தினமலர் விமர்சனம் » சந்தமாமா
தினமலர் விமர்சனம்
வித்தியாசமான கதை. நல்ல கவிதை வரிகளுடன் பாடல்கள். சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள். நானே நாயகன் என்கிற கருணாஸின் பிடிவாதத்தால், சாறு வீணாகிப் போன "சக்கை மாமா".
சின்ன வயதில் தலையில் அடிபட்டு, முடிவு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்கிற நிலையில் இருக்கும் ஒரே மகனுக்காக, நிலபுலங்களை விற்று பணம் அனுப்பும் கிராமத்து அப்பா (இளவரசு). எழுத்தாளனாகும் வெறியில், எழுதிய குப்பைகளை எல்லாம் புத்தகமாகப் போட்டு, தானே விழா நடத்தி, தனக்கு கவுரவம் தேடிக்கொள்ளும் சந்தமாமா என்கிற சந்தான கிருஷ்ணன் (கருணாஸ்), அவரது ஒரே மகன். பிரபல எழுத்தாளர் ஜே.காந்தன் (வ.ஐ.ச.ஜெயபாலன்), சந்தானத்தின் கண்மூடித்தனமான வெறியைத் தகர்த்து தெளிவாக்குகிறார். அனுபவம் சொல்லும் கதைகளே வெற்றி பெறும் என்கிற உண்மையை உணரும் சந்தானம், தன் மனைவி மேரியையே(சுவேதா பாசு) காதலியாக நடிக்க சொல்லி எழுதும் "கண்ணாடி மல்லிகை" கதைத்தொடர், பெரும் வரவேற்பைப் பெறுகிறது. ஆனால் விபரீத விளையாட்டால், குடும்பம் சிதையும் அபாயம்! சந்தானம் மனைவியை மீட்டாரா? இல்லையா... என்பது க்ளைமாக்ஸ்.
பாடல்கள்... வைரமுத்து. இசை... ஸ்ரீகாந்த் தேவா. "கோயம்பேடு சிலுக்கக்கா..." என்றொரு குத்து, "யாரோடி..." என்கிற மெலடி, "கண்டேன் கண்டேன்..." என்கிற தனிக்குரல் பாடல், என வெரைட்டி தர முயற்சித்திருக்கிறார். கருணாஸ், நாயகனுக்குண்டான சிரத்தையும், வளைந்து நெளிந்து ஆடுகிறார். விஜய் ஸ்டெப்ஸ் போடுகிறார். நமக்குத்தான் சார்லி சாப்ளின் ஆடுவது போலவே இருக்கிறது.
கருணாஸை முன்னிறுத்தும் அத்தனை காட்சிகளிலும், கோடை மழையாக சிலிக்க வைக்கிறார் சுவேதா பாசு. நாடக மேடைப் பாணியில், ஜோக்குகளை உதிர்த்து விடும் ஜால்ரா கூட்டம், மந்திரக்காரனின் தொப்பி முயல் போல, வருவதும், காணாமல் போவதுமா குழப்புகிறது. கருணாஸ்... காமெடியா? குணச்சித்திரமா? என்று குழம்பியதில், தலை வெட்டிய கோழி போல துடித்து அடங்குகிறது படம்.
மொத்தத்தில், "சந்தமாமா" - சாறு வீணாகிப்போன சக்கை மாமா".----------------------------------------------------
குமுதம் விமர்சனம்
கம்பி மேல் நடக்கும் கதை.
கருணாஸின் மனைவியை, அவர் திருமணமானவர் என்பது தெரியாமல் காதலிக்கிறான் ஓர் இளைஞன். அதிர்ந்து போகும் மனைவியிடம் அதை தொடரச் சொல்லி, அவனுடன் பழக விடுகிறார் கணவன். ஏன்? அவர் ஓர் எழுத்தாளர்! அந்த சம்பவங்களை ஒரு தொடர் கதையாக எழுதுகிறார். அப்புறம் என்ன ஆனது? என்பதுதான் “சந்தமாமா’.
கொஞ்சம் அசந்தாலும் கருணாஸின் கேரெக்டர் “மாமா’வாகவே ஆகிவிடும் அபாயம் இருந்தும் க்ளைமாக்ஸால் அது சாதுர்யமாகச் சமாளித்திருக்கிறார்கள்.
தன்னுடைய பர்ஸனாலிட்டி பற்றி நன்றாகப் புரிந்தவர் கருணாஸ். அதனால் படத்திற்கு ஒப்புக் கொள்ளும் போதே, நல்ல சிவப்பாக, கொழுக் மொழுக்கென்று ஒரு கதாநாயகி வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார் போலிருக்கிறது.
க்ளைமாக்ஸில் அவர் மின் கம்பிகளில் சிக்கித் தவிப்பது கலகல. மனைவி எங்கே சென்றாலும் கையில் நோட்டுடன் திரிவது எரிச்சல்.
ஆப்பிளுக்குக் கால் முளைத்த மாதிரி அழகாக இருக்கிறார் ஹீரோயின் ஸ்வேதா. (நன்றி: படத்தில் வரும் வசனம்!) நடிக்கவும் தெரிந்திருக்கிறது.
காதலனாக வரும் ஹரீஷ் களையாக இருக்கிறார்.
“யாரோடி’ பாடல் ஜோரோடி!
சின்ன வயதில் கருணாஸின் தலையில் அடிபட்டதால், எப்போது வேண்டுமானாலும் அவர் இறந்துவிடுவார் என்ற ஃப்ளாஷ்பேக், படத்தின் தொய்வைக் கொஞ்சம் தடுத்து நிறுத்துகிறது. இயக்கம் ராதாகிருஷ்ணன்.
நொந்த மாமா அல்ல்..!
ஆஹா - இடைவேளைக்கு பின்
ஹிஹி - இடைவேளைக்கு முன்
குமுதம் ரேட்டிங் - ஓகே