தினமலர் விமர்சனம் » உயர்திரு 420
தினமலர் விமர்சனம்
பாடலாசிரியர் சினேகன் திட்டமிட்டு கதாநாயகர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம்தான் "உயர்திரு நானூற்று இருபது".
ஐஸ்வண்டிக்காரனிடமிருந்து தோழி ஒருத்தி, மற்றொரு தோழிக்கு வாங்கி தரும் குச்சி ஐஸ்சை கண் இமைக்கும் நேரத்தில் லபக்கி கொள்வதில் தொடங்கி, பழைய ஜெராக்ஸ் மிஷினை தாதாக்களிடம் தள்ளி விட்டு லட்சக் கணக்கில் துட்டு பார்ப்பது வரை, சகல 420(ஃபோர் டொன்டி) தனங்களும் ஹீரோ தமிழ் எனும் சினேகனுக்கு அத்துப்படி, அதற்காக தனது ஹோட்டல் பில்லுக்கு ஹீரோயினை பணம் செட்டில் செய்ய வைத்து காதல் கணக்கை தொடங்குகிறார் என்றால், தனக்கு ஸ்டார் ஹோட்டலில் வேலை கொடுத்த முதலாளியை தூக்கில் தொங்கவிட்டு, அவர் ஆசைப்பட்ட மலேசிய தாஜ்மஹாலை ஏலத்தில் எடுத்து, அவருக்கு பரிசளிப்பது வரை மொத்த கதை தனக்கும் ஃபோர் டொண்டி தனமாகவே இருப்பதுதான் உயர்திரு நானூற்று இருப்பது படத்தின் பலம் பலவீனம் இரண்டும்! ஆனாலும் டைட்டிலுக்கு ஏற்ற கதை, அதை ஸ்டைலீஷாக சொல்லியிருக்கும் விதம் இவையெல்லாம் ஒரு 420யை, "உயர்திரு 420" ஆக்கி இருப்பது ஆறுதல்!
சினேகனுக்கும், டைரக்டருக்கும் மீடியாக்கள் மீது அப்படி என்ன கோபமோ? தெரியவில்லை! மீடியாக்கள் பற்றி இவர்கள் காட்சிபடுத்தியிருக்கும் சில சீன்கள், நடுநிலை மீடியாக்களை இவர்கள் மீது கோபம் கொள்ள வைக்கும் அளவு வீரியமானவை, விஷமமானவை!
தமிழ் எனும் கதாநாயகர் பாத்திரத்தில் பாடலாசிரியர் சினேகன், தன் உருவத்தை காட்டிலும் உயர்திருவாக உயர்ந்து மிளிர்ந்திருக்கிறார். ஆனால் ஸ்டைல் எனும் போர்வையில் அடிக்கடி வெறும் கைகளால் செண்ட் அடித்து கொள்வது மாதிரியான மேனரிசமும், அவருக்கு தரப்பட்டுள்ள டப்பிங் வாய்ஸ்ம், ஜடாமுடி கெட்-அப்பும் தான் ஒட்ட மறுக்கிறது. ஸ்டார் ஹோட்டல் ஜி.எம்மை, தலை விரிகோலத்துடன் தமிழ் சினிமாவில் மட்டும்தான் பார்க்க முடியும் எனும் அளவில் புதுமை படைத்திருக்கிற சினேகன், மற்றபடி காதல் காட்சிகளிலும், களவு காட்சிகளிலும் துணிச்சலாக அடித்து தூள் பரத்தியிருக்கிறார் பலே, பலே...!
கதாநாயகியாக கியல் எனும் பாத்திரத்தில் மேக்னா, இப்படத்தில் வரும் ஒரு டயலாக்கை போன்றே நடிகை நயன்தாரா, இனி சினிமாவுக்கு டாடா-வை சொல்லப்போகும் குறையை போக்க வந்தவர் போன்றே நயனை காப்பி அடித்து, நடித்து நடை-உடை-பாவனை செய்து அதில் பாதி தேறியிருக்கிறார். வசீகரன், ஜெயபிரகாஷ், பாஸ்கி, ரிச் இந்தியா, சந்திர சேகர், அக்ஷ்யா, அக்ஷ்ரா, ஐஸ்வர்யா என அனேகம்பேர் நடித்திருந்தாலும் வில்லன் ஜெ.பியும், வில்லி அக்ஷ்யாவும்தான் ரசிகர்களை கவருகின்றனர்.
டி.சங்கரின் ஒளிப்பதிவில் கார் டைரடிங் காட்சிகளும், மலேசிய தாஜ்மஹால் காட்சிகளும் பிரமாண்டம், பிரமாதம்! மணிசர்மாவின் இசையில், பாடலாசிரியர் சினேகன் ஹீரோ என்பதாலோ என்னவோ, அவர் எழுதிய பாடல்களும், அவருக்காக வாலி, அறிவுமதி உள்ளிட்ட கவிஞர்கள் எழுதிய பாடல்களும் பட்டையை கிளப்பி இருக்கின்றன! கே.கே.வின் படத்தொகுப்பும், ஜி.ராதாகிருஷ்ணனின் வசனமும், இசை - ஒளிப்பதிவு மாதிரியே இப்படத்தின் பிற பெரிய பலங்கள். அதிலும் எனக்கு கஷ்டப்பட்டு ஜெயிப்பது பிடிக்காது... அதனால ஈஸியா சீக்கிரமா ஜெயிக்க என்னவழின்னு... யோசித்து சுலபமாக ஜெயிப்பேன்... என சினேகன் பேசும் டயலாக் ஆகட்டும், பாஸ்கி பேசும் டபுள் மீனிங் டயலாக்குகள் ஆகட்டும் அத்தனையும் அருமை! டயலாக் ரைட்டருக்கு ஹாட்ஸ் ஆஃப் சொல்லியே ஆக வேண்டும்!
மொத்தத்தில் பிரேம்நாத்தின் எழுத்து, இயக்கத்தில் நம்ப முடியாத, சுமார் 420 லாஜிக், மிஸ்-டேக்குகள் இருந்தாலும், "உயர்திரு 420" எப்படியாவது உயர நினைக்கும் பலரது, உள்ளங்கவரும் 4200 தகிடு தத்தங்கள் நிரம்பிய படம்!