தினமலர் விமர்சனம் » நான் சிவனாகிறேன்
தினமலர் விமர்சனம்
படத்தின் ஹீரோ சைக்கோ. பைக்கோ, காரோ இல்லாத இவர் மீது ஹீரோயினுக்கோ லவ்வுங்கோ... எனும் லேட்டஸ்ட் தமிழ் சினிமா, சைக்காஜ் சப்ஜெக்டுகளுடன் அந்த காலத்து கமலின் சிகப்பு ரோஜாக்களையும், இந்த காலத்து தனுஷின் காதல் கொண்டேன் படத்தையும் கலந்து கட்டி "நா சிவனாகிறேன்" என்றிருக்கிறார்கள்!
கதைப்படி ஹீரோ உதய் கார்த்திக், காதலனுக்கும், புருஷனுக்கும் துரோகம் செய்யும் 16 பெண்களை அடுத்தடுத்து தீர்த்துகட்டிவிட்டு, அங்கு இறந்த பெண்களின் இரத்தத்தால் "நான்" என ஆட்டோகிராப்பும் போட்டு வைத்து விட்டு வருகிறார். காவல்துறையும், கஷ்ட ஜீவனம் நடத்தும் இவர் மீது காதல் கொள்ளும் கதாநாயகியும் ஒருசேர இவர் தான் குற்றவாளி என தீர்மானித்து, தக்க சன்மானம், அதாங்க தண்டனை வழங்க களம் இறங்கும் வேலையில், அப்ரூவராக மாறும் சைக்கோ ஹீரோ உதய், தான் தடம் மாறிய பெண்களை கொலை செய்யக்காரணம், தன் தாய் என கோர்ட்டில் மீடியாக்களை கூட்டி வைத்து கொந்தளிக்கிறார்! கூடவே தான் "சிவன்", தப்பு செய்யும் பெண்களை தீர்த்து கட்ட தனக்கு ஃபுல் ரைட்ஸ் இருக்கிறது என்று சிவனாட்டம் போடும், ஹீரோவின் தாய் செய்த தவறென்ன? ஹீரோவிற்கு தரப்பட்ட தண்டனை என்ன...? என்பது தான் "நா சிவனாகிறேன்" படத்தின் மொத்த கதையும்!
ஹீரோ உதய் கார்த்திக், பாம்பும், கையுமாக தரும் பரமசிவன் போஸ் மாதிரியே, அவரது நடிப்பும் ஓ.கே. அதற்காக அவர் பண்ணும் கொலைகள் எல்லாம் ரொம்ப ஓவர். ஹீரோயின் வர்ஷா, அப்பா பிரேம்குமார், தடம்மாறிடும் தாயாக வரும் நயானி தீட்சித் உள்ளிட்ட எல்லோரும் பார்த்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு!
கே.கோகுலின் ஒளிப்பதிவு, கே.எஸ்.மனோஜின் இசை இரண்டும், வி.கே.ஞானசேகரின் இயக்கத்திற்கு பக்கபலம் என்றாலும், படத்தில் நிறைய பலவீனங்கள் தென்படுவது மைனஸ்.
சைக்கோ உதய் மீது ஹீரோயின் வர்ஷாவுக்கு காதல் வருவது எப்படி? என்பது உள்ளிட்ட இன்னும் பல லாஜிக் மிஸ்டேக் கேள்விகளை கேட்காமல் போனால் "நா சிவனாகிறேன்" - படத்தை "சிவனேனு" பார்த்துவிட்டு வரலாம்!