தினமலர் விமர்சனம் » நான்காம் பிறை
தினமலர் விமர்சனம்
இதுநாள் வரை ஹாலிவுட் படங்களிலேயே மனித இரத்தம் குடிக்கும் டிராகுலா எனும் ஓநாய் பேய்களை கண்டு வந்த தமிழ் ரசிகர்களுக்கு, முதன்முதலாக தமிழில் ஒரு டிராகுலா பேய் படம்! விக்ரம் நடித்து வெளிவந்த "காசி" உள்ளிட்ட தமிழ்படங்களை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் வினயனின் வித்தியாசமும், விறுவிறுப்புமான இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 3டி படம்தான் "நான்காம் பிறை!"
கதைப்படி, ருமேனியா நாட்டிற்கு, தனது ரகசிய டிராகுலா ஆராய்ச்சிக்காவும், கூடவே தன் புதுமனைவியுடனான ஹனிமூனுக்காவும் செல்லும் ராய் எனும் இளைஞனின் உடம்பில் உட்புகுந்து கொள்ளுகிறான் டிராகுலா இனத்தின் தலைவன்! இந்தியாவில் ஒரு புகழ்பெற்ற ஆன்மிகம் கம் மாந்திரீகவாதி வீட்டில் மறுபிறப்பு எடுத்திருக்கும் தன் காதல் இளவரசியை, ராய் உருவத்தின் மூலம் அடைந்து, அவளையும் கழுத்தோரம் கடித்து, டிராகுலா பேயாக்கி, தங்களது டிராகுலா உலகத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென்பது டிராகுலா தலைவனின் திட்டம். இதற்காக ராயின் புது மனைவியில் தொடங்கி டிராகுலா இளவரசியின் அக்கா, அப்பா உள்ளிட்ட இன்னும் பலரையும் படிப்படியாக தீர்த்து கட்டும் டிராகுலா தலைவன் அலைஸ் ராயின் திட்டத்தை புரிந்து அதை முறியடிக்க முயற்சிக்கின்றனர் டிராகுலாவின் காதல் இளவரசியின் இப்பிறவி காதலன் புதுமுகம் ஆர்யன், டிராகுலா சைன்டிஸ்ட் பிரபு, மாந்திரீகவாதி நாசர் மற்றும் இளம் போலீஸ் அதிகாரி உள்ளிட்டோர்...! இறுதி வெற்றி யாருக்கு...? என்பது க்ளைமாக்ஸ்!!
டிராகுலா வேடத்தில் ராய் எனும் கேரக்டரிலும், டிசோசா எனும் பேராசிரியர் ரோலிலும் மாறி மாறி நடிகர் சுதிர் நம்மை பயமுறுத்தி இருக்கிறார் பலே, பலே!
டிராகுலாவின் காதல் இளவரசி மோனல் கஜாரும், அவரது அழகிய அக்காவாக வந்து டிராகுலாவால் கொல்லப்படும் ஷரத்தா தாஸூம் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். 3டியில் இருந்த இருவரது அங்க அவையங்களும் நம் கண்களுக்கு நேரடி பிரமாண்டத்தையும், பிரமிப்பையும் தருவது படத்தின் பெரும்பலம்!
டிராகுலா சைன்டீஸ் பிரபு, ஆன்மிகம் கம் மாந்திரீகவாதி நாசர், டிராகுலா புகழ்பாடும் வயதான டிராகுலா திலகன், மோனல் கஜ்ஜாரின் காதலன் புதுமுகம் ஆர்யன், பிரியா, ஸ்வேதா உள்ளிட்டோரும் படத்திற்கும் தாங்கள் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கும் பலம் சேர்த்திருக்கின்றனர்.
காமெடி போலீஸ் கஞ்சா கருப்பு "கடிக்கிறார். பிரபு, நாசர் தவிர்த்து பெரும்பாலும் மாலையாள நட்சத்திர முகங்களே தெரிவது குறையாகிவிடக்கூடாது என்பதற்காக இவரது காமெடி "ஓ... சாரி கடியையும் விலிய திணித்திருப்பதை இயக்குனர் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்!
சதீஷ்பாபுவின் ஒளிப்பதிவும், பிபத் ஜார்ஜின் பின்னணி இசையும் ரசிகர்களை மேலும் பயமுறுத்துவது படத்தின் பலம்! பாடல் காட்சிகள் நச் என்று இருந்தாலும் ஹாரர் படத்தில் பாட்டு - டூயட்டெல்லாம் தேவையா? எனக் கேட்க தோன்றுகிறது. சி.ஜி., கலர் கரைக்ஷ்ன் மற்றும் கிராபிக்ஸ் வேலைகளில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் "நான்காம் பிறை நம்பக்கூடிய பிறையாக இருந்திருக்கும்!
வினயனின் எழுத்திலும், இயக்கத்திலும் இன்னும் நிறைய எதிர்பார்த்தோம் என்றாலும்
"நான்காம் பிறை", தமிழ் டிராகுலா ஹாரர் கதைகளுக்கான "வளர் பிறை"----------------------------------------------------
குமுதம் விமர்சனம்
ருமேனியா தேசத்தில் பாதாள அறையில் அடைபட்டுக் கிடக்கும் ரத்தம் குடிக்கும் டிராகுலாவை, இந்திய மந்திரங்கள் வெளியேற்றி, காலி செய்யும் கதைதான் “நான்காம் பிறை’.
விக்ரமை வைத்து “காசி’ - படம் தந்த வினயன் படத்தை இயக்கியிருக்கிறார். “டிராகுலா’ படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது என்று இரண்டு முறை கார்டு போடுவது நேர்மை. (மற்ற டைரக்டர்களும் இதை ஃபாலோ பண்ணுங்கப்பா!) மலையாளத்தில் படத்தை எடுத்த முடித்துவிட்டு, தமிழுக்காகக் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்!
பிரபு, நாஸரைத் தவிர படத்தில் எல்லோருமே அன்னியமாக இருக்கிறார்கள்.
மந்திர தந்திரங்களில் கைதேர்ந்த நாஸரின் சீடன் ஹனிமூனுக்காக ருமேனியா செல்லும் போது, டிராகுலா கோட்டைக்கும் செல்கிறான். அங்கே தன் மந்திரத்தை வைத்து, டிராகுலாவை எழுப்பு, அது அவனையும், அவன் மனைவியையும் பழி வாங்கிவிட்டு, அவனது உடலில் புகுந்து கொண்டு பழைய காதலியைத் தேடி இந்தியா வருகிறது. கடைசியில் பிரபு (சந்திரமுகி ரஜினி கேரக்டரை நினைவு படுத்துகிறார்) அண்ட் கோ டிராகுலாவை வீழ்த்துவதுடன் படம் முடிகிறது.
பேய்ப் படம் என்றாலே, வீட்டு வேலைக்காரியைக் கூட கோரமாகக் காட்டி, பின்னணி இசையை அதிரவைத்து பயமுறுத்தாமல், இயல்பாக எடுத்திருப்பதற்காக வினயனைப் பாராட்டலாம்.
வாய்ப்பிருந்தும் காட்சிகளைக் கொடூரமாகக் காட்டாமல், ரத்த ஆறு ஓடாமல் சுருக்கமாகச் சொன்னால் பயமே வராதபடி, ஒரு பேய்ப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.
ஆஹா - பயங்கரம் இல்லாமல் எடுத்திருப்பது
ஹிஹி - திகில் இல்லாமல் எடுத்திருப்பதுகுமுதம் ரேட்டிங் - சுமார்