தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி போன்ற படங்களில் நடித்த சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து பிரபலமானார். அதன்பிறகு தெலுங்கு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஹீரோயினாகவே நடித்தார். தற்போது தமிழ்-தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா, தனது திரையுலக அனுபம் குறித்து தினமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...
நான் திரைத்துறைக்கு வந்து கிட்டத்தட்ட 3 வருஷம் தான் ஆகுது. ஆனால், அதற்குள் என்னால் பல நல்ல படங்கள் செய்திருக்கேனு நினைக்கும்போது, சந்தோஷமா இருக்கு. கெளதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு பதிப்பில் நான் த்ரிஷா ரோல் செய்தேன். எல்லாரும் என்னை அப்படி கொண்டாடினார்கள். படம் சூப்பர் ஹிட், அதன்பிறகு தெலுங்கில் நிறைய படங்கள். தமிழில் வந்த நான் ஈ படம் கூட என்னை திரும்பி பார்க்க வைத்தது. ரொம்ப பெருமையாக இருக்கிறது.
* நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நித்யா பற்றி...?
இவ்ளோ சீக்கிரத்தில் எனக்கு நித்யா மாதிரி ரோல் கிடைக்க நான் ரொம்ப கொடுத்து வைத்திருக்கனும், படம் நல்லா போச்சா, போகலயானு எனக்கு கவலை இல்லை. மக்கள் மனசுல உட்கார மாதிரி ரோல் கிடைத்திருக்கு. அதை நான் சரியாக பயன்படுத்தி இருக்கேன் அவ்வளவுதான். இப்படி ஒரு கேரக்டர் கொடுத்ததற்கு கவுதம் சாருக்கு தான் நன்றி சொல்லனும்.
* சொந்த குரலில் பேசிய அனுபவம் பற்றி...?
முதல் முறையாக நீதானே என் பொன்வசந்தம் படத்தில் என் சொந்த குரலில் பேசியிருக்கேன். தமிழை எங்க சரியாக பேசியிருக்கேன், எங்க சரியாக பேசவில்லை என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. கொஞ்ச நாளில் இதை சரி பண்ணிவிடுவேன். இதுகூட ஒரு புது அனுபவம் தான்.
* நீங்க நடித்ததிலேயே உங்களுக்கு பிடித்த ரோல்...?
இந்த 3 வருஷத்தில், இதுவரை 4 தெலுங்கு படம், 3 தமிழ் படத்தில் நடித்துள்ளேன். அதில் பெஸ்ட் ரோல் நித்யா ரோல் தான். இப்படி ஒரு கேரக்டர் எனக்கு இனி திரும்ப கிடைக்காது.
* தாய்மொழியான தமிழை விட தெலுங்கில் அதிகம் நடிப்பது ஏன்...?
நிறைய பேர் இதே கேள்வியை கேட்குறாங்க. நான் முதலில் சினிமாவுக்கு வரும்போது, கதையை சரியா தேர்வு செய்ய முடியல, சொன்னதை செய்தேன். மாஸ்கோவின் காவிரி, பாணா காத்தாடி ரெண்டு படமும் தோல்வி தான். சரியா போகல, ஆனால் இப்ப கதைகள் கேட்டு எனக்கு பிடிச்சிருந்தா மட்டும் தான் பண்ணுவேன். இப்ப எனக்கு சாய்ஸ் நிறைய இருக்கு. மேலும் தெலுங்கில் எனக்கு நல்ல வரவேற்பு இருக்கு. பெரிய பெரிய படங்கள் கிடைக்குது. அப்படி இருக்கும்போது அதைவிட்டுவிட்டு ஏங்க இங்க வரணும். தமிழ்ல எனக்கு நல்ல நல்ல கதைகள் வந்தால் கண்டிப்பாக நான் இங்க நிறைய படங்கள் பண்ணுவேன். தமிழ்மொழி எனக்கு சொந்த மொழி, எனக்கும் தமிழ்ல நிறைய படங்கள் பண்ணனும் என்று ஆசை இருக்கு.
* கவுதம் மேனன் படத்தில் நடித்த அனுபவம் பற்றி...?
கவுதம் சார் படத்தில் நடித்தது எனக்கு இப்ப மிகப்பெரிய பலமா, அனுபவமா இருக்கு. அவர் கொடுத்த டயலாக், ஸ்கிரிப்ட் எல்லாமே படிக்கும் போதே அவ்ளோ ஈஸியா நம்ம கண் முன்னாடி வந்து நிற்கும். அவர் நம்மள தயார்படுத்தும் விதம் அவ்ளோ அருமை, அந்த யூனிபார்ம் போட்ட உடனே அந்த டயலாக் அந்த நித்யா கேரக்டருக்கு அப்படியே மாறிப்போயிடுவேன்.
* உங்க லைப்ல வருண் மாதிரி கேரக்டர் இருந்திருக்காங்களா, லவ் ஏதுவும் இருந்ததா...?
இல்லை என்று நிச்சயமாக பொய் சொல்ல மாட்டேன். ஸ்கூல் படிக்கும் போது அப்படி ஏதும் கிடையாது. காலேஜ் படிக்கும் போது எனக்கும் லவ் இருந்தது உண்மை. அதனால் தான் படத்தில் அப்படி ஒரு யதார்த்தம் இருந்தது.
* ஒரே படத்துக்காக ஜீவா-நானி இவர்களுடன் நடித்த அனுபவம் பற்றி...?
நானி கூட ஏற்கனவே நான் ஈ படத்தில் நடித்திருக்கேன். ஜீவா கூட இந்தபடத்தில் தான் சேர்ந்தேன். நீதானே என் பொன்வசந்தம் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் எடுத்தாங்க. தமிழில் ஜீவா, தெலுங்கில் நானி. ஷூட்டிங் அப்ப ரெண்டு பேர் கூடவும் மாறி மாறி நடிக்க வேண்டும். சீரியஸா நடிக்க வேண்டிய இடத்தில் ஜீவா காமெடி பண்ணி சிரிக்க வச்சிடுவார். ஷூட்டிங் ஸ்பாட்டை எப்பவும் கலகலனு வச்சிருப்பார் ஜீவா. ஆனால், நானி அப்படியே ரொம்ப அமைதியான ஆளு.
* இந்திக்கு போகும் எண்ணம் உண்டா...?
இந்தியில் எனக்கு ஆர்வம் இல்லை. என் சொந்த மொழி தமிழ், அதில் பேசி நடிக்கும்போது ஒரு திருப்தி இருக்கும். அதுவே தெரியாத மொழியில் நடிக்கும் போது அந்த திருப்தி இருக்காது. இப்ப எனக்கு தெலுங்கு நல்லா பேச தெரியும். அதனால் என்னால் புரிஞ்சு நடிக்க முடியுது. மற்றபடி இந்தியில் இருக்கும் ஆர்ட்ஸ்ட்டுகளை பார்த்து பயம் எல்லாம் கிடையாது. நீதானே என் பொன்வசந்தம் படத்தை இந்தியில் ஒரு ஷெட்யூல் எடுத்தாரு கவுதம். அதன்பிறகு என்ன ஆச்சு, எப்ப எடுக்க போறார் என்று எனக்கு தெரியாது.
* உங்களுக்கு ஏதோ வியாதி என்று செய்தி வந்ததே...?
எனக்கு தோல் வியாதி என்று ஒரு வதந்தியை கிளப்பிவிட்டார்கள். உண்மை என்னன்னா, லோ இம்யூனிட்டி(நோய் எதிர்ப்புசக்தி) காரணமா 2மாதம் ஓய்வில் இருந்தேன். அப்புறம் சரியானவுடன் படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். இந்த சமயத்தில் தான் மணி சார் படம், ஷங்கர் சார் படம் எல்லாம் வந்தது. நான் மிஸ் பண்ணிட்டேன். நிச்சயம் மறுபடியும் அவங்க படங்களில் நடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
* உங்களுக்கு போட்டியாக யாரை நினைக்கிறீர்கள்...?
எனக்கு ஆர்ட்டிஸ்ட் நம்பர்-1, நம்பர்-2 என்பதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுப்படங்கள் வரும் போகும். மேலும் சக நடிகைகளின் படங்களை பறிப்பதும், அவர்களுடன் போட்டி போடுவதையும் நான் ஒருபோதும் விரும்பமாட்டேன். எனக்கு நான் மட்டுமே போட்டியாக இருப்பேன். எனக்கு வரும் படங்கள் என்னைத் தேடி வரும்.
* யார் உடன் நடிக்க ஆசை...?
இந்த நடிகர் உடன் நடிக்கணும், அந்த நடிகர் உடன் நடிக்கணும் என்ற ஆசையெல்லாம் எனக்கு கிடையாது. நல்ல கதை, வித்தியாசமா சிந்திக்கும் இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடிக் விரும்புகிறேன்.
* பார்ட்டிக்கு எல்லாம் போகும் பழக்கம் உண்டா...?
என்னோட தனிப்பட்ட விஷயங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டேன். நான் உண்டு, என் வேலை உண்டு என்று இருப்பேன். வெளிப்பழக்கம் அதிகம் கிடையாது. அதனால் யாரும் என்னை தொடர்பு கொள்ள முடியாது. எனவே பார்ட்டி போன்றவற்றில் இருந்து கொஞ்சம் ஒதுங்கியே இருப்பேன்.
* எதிர்வரும் படங்கள் பற்றி...?
இப்ப தெலுங்கில் 6 படங்கள் பண்ணிட்டு இருக்கேன். தமிழில் பெரிய படங்கள் 2-ல் கமிட்டாகியுள்ளேன்.
2012-ல் கொஞ்சம் படங்கள் செய்தேன். 2013-ல் இன்னும் நிறைய படங்களில் நடிக்க எண்ணியுள்ளேன். கூடவே இந்த வருஷம் சமூக சேவையிலும் என்னை இணைத்துக் கொள்ளவும், முடிந்தவரை பிறருக்கு உதவி செய்யும் எண்ணத்திலும் இருக்கேன். ரசிகர்கள் மனசில் எப்பவும் நான் இருப்பேன் என்கிறார் நம்பிக்கையோடு சமந்தா.