ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கனடா நாட்டு இயக்குனர் பிலிப் பிளார்டியு இயக்கியுள்ள நான்காவது படம் மான்ஸியூர் லஹர் என்ற பிரெஞ்சு மொழிப்படம். எவிலின் டிலா செனேலியர் என்ற பெண் எழுத்தாளர் எழுதிய மேடை நாடகத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நமது ஊர்களில் விஜய் டி.வி.யில் 7 சி என்ற ஒரு தொடர் வருகிறது அல்லவா. அதேபோன்ற கதை தான் இப்படமும். அந்த தொடரில் எல்லா மாணவ மாணவியரும் தங்கள் ரோல் மாடலாக கருதும் ஸ்டாலின் என்ற ஆசிரியரின் மறுபதிப்பு இந்தபடத்தில் ஆசிரியராக வரும் மிஸ்டர் லஹர். (இப்படத்திற்கு இன்னொரு பெயரும் கூட)
அல்ஜிரீயா நாட்டில் இருந்து கனடா நாட்டுக்கு அகதியாக வரும் லஹர், மான்ட்ரியால் நகரில் உள்ள ஒரு ஆரம்ப பள்ளியின் ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்து கொள்ள அந்த இடத்திற்கு தற்காலிகமாக ஆசிரியராக வந்து சேர்கிறார். தன் வகுப்பில் உள்ள மாணவ மாணவியரை அணுகும் முறை, பாடம் சொல்லிக்கொடுக்கும் திறன், மற்றவர்களுடன் பழகும் திறன் உள்ளிட்டவைகள் இவரை அனைவருக்கும் பிடித்த நபராக்கிவிடுகிறது. இவருக்கு முன் இருந்த ஆசிரியை வகுப்பு அறையிலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு படிக்கும் சில மாணவர்களை பாதிக்கிறது. அதை போக்க லஹர் முயற்சி எடுக்கிறார்.
இதற்கிடையே கனடா நாட்டில் நிரந்தரமாக தங்க லஹருக்கு கனடா அரசு அனுமதி அளிக்கிறது. ஆனால் பள்ளி நிர்வாக குழுவின் தலைவி, முன்னாள் ஆசிரியை தற்கொலை பற்றி மாணவர்களிடம் விவாதித்து, அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டதாக சொல்லி, லஹரை வேலையை விட்டு போக சொல்கிறார். தனது பணியின் கடைசிநாளில் கூட மாணவர்களுக்கு உற்சாகத்தோடு பாடங்கள் நடத்திவிட்டு ஏன் போகிறேன் என்ற காரணத்தை சொல்லாமல் பள்ளியை விட்டு விடைபெறுகிறார்.
ஆசிரியர் லஹராக நடித்து மாணவர்கள் இடையே உற்சாகம், தன்னம்பிக்கை, படிப்பில் ஆர்வம் என நல்லாசிரியராகவே நடித்திருந்தார் முகமது பெல்லாக். தன்னை வேலையிலிருந்து போகச் செல்லும் நிர்வாக குழு தலைவியிடம் தன் மீது எந்த தவறும் இல்லை என்று அமைதியாக அவர் எடுத்து சொல்லும் காட்சி நம்மையே உருகச் செய்கிறது.
2011ம் ஆண்டில் டொரொண்டோ சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த திரைப்படம் என்ற விருதும், 2012ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளர்கள் விருதும் பெற்றது. அதுமட்டுமின்றி 2012ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கும் சிபாரிசு செய்யப்பட்டது.
லஹர் மறக்கமுடியாத நல்லாசிரியர்!
கோவாவிலிருந்து -எஸ்.ரஜத்-