திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ் ஈழம் மலர வலியுறுத்தி முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த போராட்டத்தில் நடிகர்கள் ரஜினி, கமல், அஜீத் போன்ற முன்னணி நடிகர்கள் பங்கேற்றனர்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்தும், இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தியும் சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் துவக்கி வைத்த போராட்டம் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் ஒரு பெரும் புரட்சியாக வெடித்தது. தொடர்ந்து இயக்குனர்கள் சங்கம் சார்பில் டைரக்டர் அமீர் தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இயக்குனர் சங்கத்தை தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற போவதாக அறிவிக்கப்பட்டது. இதில் அனைத்து நடிகர் சங்க உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் சரத்குமார் அழைப்பு விடுத்து இருந்தார்.
அதன்படி, சென்னை அபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கம் வளாகத்தில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது. காலை 9 மணிக்கு ஆரம்பித்த இந்த போராட்டம் மாலை 5 மணி வரை நடந்தது. இந்த போராட்டத்தில் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் தவிர, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட இயக்குனர்கள் சங்கம், பெப்சி அமைப்பு, விநியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம், சின்னத்திரை கலைஞர்கள் சங்கம் மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம், சின்னத்திரை இயக்குனர்கள் சங்கம், பி.ஆர்.ஓ.க்கள் சங்கம் உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.
ரஜினி-கமல் பங்கேற்பு : இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் காலை 11மணிக்கே வந்து கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் மதியம் வரை இருந்தார். நடிகர் கமல்ஹாசன் மாலை 4 மணியளவில் பங்கேற்று உண்ணாவிரத போராட்டம் முடியும் வரை இருந்தார்.
பட பூஜையை தள்ளி வைத்து அஜீத் பங்கேற்பு : பொதுவாக அஜீத் எந்த ஒரு விழாவிலும், போராட்டத்திலும் அவ்வளவாக பங்கேற்க மாட்டார். ஆனால் இந்த உண்ணாவிரத போராட்டம் அறிவித்தவுடன், தனது புதிய பட பூஜையை தள்ளி வைத்து பங்கேற்பதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி இன்றைய உண்ணாவிரதத்தில் காலையிலேயே பங்கேற்றார்.
விஜய் ஆப்செண்ட் : படப்பிடிப்புக்காக விஜய் ஆஸ்திரேலியா சென்றுள்ளதால், அவரால் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. மாறாக அவர் சார்பில் கடிதம் ஒன்று மட்டும் கொடுக்கப்பட்டது.
தமிழர்களுக்கு மறுவாழ்வு மலர வலியுறுத்தல் : போராட்டத்தில் பங்கேற்ற பல திரை நட்சத்திரங்களும், ஈழத் தமிழர்களுக்கு ஒரு விடியல் ஏற்படவும், இலங்கையில் அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படவும் வலியுறுத்தினர். மேலும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று கூறினர்.
தினம் 2 நிமிடம் அஞ்சலி : சமீபத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, மறைந்த நமது அப்பாவி ஈழத் தமிழர்களுக்காக தினம் 2 நிமிடம் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று தமிழக மக்களிடம் வலியுறுத்தப்பட்டது. அதனை தென்னிந்திய நடிகர் சங்கம் நிறைவேற்றும் என்றும், தினம் இரவு 11 மணி முதல் 11.02 வரை 2 நிமிடம் அஞ்சலி செலுத்தப்படும் என்று நடிகர் ராதாரவி தெரிவித்தார்.
7 தீர்மானம் நிறைவேற்றம் : உண்ணாவிரத போராட்டத்தை முடிக்கும் முன் பேசிய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் 1983-முதல் போராட்டம் நடத்தி வருகிறது. அவர்களுக்காக எப்பவும் குரல் கொடுத்து வருகிறது. இன்றைய உண்ணாவிரத போராட்டத்திற்கு வருகை தந்த கலைக் குடும்பத்தை சார்ந்த அனைவருக்கும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சங்கத்தின் சார்பில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவையாவன...
* இலங்கையில் சிங்கள அரசு நடத்திய இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்கள் தவிர, எஞ்சியுள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பான வசதிகள் செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
* இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும்.
* இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்.
* இலங்கை கடற்படையினரால் கொல்லப்படும் அப்பாவி தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு நடிகர் சங்கம் சார்பில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* இலங்கை தமிழர் பிரச்னையில் போராடும் மாணவர்கள், பிற அரசியல் கட்சியினர், தமிழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
* எதிர்காலத்தில் மாணவர்கள் அறவழியில் போராடுங்கள், உயிர்தியாகங்கள் செய்யாதீர்கள் என்று வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த உண்ணாவிரதத்தில் ரஜினி, கமல், அஜித், தனுஷ், சிம்பு, விக்ரம், சூர்யா, கார்த்தி, சிவக்குமார், ஜீவா, விஷால், ஆர்யா, ஜெயம் ரவி, உதயநிதி ஸ்டாலின், விஷ்ணு, சாந்தனு, பரத், கருணாஸ், கணேஷ் வெங்கட்ராம், தமிழ்ப்படம் சிவா, நாசர், பிரபு, விக்ரம் பிரபு, அதர்வா, அர்ஜூன், பாண்டியராஜன், அஜெய் ரத்னம், பெப்சி விஜயன், செந்தில், பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசன், வைரமுத்து, மூத்த நடிகர் வி.எஸ்.ராகவன், எடிட்டர் மோகன், லாரன்ஸ், சிபிராஜ், பிரகாஷ்ராஜ், ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, சந்தான பாரதி, டைரக்டர் அமீர், ரமேஷ் கண்ணா, பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், ராதிகா, லிஸி, த்ரிஷா, லட்சுமி ராய், வரலெட்சுமி சரத்குமார், நமீதா, ரம்யா கிருஷ்ணன், தன்ஷிகா, மோனிகா, தேவயானி, ரேகா, ஊர்வசி, கோவை சரளா, அம்பிகா உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும் பங்கேற்றனர்.
முன்னணி நடிகைகள் பங்கேற்கவில்லை : உண்ணாவிரதத்தில் ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்கள் பலர் பங்கேற்றனர். ஆனால் நடிகைகளை பொறுத்தமட்டில் த்ரிஷா, லட்சுமி ராய், வரலெட்சுமி சரத்குமார், நமீதா, மோனிகா, தன்ஷிகா, கோவை சரளா, ஊர்வசி, அம்பிகா, ராதிகா, லிஸி, பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட ஒரு சில நடிகைகளை தவிர முன்னணி நடிகைகள் யாரும் பங்கேற்கவில்லை.
கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை முடித்து வைத்தனர் : உண்ணாவிரத போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர் தனசேகர் மற்றும் லயோலா கல்லூரி மாணவர் பிரிட்டோ ஆகியோர் நடிகர்களுக்கு பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தனர்.
படப்பிடிப்புகள் ரத்து : நடிகர் சங்க உண்ணாவிரத போராட்டத்தால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
நடிகர் சங்க உண்ணாவிரத வீடியோ : http://cinema.dinamalar.com/tamil_cinema_video.php?id=19237&ta=V