டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிறந்தது காரைக்குடி. மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர். வாசிப்பை நேசிக்கும் இவர், பத்திரிகையாளராக பயணித்து, சினிமாவில் சங்கமித்தவர். வழக்கமான காதலியை துரத்தி காதலிக்கும் கதைகளை புறந்தள்ளி, திருமணமான பின் மனைவியை காதலிக்கும் கதாநாயகன் பற்றிய மென்மையான கதையை "பார்த்திபன் கனவு மூலம் தந்து, திரையுலக இயக்குனர் பிரவேசத்தை துவக்கியவர் கரு.பழனியப்பன். சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திரப்புன்னகை, சதுரங்கம் படங்களின் இயக்குனர். நடிகர் அவதாரம் வேறு. மதுரையில் அவர் மனம் திறந்ததிலிருந்து...,
* தமிழ் திரையுலகில் புதிய இயக்குனர்கள் வென்று கொண்டு இருக்கிறார்களே...
புதிய இயக்குனர்களின் வெற்றியால், மேலும் பலர் புதிதாக வர முடிகிறது. ஏற்கனவே இருப்பவர்கள், மேலும் சிந்திக்கத் துவங்குவதும், புதியவர்களின் வெற்றியில்தான்.
* கேரளாவில் இலக்கியங்கள், நாவல்களை படமாக்குகின்றனர். தமிழில் அதற்கான முயற்சி இல்லையே?
தமிழ் சினிமாவில், தங்களை இலக்கியவாதிகளாக காட்டிக்கொள்ளவே, எழுத்தாளர்களை பயன்படுத்துகின்றனர். மலையாளத்தில் இலக்கியத்திற்கு எழுதுவதற்கு மட்டுமின்றி, திரை எழுத்தாளர்கள் என தனித்து இயங்குகின்றனர். எழுதுவது வேறு; சினிமாவிற்கு எழுதுவது வேறு. இங்கு வசனகர்த்தாக்களை எழுத்தாளர்கள் என்கின்றனர். பஞ்சு அருணாசலம் போன்ற வெற்றி, தோல்விகளை அறிந்த திரை எழுத்தாளர்கள் தமிழ் சினிமாவிற்கு தேவை.
* மேற்குவங்கம், கேரளாவில் மக்களுக்கான சினிமா இயக்கம் மூலம் வெகுஜனங்களிடம் கொண்டு செல்கின்றனர். தமிழில் ஏன் அச்சூழல் உருவாகவில்லை?
அங்கு சினிமா மீதான நெருக்கத்திற்கு காரணம், சினிமாவை எப்படி பார்ப்பது என கற்றுக் கொடுத்துள்ளனர். இங்கு, தற்போதுதான் சினிமா கல்லூரிகளில் பாடமாக வந்துள்ளது. அதுபோல் பள்ளிகளிலும் பாடமாக வரவேண்டும். கற்றுக் கொடுத்தால்தான், மக்கள் சினிமா சாத்தியப்படும். இங்கு, மக்கள் விரும்பு வதைத்தான் கொடுப்பதாக கூறுகின்றனர். மக்கள் அனைத்தையும் ஏற்கத்தயாராகிவிட்டனர். நல்ல சினிமாவிற்கான வழி, தொடர்ந்து நல்ல படங்களை தயாரிப்பதுதான்.
* காதலை மட்டுமே மையப்படுத்தும் தமிழ் சினிமா, அதிலிருந்து மீளாதா? சமகால பிரச்னைகளை கண்டுகொள்வதில்லையே?
எனக்கு காதல்தான் தெரியும். எனக்குத் தெரிந்ததை படமாக்குகின்றேன். காதலைத்தான் படமாக்க வேண்டும் என யாரும், யாரையும் நிர்ப்பந்திக்கவில்லை. மணல் திருட்டால் ஆறுகள் மலடாகிவிட்டன. இதுபோல் பல பிரச்னைகளை அறிந்தவர்கள், அக்கறை உள்ளவர்கள் அதையே படமாக்கலாமே!
* வாசிப்பை நேசிக்கும் நீங்கள் எழுதுவதுண்டா? எழுத்து, சினிமா இடையே உள்ள வேறுபாட்டை எப்படி உணர்கிறீர்கள்?
நல்ல கவிதைகளை படித்த பின், கவிதை எழுதுவதை நிறுத்தியவன் நான். எழுத்துக்கு பெரிய அடர்த்தி, சிந்தனை, மொழி தேவை. எழுத்து படிக்கும் வாசகனை எந்த உயரத்திற்கும் எடுத்துச் செல்லும். எழுத்தாளனுக்கும், வாசகனுக்கும் நடுவில் கற்பனை மிச்சம் இருக்கும். எழுத்தாளனின் கற்பனையை கூட்டியோ, குறைத்துக்கொள்ளவோ வாசகனுக்கு இடமுண்டு.
சினிமாவில், படைப்பாளியின் கற்பனையே ரசிகனின் கற்பனை. படைப்பாளியின் சிந்தனையே ரசிகனின் சிந்தனை. சினிமாவில் கற்பனை, சிந்தனைக்கு ரசிகர்களுக்கு இடமில்லை.
* சினிமாவில் சமரசம் செய்ய அதிகம் நிர்ப்பந்திக்கப்படுவதாக, உங்களைப்போன்ற படைப்பாளிகள் அடிக்கடி கூறுகின்றனரே?
வாழ்க்கையே சமரசம்தான். ஏதாவது ஒரு இடத்தில் வாழும் நாம், சூழலுக்கு ஏற்ப சமரசம் செய்து கொள்கிறோம். தோல்வி ஏற்படும்போது, சமரசம் செய்துகொண்டேன் எனக்கூறக் கூடாது.
* படைப்பாளிகளின் சுதந்திரத்தில், தணிக்கைக்குழு தலையிடுகிறதா?
நாட்டில் ஆட்சிமுறை தவறு என படம் எடுத்து, அதை தணிக்கைக்குழு தடை செய்கிறது என ஆர்ப்பாட்டம் செய்தால் நியாயம். அரைகுறை ஆபாசங்களை படமாக்கிவிட்டு, அதை தணிக்கைக்குழு அங்கீகரிக்கவில்லை எனக்கூறினால், இதில் என்ன நியாயம் உள்ளது? புரியவில்லை.
* தமிழ் சினிமா, உலகத்தரம் எட்டுவது எப்போது?
உலகத்தரம் என்பது ஐ.எஸ்.ஓ.,போன்று தர நிர்ணயம் கிடையாது. தங்கத்திற்கு 916 என தர நிர்ணயம் வைத்துள்ளனர். சினிமாவை எதை வைத்து அளவிடுவது? அளவுகோல் கிடையாது. உலக சினிமா என்பது, உலகம் முழுவதும் பார்ப்பது என வைத்துக்கொண்டால், உள்ளூர் சினிமாவே உலக சினிமா.
நான் "ஆரியபவன் சாம்பாரைக் கட்டி, அமெரிக்கா கொண்டுசெல்ல மாட்டேன். என் ஆத்தா இடிக்கிற பொடியைத்தான் கொண்டு செல்வேன். உள்ளூர் பிரச்னை, உள்ளூர் மக்களின் வாழ்வியல் பிரச்னைகளை படமாக்கினால், அதுதான் உலக சினிமா.
* "மந்திரப்புன்னகையில் நடிகர் அவதாரம் எடுக்க காரணம்?
அதில், கதாநாயகன் எதிர்மறை குணம் கொண்டவன். கதாநாயகனாக இருப்பவர்கள், நிராகரித்தால் என்ன செய்வது என சிந்தித்தேன். நானே கதாநாயகனாக நடித்தேன்.
* அடுத்து நடிப்பா? இயக்கமா?
பார்த்திபன், விமல் நடிப்பில் "ஜன்னலோரம் இயக்குகிறேன். மலைகிராம பின்னணியில் இனிய, எளிய பொழுதுபோக்கு படம். அமல்ராஜ் இயக்கத்தில் "மிஸ்டர் அண்டு மிசஸ் கல்யாணம் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறேன். திருமணமான தம்பதி மத்தியில் எழும் விரிசல், ஊடல்கள் பற்றியது.
இவ்வாறு அவர் கூறினார்.
இவருடனான கருத்தாக்கத்திற்கு www.karupalaniappan.com