தினமலர் விமர்சனம் » பிள்ளையார் தெரு கடைசி வீடு
தினமலர் விமர்சனம்
ஹீரோவுக்கு கேன்சர் எனும் "வாழ்வே மாயம்" படக்கதை தான்! அதை புதிய பின்னணியிலும், பாணியிலும் சொல்லியிருக்கும் விதத்தில் தான் "பிள்ளையார்தெரு கடைசிவீடு" படம் பிரமாதப்பட்டிருக்கிறது.
வில்லேஜ் வெட்டி ஆபிஸர் "ஜித்தன்" ரமேஷ், தங்கையுடன் லீவுக்கு ஊருக்கு வரும் அவரது தோழியை காதலிக்க தொடங்குகிறார். பாசத்துக்காக ஏங்கும் அந்த தங்கையின் தோழியும், ரமேஷை லவ்வுகிறார். ஆனால், பெற்றோரும், உற்றாரும் ரமேஷூக்கு அவரது அத்தை மகளையே கட்டி வைக்க வேண்டும் என்று ஒற்றை காலில் நிற்கின்றனர். நாயகன் - நாயகியின் காதலுக்கு அத்தை மகள் மட்டுமல்ல, ஆறுமாதத்தில் ஹீரோவை சாகடிக்க துடிக்கும் பெயர் புரியாத கேன்சர் வியாதி ஒன்றும் தடையாக பார்க்கிறது. நாயகனும், நாயகியும் தடை பல கடந்து இணைந்தனரா...? நாயகன் மோசமான அந்த வியாதியால் இறந்தாரா...? என்பது மீதிக்கதை!
இந்த கதையில் நாயகனின் வியாதியை, நாயகிக்கு இருப்பதாக முதலில் ரசிகர்களை சாமர்த்தியமாக நம்ப வைத்திருக்கும் இயக்குநர் நிச்சயம் கெட்டிகாரர் தான். ஆனால் அவரது கெட்டிக்காரத்தனம் படத்தின் வேகத்திலும் வெளிப்படாதது சற்றே வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
ஒரு பெரிய இடைவெளிக்குப்பின் "ஜித்தன்" ரமேஷ் ஆட்டம், பாட்டம், ஆக்ஷன், சென்டிமெண்ட் என அனைத்திலும் அசத்தி இருக்கிறார். முற்பாதியில் ஜாலி பேர்வழியாகவும், பிற்பாதியில் வியாதி மனிதராகவும், ரசிகர்கள் ஒவ்வொருவரையும் உலுக்கி எடுத்து விடுகிறார் என்றால் மிகையல்ல!
நாயகி சஞ்சிதாவும், இரண்டாம் நாயகி சுஹாசினியும் போட்டி போட்டி நடித்திருக்கின்றனர் பேஷ்! பேஷ்! பரோட்டா சூரியும், அவரது நண்பர்களும் காமெடி எனும் பெயரில் சில இடங்களில் சிரிக்கவும், பல இடங்களில் கடிக்கவும் செய்கிறார். அப்பா ஜெயப்பிரகாஷ், அம்மா துளசி(மாஜி நாயகி) இளவரசு, போஸ்வெங்கட், நெல்லைசிவா, சிட்டுபாபு இவர்களுடன் பிரகாஷ்ராஜூம் கெஸ்ட் ரோலில் பிரகாசித்திருக்கிறார்!
"அவர் உங்களுக்கு என்ன வேணும்" என கேட்கும் டாக்டரிடம், "அவர் எனக்கு கடைசிவரைக்கும் வேணும்..." என ஹீரோயின் வசனம் பேசும் காட்சி, காதலிக்காக இதை, தழை, கிளை, கிழங்குளால் ஹீரோ பிள்ளையார் சிலை செய்யும் காட்சி, அத்தை மகனை எனக்கு கட்டி வச்சிடாத தாயி... என இரண்டாம் நாயகி வேண்டி நிற்கும் காட்சி, உள்ளிட்ட புதுமைகளில் இயக்குநர் திருமலை கிஷோர் எதிர்பார்ப்பை தூண்டிவிடுகிறார். எம்.வி.பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவு, புதியவர் சக்தியின் இசை, இரண்டும் இயக்குநரின் எழுத்துக்கும், இயக்கத்திற்கும் பக்க பலமாக இருந்து "பிள்ளையார்தெரு கடைசிவீடு" படத்தை முதல் இடத்திற்கு கொண்டு வர முயன்றிருக்கின்றன.
------------------------------------------------
குமுதம் விமர்சனம்
வேலை வெட்டியில்லாத ஹீரோ. விடுமுறையாக்க அவரது வீட்டில் தங்கும் ஹீரோயின். இருவருக்கும் காதல். மாமன் பொன்ணைத்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என ஹீரோவுக்கு வீட்டில் ஏற்படும் நெருக்கடி. என கலப்பாக கதை சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் திருமலை கி÷ஷார்.
வெட்டி மைனர் கேரக்டரருக்கு அம்சமாகப் பொருந்துகிறார் ஜித்தன் ரமேஷ். வீட்டில் களவாடிய பணத்திற்கு அன்னையர் தினம் என அம்மாவுக்கு மாலைபோட்டு காலில் விழும் காட்சியில் தியேட்டரில் சிரிப்பு சரவெடி காதல் காட்சிகளில் சஞ்சிதாவை கரெக்ட் செய்ய ரமேஷ் அன்ட்கோ செய்யும் சின்னச் சின்ன முயற்சிகள் கவிதைத்தனமாக கைதட்டல் போட வைக்கின்றன.
சஞ்சிதா சுமார் ரகம்தான். என்றாலும் காதலை மனசுக்குள் போட்டு மென்று விழுங்கும் காட்சிகளில் நன்றாக நடிப்பு வருகிறது. படத்தின் மையப்பிரச்னையாக கேன்ஸர் விவகாரத்தைச்சொல்லியிருக்கிறார்கள் மிக அரதப்பழசான யுக்தி என்றாலும் தியாகத்தோடு திருமணம் செய்கிறார்கள் என்பதனை நாயகியா...? நாயகனா....? என புரட்டிப் போட்டு சொல்லிருப்பதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.
எம்.வி.பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு குற்றாலச் சாரலாய் அவ்ளோ அழகு. அறிமுக இசையமைப்பாளர் சக்ரியின் இசையில் எனக்கு ஒரு தேவதை பாட்டு மட்டும் நம்மை ரசிக்க வைக்கிறது.
பிள்ளையார் தெரு கடைசி வீடு - புது வீடு.
நன்றி குமுதம்!
-------------------------------------------
கல்கி விமர்சனம்
ஆட்டம்- பாட்டம், குடி-கும்மாளம், கூத்து-கலகம்... என ஊர் சுற்றி வரும் பண்ணையார் மகனுக்குக் காதலால் பொறுப்பு வரும் அதரப் பழசான, அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட கோடம்பாக்கக் கதை - "பிள்ளையார் தெரு கடைசி வீடு".
கொஞ்ச நாள் சத்தமே போடாத ஜித்தன் ரமேஷ், மறுபடியும் ஹீரோவாக ஆக்ட் கொடுத்திருக்கும் படம். விடிஞ்சா சரக்கு, இருட்டுனா சண்டைன்னு திரியற சண்டைக் கோழியா கேரக்டரோட பொருந்திப் போகிறார். டயலாக் டெலிவரி தான் டகால்ட்டி பண்ணுது. காதல் காட்சிகளிலும், நல்லவனாக பில்டப் செய்யும் காட்சிகளிலும் ரமேஷ் செய்வது ரவுசோ ரவுசு. சூரி அவ்வப்போது வந்து கிச்சுக்கிச்சு மூட்டுகிறார். உங்ககிட்டேர்ந்து நிறைய எதிர்பார்க்கிறோம் சூரி.
புதுமுகம் சஞ்சித படுகோனே, தமிழுக்குப் புதுசு என்றாலும் கன்னடத்தில் களம் கண்டவர். அதனால் அழகாக வந்து போனாலும் அசால்டாகவும் நடிக்கிறார். காமெடியான வில்லத்தனத்தில் இளவரசுவின் நடிப்பு தனி ராஜபாட்டை. தம் கடனைச் சரிசெய்ய அவர் போடும் கால்குலேஷனில்தான் கதையில் சூடுபிடிக்கிறது. புதுசாக எதையும் காட்டாத திரைக்கதையில் எதேதோ படங்களை ஞாபகப்படுத்திக் கொண்டே போகிறார் இயக்குனர் திருமலைகிஷோர். மேலும், ஹீரோ எடுக்கும் முக்கியமான முடிவு எல்லாம் டாஸ்மார்க்கில் எடுக்கிறார். டைட்டில் கார்டு முதல் எண்ட் கார்டு வரை படத்தில் "சரக்கு கரை புரள்வது ஏன்? அதுதான் படத்தைத் தள்ளாட்டத்தோடு கொண்டு போகிறது.
பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு, ஏ.ஆர். மோகனின் கலை ஆகியவை படத்துக்கு ஹைலைட்ஸ். சக்ரியின் இசையிலும், பாடல்களிலும் சத்து கம்மி.
பிள்ளையார் தெரு கடைசி வீடு - காக்டெய்ல் கலாட்டா.
நன்றி கல்கி!