ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி இன்று(17.04.13) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 92. மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.
1922ம் ஆண்டு திருச்சியில் பிறந்த ராமமூர்த்தி இயல்பாகவே இசை குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரது அப்பா கிருஷ்ணசுவாமியும், தாத்தா மலைக்கோட்டை கோவிந்தசாமியும் பிரபல வயலின் கலைஞர்கள். தனது அப்பா மற்றும் தாத்தாவை போலவே ராமமூர்த்தியும் வயலின் கலைஞராக தனது இசையுலக பயணத்தை தொடங்கினர். சிறுவயதிலேயே பல்வேறு மேடை கச்சேரிகளில் வயலின் கச்சேரிகள் நடத்தியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் எஸ்.பி.வெங்கட்ராமன் தான் ராமமூர்த்தியை சினிமாவிற்கு கொண்டு வந்தார். பின்னர் சி.ஆர்.சுப்புராமன் ஆகியோருடன் பணியாற்றியவர் பிறகு விஸ்வநாதனுடன் இணைந்து பணியாற்ற தொடங்கினார்.
இவர்களது இருவரும் இணைந்து பணியாற்றிய பெரும்பாலான படங்கள் சூப்பர்-டூப்பர் ஹிட்டாகின. மெல்லிசை மன்னர்கள் என பெயர் பெற்ற விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் இணைந்து 700-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளனர். 1964-ம் ஆண்டு, எம்.ஜி.ஆரின், ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பிறகு இருவரும் பிரிந்தனர். விஸ்வநாதன் தனியாகவும், ராமமூர்த்தி தனியாகவும் இசையமைக்க தொடங்கினர்.
ராமமூர்த்தி தனியாக கிட்டத்தட்ட 19 படங்களுக்கு படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் தனியாக இசையமைத்த சாது மிரண்டால், தேன் மழை, மறக்க முடியுமா, நான், தங்கச் சுரங்கம், காதல் ஜோதி, ஆலயம், சோப்பு சீப்பு கண்ணாடி, சங்கமம் ஆகிய படங்கள் மிகப்பிரபலம். மிகச்சிறந்த வயலின் இசைக்கலைஞரான இவரது பங்களிப்பில் உருவான எங்கே நிம்மதி என்ற பாடல் நீடித்த புகழைப்பெற்ற பாடலாகும். பின்னர் 29 ஆண்டுகளுக்கு பின்னர் 1995-ம் ஆண்டு எங்கிருந்தோ வந்தான் படத்தில் மீண்டும் விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் இணைந்து பணியாற்றினார்கள். சினிமாவில் வாய்ப்பு குறைந்தபோதும், தொடர்ந்து மேடை கச்சேரிகளில் பங்கேற்று வந்தார் ராமமூர்த்தி. சமீபத்தில் கூட சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
கலை உலக சேவைக்காக தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட 40க்கும் மேற்பட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் ராமமூர்த்தி. மறைந்த ராமமூர்த்திக்கு 4 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் உட்பட 11 வாரிசுகள் உள்ளனர்.
மறைந்த ராமமூர்த்தியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் நாளை(18.04.13) நடைபெறும் என அவரது மகன் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். மறைந்த ராமமூர்த்தியின் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மற்றொரு மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், ராமமூர்த்தியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.