயார் ஈஸ்வரி, "ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். "தாமினியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அவரை விடுவிக்க வேண்டும் என, மனுவில் கோரப்பட்டது. அதைத்தொடர்ந்து, தாமினியை, நீதிபதிகள் தனபாலன், சி.டி.செல்வம் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச் முன், ஆஜர்படுத்தினர்.
சென்னை, தி.நகரில் உள்ள, வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் தாளாளரான, பி.கே.கே.பிள்ளையின் பொறுப்பில், தாமினி இருக்க, ஐகோர்ட் இடைக்கால உத்தரவிட்டது. இவ்வழக்கு, நீதிபதிகள் தனபாலன், சி.டி.செல்வம் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. காலை, 11:00 மணியளவில், பி.கே.கே.பிள்ளை உடன், தாமினி வந்தார். கோர்ட் ஹாலுக்கு வெளியில், சேரன், அவரது மனைவி இருந்தனர். இயக்குனர்கள் அமீர் உள்ளிட்டோரும் இருந்தனர். அவர்களுடன் தாமினி சிரித்து பேசி கொண்டிருந்தார்.
பின், வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் முன், தாமினி ஆஜரானார். மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் சங்கரசுப்பு, சேரன் தரப்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், ஆஜராகினர். தாமினியை அருகில் அழைத்து, நீதிபதிகள் விசாரித்தனர். பின், பெற்றோருடன் செல்ல, தாமினி விருப்பம் தெரிவித்திருப்பதாக, நீதிபதிகள் கூறினர்.
வழக்கறிஞர் சங்கரசுப்பு: இரண்டு வாரம், சட்டவிரோத காவலில், தாமினி இருந்துள்ளார். சினிமா துறையினரை அனுப்பி, தாமினியை மூளை சலவை செய்துள்ளனர்.
நீதிபதிகள்: அனைவரிடமும் கேட்ட பின் தான், தலைமை ஆசிரியை வசம், தாமினி அனுப்பி வைக்கப்பட்டார். இதை, எப்படி சட்டவிரோத காவல் என, கூறுகிறீர்கள்? அவர், ஒரு "மேஜர். பெற்றோருடன் செல்ல, அவர் விரும்புவதை, எப்படி தடுக்க முடியும்?
சங்கரசுப்பு: குழப்பத்தில் தாமினி உள்ளார். முதலில், சந்துரு குடும்பத்தினருடன் செல்வதாக கூறினார். இப்போது, அவர் மாறுவதற்கு என்ன காரணம்? அவரை, மனநல நிபுணர்கள் குழுவின், சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
நீதிபதிகள்: தாமினிக்கு திருமணம் ஆகவில்லை. பெற்றோருடன் போக விருப்பம் தெரிவித்துள்ளார்.
மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ: மாமியார் என, தவறான மனுவை, மனுதாரர் தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து, ஈஸ்வரி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவில், "இரண்டு வாரங்களில், தாமினியை, சேரன் தரப்பினர் சித்ரவதை செய்துள்ளனர். அவரை, நிம்மதியாக தூங்க விடவில்லை. சுதந்திரமாக, தாமினி, தனது கருத்தை வெளிப்படுத்தவில்லை; சேரன் கூறியபடி, அவர் கோர்ட்டில் கூறியுள்ளார். உண்மை நிலையை அறிய, மனநல மருத்துவர்கள் அடங்கிய குழு, தாமினியை பரிசோதிக்க வேண்டும் என, கூறப்பட்டது.
இம்மனு மீது, பிற்பகலில் விசாரணை நடந்தது. "தாமினி, "மேஜர் ஆக இருப்பதால், அவரது விருப்பப்படி செல்ல, அவருக்கு சுதந்திரம் உள்ளது என, "டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. இதையடுத்து, கோர்ட்டை விட்டு, பெற்றோருடன் தாமினி வெளியே வந்தார். தாயாருடன், காரில் தாமினி சென்றார்.
அவர்களை வழி அனுப்பி விட்டு வந்த சேரன், நிருபர்களிடம் கூறியதாவது: என் மகள் தாமினிக்கு எதிரான மனு, தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பெற்றோருடன் செல்ல, அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். உண்மை நிலையை அறிந்து, சந்துருவின் சுயரூபம் தெரிந்து, தான் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு, நல்ல மன நிலையில், சுய உணர்வுடன், இந்த முடிவை எடுத்துள்ளார். எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்த, அனைவருக்கும் நன்றி. இது, எனக்கு கிடைத்த வெற்றி அல்ல; ஒவ்வொரு பெற்றோருக்கும், பெண்களுக்கும் கிடைத்த வெற்றி. இவ்வாறு, சேரன் கூறினார்.
பின், அனைவரையும் பார்த்து கை கூப்பி கும்பிட்ட சேரன், அப்படியே தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து, கும்பிட்டார். வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், இயக்குனர்கள் சூழ, கோர்ட்டில் இருந்து காரில் சேரன் புறப்பட்டார். கோர்ட்டில், சினிமா துறையினரின் கூட்டம் பெருமளவு காணப்பட்டது.