Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

சென்னையில் ஒரு நாள்

சென்னையில் ஒரு நாள்,chennaiyil oru naal
  • சென்னையில் ஒரு நாள்
  • பிரகாஷ் ராஜ்
  • ராதிகா சரத்குமார்
  • இயக்குனர்: சையத்
09 ஏப், 2013 - 17:50 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » சென்னையில் ஒரு நாள்

    

தினமலர் விமர்சனம்



சில வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் மூளைச்சாவு அடைந்த இ‌தயேந்திரன் எனும் இளைஞனின் இதயத்தை, சிறுமி அபிராமிக்கு பொருத்தி, அச்சிறு‌மியை உயிர் பிழைக்க செய்த சென்னையில் நிஜமான சாதனை கதை தான் "சென்னையில் ஒரு நாள்" மொத்தபடமும்! சரத்குமார், பிரகாஷ்ராஜ், ‌பிரசன்னா, சச்சின், ஜெயபிரகாஷ், சந்தானபாரதி, ராதிகா சரத்குமார், பார்வதி, இனியா, மல்லிகா, லட்சுமி ராமகிருஷ்ணன், அக்ஷ்ரா, காப்பிரில்லா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பது "சென்னையில் ஒரு நாள்" படத்தின் பெரும் பலம்!

ஜெபி-லட்சுமி ராமகிருஷ்ணன் ஜோடியின் வாரிசு கார்த்திக் எனும் சச்சின். டி.வி.சேனல் நிருபராகி நிறையவே சாதிக்க வேண்டும் எனும் கனவில் இருக்கிறார். அவரது லட்சியப்படியே ஒருநாள் டி.வி. நிருபராகும் சச்சின், முதல்நாளே பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ்ஜை லைவ் பேட்டி எடுக்கும் வாய்ப்பை பெறுகிறார். அதற்காக நிறைய ஹோம் ஒர்க்குகளுடன் நண்பனின் பைக்கில் பேட்டி எடுக்க கிளம்புகிறார். வழியில் விபத்தில் சிக்கும் சச்சினுக்கு, மூளைச்சாவு ஏற்படுகிறது. உயிர் இருந்தும் பிரதேமாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சச்சினின் இதயத்தை, வேலூரில் உயிருக்கு போராடும் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் - ராதிகா தம்பதிகளின் மகளுக்கு பொருத்துவதற்கு திட்டமிடுகின்றனர் மருத்துவர்கள்! முதலில் அதற்கு மறுக்கும் சச்சினின் பெற்றோர் பிறகு ஒருவழியாக மனதை தேற்றிக் கொண்டு சம்மதம் தெரிவிக்கின்றனர்.

சென்னை ஒய்.எம்.ஆரில் இருக்கும் அந்த பிரபல மருத்துவமனையில் இருந்து வேலூர் மருத்துவமனைக்கு 170 கிலோ மீட்டர் தூரம். அந்த தூரத்தை ஒன்றரை மணி ‌நேரத்தில் கடந்தாக வேண்டும். அப்பொழுதுதான் சிறுமிக்கு மாற்று இதயத்தை பொருத்தி அவரை உயிர் பிழைக்க செய்ய முடியும் எனும் நிலை! நகரத்திற்குள் நெரிசலான போக்குவத்து, நெடுஞ்சாலைகளில் சீறும் வாகனங்கள்... சிக்னல்கள், சிக்கல்கள் இதையெல்லாம் தாண்டி, சவாலை எதிர்கொள்ளும் போலீஸ் அதிகாரி சரத்குமார் தலைமையிலான டீம் சாதித்து காட்டியதா...? என்பது, எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!

சென்னை போலீஸ் கமிஷ்னராக சரத்குமார், முதலில் முடியாது முடியாது.... என்று மறுத்தாலும், முடிவில் 170 கி.மீ தூரத்தை ஒன்றரை மணிநேர பிராயாணம் எனும் சவாலுக்கு சம்மதிக்கும் இடத்தில் சபாஷ் போட வைக்கிறார். தன் மீது விழுந்த 15 ஆயிரம் ரூபாய் லஞ்சப்பழியை சமாளித்து அவப்பெயரை துடைக்க, உயிரை துச்சமென மதித்து அந்த சவாலான காரியத்தில் காரோட்டியாக களம் இறங்கும் டிராபிக் கான்ஸ்டபிளை தவிர்த்து, டாக்டராக உடன் வரும் பிரசன்னா, அலட்டல் ஆக்டர் பிரகாஷ்ராஜ், அவரது யதார்த்த மனைவி ராதிகா, கொஞ்ச நேரமே வந்து இறந்து போகும் கார்த்திக்-சச்சின், அவரது காதலி பார்வதி, பிரசன்னாவிற்கு துரோகம் பண்ணும் இனியா, மல்லிகா, கார்த்திக்கின் நண்பர் மித்துன் எனும் அஜ்மல், டாக்டர் விஸ்வநாதன், ஜெயபிரகாஷ், அவரது மனைவி நிர்மலாவாக வரும் லட்சுமி ராமகிருஷ்ணன், எம்.பி.மணிமாறனாக வரும் சந்தான பாரதி உள்ளிட்ட அனைவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

காசு கொடுத்து டிராபிக் கான்ஸ்டபிள் வேலைக்கு வந்தவர் மாதிரி அந்த பாத்திரத்தில் முரண் இயக்குனர் பொருந்தாமல் தெரிவது மைனஸ்! ஆனால் அந்த பலவீனத்தையும் பிரகாஷ்ராஜின் பில்-டப் காட்சிகளும், அவர் யதார்த்தம் புரியாமல் முன்னணி நடிகர் என்ற செல்வாக்கு இருப்பதால் எதையும் சாதிக்க முடியும் என பண்ணும் சேட்டைகளும், முரண் இயக்குனரின் மைனஸ்களை மழுங்கடிக்க செய்து, படத்திற்கு ப்ளஸை கூட்டுகின்றன! அதே மாதிரி நடிகர் எனும் பந்தாவில் மகளின் உயிருக்கு முடியாத உடல் நிலையையும் கருத்தில் கொள்ளாது அலப்பறை பண்ணும் பிரகாஷ்ராஜ்க்கு யதார்த்தத்தை புரிய வைக்கும் ராதிகாவின் நடிப்பு சூப்பர்ப்!

மெஜோ ஜோசப்பின் இனிய இசை, ஹேஹநாத் ஜே.ஜலாலின் அழகிய ஒளிப்பதிவும், மகேஷ் நாராயணின் படத்தொகுப்பு, அஜயன் பாலாவின், "எல்லா நாளும் போல் இல்லாமல் இந்த நாள் சரித்திரமாகும்..." உள்ளிட்ட வசனங்கள் ‌போன்று, மேலும் பல ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன், "சென்னையில் ஒரு நாள்", மலையாள "டிராபிக்" படத்தின் ரீ-மேக் என்பதே தெரியாத விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது. பலே, பலே!

டாக்டர் பிரசன்னா, சச்சினின் இதயத்திற்கு பாதுகாப்பாக காரில் போகும்போது, அவரது மனைவிக்கு விபத்து என்று கமிஷனர் சரத் கூறுவதும், அதை பிரசன்னா தவறாக புரிந்து கொண்டு போலீஸ்க்கு பயந்து, துடிக்கும் இதயத்துடன் காரை கடத்துவதும், என்னதான் இண்டர்வெல் சஸ்பென்ஸ் பிரேக் என்றாலும் டிராமாவாக தெரிகிறது. அதேமாதிரி காருக்கு வழிவிடச் சொல்லி கெஸ்ட் ரோலில் நடிகர் சூர்யா நடிகராகவே வருவது, அதுவரை படத்தில் பிரபல ஸ்டாராகவே வரும் பிரகாஷ்ராஜ் என்ன பவர்ஸ்டாரா...? எனக் ‌கேட்க வைக்கிறது! இதுமாதிரி ஒரு சில குறைகளை தவிர்த்து விட்டு பார்த்தால் ஷஹித் காதரின் இயக்கத்தில், "சென்னையில் ஒரு நாள்", "சிறப்பான ஒரு நாள்!"


----------------------------------------------------------

கல்கி சினி விமர்சனம்


மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய “டிராஃபிக்’, தமிழுக்கு வந்திருக்கிறது. பிரபல நடிகர் கௌதம் கிருஷ்ணா (பிரகாஷ்ராஜ்) மகளுக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய அவசரம். அதற்கான இதயம் சென்னையில் இருந்து வேலூர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் ஹெலிகாப்டர் வசதிகள் இல்லாததால், சாலைவழியாக எல்லா டிராஃபிக் பிரச்னைகளையும் மீறி இதயம் எடுத்துச் செல்ல முடிவு செய்யப்படுகிறது. இதயத்தை சென்னை டு வேலூர் எடுத்துச் செல்லும் போது ஏற்படும் பரபரப்புகள்தான் சீட் நுனியில் உட்கார வைக்கின்றன. மாநகரப் போக்குவரத்து கமிஷனர் தலைமையில், இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்து முடிவதுதான் கதை.

இந்த மையச் சரடை ஒட்டி, அதில் சம்பந்தப்படுபவர்களின் பல அடுக்குக் கதைகள்; உணர்ச்சிப்போராட்டங்கள்; சுயதரிசனங்கள். ஒவ்வொரு பாத்திரமும் செதுக்கப்பட்டிருக்கும் நேர்த்தி, புத்திசாலித்தனமான திரைக்கதைக்கு மேலும் வலுவூட்டுகிறது. நடிகர்கள் ஒவ்வொருவரும் அதற்கு இன்னும் மெருகூட்டுகின்றனர். பிரகாஷ்ராஜ்-ராதிகா, ஜெயபிரகாஷ்-லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பிரசன்னா-இனியா, சரத்குமார் என்று எல்லோருமே கதைக்கு என்ன தேவையோ, அந்த அளவு மட்டுமே நடித்து, வளம் சேர்த்துள்ளனர். தனிப்பட்ட ஹீரோ என்று எவரும் முன்னிலைப்படுத்தப்படவில்லை. திரைக்கதைதான் ஹீரோ.

புது அறிமுகம் சச்சின், மனத்தை ஈர்க்க, பூ பார்வதிக்கு வித்தியாசமான பாத்திரம், கடைசியாக, நடிகர் சூர்யா தோன்றி, உறுப்புதானத்தின் பெருமையை வலியுறுத்துவது நல்ல டிவிஸ்ட். கதைக்குப் பெருமை சேர்க்கும் நல்ல உத்தி. தொய்வு ஏற்படுத்தாத எடிட்டிங்கும், வேகத்தைக் கூட்டும் கேமராவும்தான் கதைக்கு பக்கபலங்கள். “நீங்க முடியாதுன்னு சொன்னா, இதுவும் மற்றொரு நாளா முடிஞ்சு போயிடும். நீங்க சொல்ற ஒரு ஆமாம், இதே நாளை வரலாறு ஆக்கும்,’ போன்ற அழுத்தமான அஜயன்பாலா வசனங்கள், படத்துக்கு முதுகெலும்பு.

இதயம் கண்டிப்பாக வேலூர் போய்ச் சேர்ந்து விடும் என்று ரசிகர்களுக்குத் தெரிந்தாலும், அதை ஒட்டி ஏற்படும் பரபரப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் கூட்டிக் கொண்டே செல்வதுதான் டைரக்டரின் சாமர்த்தியம். இலக்கை அடைந்தவுடன் ஏற்படும் ஒருவித நிம்மதி, சமநிலை அனைத்தையும் படத்தின் இறுதிக் காட்சிகள் மௌனமாகவே சொல்வது கவிதை.

சென்னையில் ஒரு நாள் - கண்டிப்பாக பார்க்கலாம்!



வாசகர் கருத்து (12)

zenith brabagaran - chennai,இந்தியா
19 ஏப், 2013 - 12:26 Report Abuse
zenith brabagaran சமூக அக்கறை உள்ள படத்தில் ஒரு கள்ள காதலை கண்டிப்பாக தவிர்த்து இருக்கலாம். சென்னையில் இருந்து கார் புறப்பட்டபின் காரும் வேகமாக செல்லவில்லை காட்சியும் செல்லவில்லை. சென்னை கமிஷ்னர் சொல்லித்தான் தெரிகிறது காரின் வேகம். போலீசின் கட்டுப்பாட்டை விட்டு கார் சென்றதும் ஒரு fm நேயர் மூலமாக fm ஸ்டேஷன் மூலமாக போலீஸ்க்கு தெரியபடுத்தி இருக்கலாம். இனியாவின் விபத்து எதார்த்த விபத்தாகவும், அதை இனியவே பிரசன்னா செல்லும் வேலை நிமிர்த்தம் அவருக்கு தகவல் சொல்லாததை போலவும், இறுதியில் பிரசன்னா ஒரு உயிரை காப்பாற்றும் போது தன் மனைவி உயிர் விடுவது போலவும் அமைத்து இருக்கலாம். நாங்கள் பார்த்த நிகழ்ச்சியை அப்படியே சொல்லி இருகிறீர்கள் அவ்வளவு தான். எதார்த்தமாக பார்க்க சென்றால் ரசிக்கலாம், எதிர் பார்த்து சென்றால் ஏமாற்றம் தான் . . .
Rate this:
bharani - sivagangai,இந்தியா
13 ஏப், 2013 - 08:52 Report Abuse
bharani படத்துல காமெடி இல்லாத குறையை சூர்யா போக்கிட்டாரு.சூப்பர்
Rate this:
KKsamy - Jurong,சிங்கப்பூர்
06 ஏப், 2013 - 07:28 Report Abuse
KKsamy படத்தில் எல்லாமே பேத்தல்கள். பெரிய புரட்சி கதையை எடுப்பதாக நினைத்து கோட்டைவிட்டு உறுப்பு தானத்தை ஊக்குவிப்பதாக கதை அமைத்து அதில் வரும் அதிகார அரசியல்வாதிகளின் தலையீடுகளை கவனிக்க தவறி இருக்கிறார்கள். ஒரு புகழ் பெற்ற நடிகனுக்காக அரசு இயந்திரங்கள் எவ்வளவு மேனகடுகின்றன. இதையே ஒரு ஏழைக்கு செய்ய முடியுமா? அதே ரோட்டில் முதல்வரோ பிரதமரோ பயணம் செய்தால் பல மணி நேரம் சாலைகளை மூடும் காவல்துறை 1 அரை மணி நேரம் நிறுத்துவதை பெரும் சவாலாக சித்தரிப்பது நெருடல். சமீபத்தில் ஹெலிகோப்டேரில் சென்ற முதல்வருக்காக திருச்சியில் சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
Rate this:
karthick - Madurai,இந்தியா
05 ஏப், 2013 - 09:29 Report Abuse
karthick படம் நல்ல இருந்தது ஆனால் கிளைமாக்ஸ் மட்டும் சரி இல்ல..... அந்த டிராபிக் போலீஸ் க்கு ஏதாவது அவார்ட் கொடுத்த மாதிரி mudichu irunthu irukkalaam........
Rate this:
Mohamed Fayaz - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05 ஏப், 2013 - 08:08 Report Abuse
Mohamed Fayaz மலையாளம் டிராபிக் சூப்பர் , இந்த படம் மனதில் ஒட்டவில்லையே
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in