தினமலர் விமர்சனம்
வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் வித்தியாசமான கதை சொல்லி இயக்குனர் என பெயரெடுத்தவர் சுசீந்திரன். அடுத்த படமான நான் மகான் அல்ல திரைப்படத்தில் கமர்ஷியல் கலாட்டாவில் கால் வைத்து, அந்த வி.க.சொ. இயக்குனர் எனும் பெயரை இருட்டடிப்பு செய்திருந்தார். இப்போது அழகர்சாமியின் குதிரை மூலம் அந்த வித்தியாசமான கதை சொல்லி இயக்குனர் எனும் பெயரை மட்டுமல்ல... அதையும் தாண்டிய நற்பெயரையும் பெற்று நம்பிக்கையை கூட்டியிருக்கிறார் என்றால் மிகையல்ல!
கதைப்படி, அந்த கிராமத்து மக்களின் காவல் தெய்வமாகவும், குல சாமியாகவும் விளங்கும் அழகர்சாமியின் குதிரை வாகனம் காணாமல் போகிறது. பொம்மை குதிரை காணாமல் போன சில நாட்களில் நிஜமான வெள்ளை குதிரை ஒன்று கிராமத்துக்கு எதிர்பாராமல் வந்து சேர, ஊர் மொத்தமும் அது காணாமல் போன அழகர்சாமியின் குதிரைதான் என்று அடித்து சொல்கிறது. நம்புகிறது! நிஜமான குதிரைக்கு சொந்தக்காரரான பக்கத்து கிராமத்து இளைஞன் குதிரையை தேடி வருகிறான். அந்த குதிரை வந்த நாளாய் சுபிட்சமாய் இருக்கும் ஊர் மக்கள், குதிரையை கொடுக்க மறுத்து தேடி வந்த இளைஞனை அடித்து, உதைக்கின்றனர். பொதி சுமந்து, அந்த இளைஞனின் வயிற்றை கழுவ உதவும் அந்த குதிரை திரும்ப கிடைத்தால்தான் அவனுக்காக காத்திருக்கும் அழகான பெண்ணுடன் திருமணம் எனும் நிலையில், இளைஞனுக்கு யார் யாரெல்லாம் உதவுகிறார்கள்? எப்படியெல்லாம் உபத்திரம் செய்கிறார்கள்...? என்பதை பட்டறிவு, பகுத்தறிவு, பக்திசெரிவு இத்யாதி.. இத்யாதிகளுடன் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.
ஊர் திருவிழாவிற்காக கோயில் வரி வசூலிக்க வரும் ஊர் தலைவர்கள் படும் பாட்டில் ஆரம்பமாகும் சைலண்ட் காமெடி, குதிரை சிலையை உள்ளூர் ஆசாரியே திருடி வைத்திருக்கும் திருப்பத்தில் முடிவது வரை தொடர்வது அவ்வப்போது தியேட்டரில் சிரிப்பலையை ஏற்படுத்துவது படத்தின் பெரிய பலம். இந்த பலம் அழகில்லாத ஹீரோ, என்னவோ சாமி குதிரை காணாமல் போச்சாம்... எங்கிருந்தோ நெசமான குதிரை ஒண்ணு வந்துச்சாம்... என்னய்யா ரீல் விடுறீங்க... எனும் ரசிகர்களின் எண்ண ஓட்டங்கள் எல்லாவற்றையும் மழுங்கடிக்க செய்யும் மந்திரம்!
அழகர் சாமியாக அப்புக்குட்டி. படத்தில் அவரது எண்ட்ரீக்கு முன்பிருந்தே மற்றொரு ஹீரோவாக ராமகிருஷ்ணன் எனும் கேரக்டரில் பகுத்தறிவு பேசியபடி காதல் செறிவு காட்சிகளிலும் கல்கி இருக்கும் பிரபாகரன், புரோட்டா சூரி, சப்-இன்ஸ்பெக்டர் அருள்தாஸ், ஊர் பிரசிடண்ட்டாக வரும் பிரபல பட அதிபர் அழகன் தமிழ்மணி, தேவராஜ், கண்ணாசாரி பூ.ராமு, உள்ளூர் கோடங்கி தவசி, மலையாள மாந்திரீகர் என நடிகர்கள் எல்லோரும் பாத்திரம் அறிந்து பளிச்சிட்டிருக்கிறார்கள். அதிலும் மைனர் கேரக்டரில் வரும் நடிகர் செம ரசனை! ரகளை!!
நாயகிகளில் அப்புக்குட்டியின் ஜோடியாக வரும் சரண்யா மோகனைக் காட்டிலும் பிரபாகரனுக்கு காதலியாக நடித்திருக்கும் அத்வைதாவிற்கு நடிக்க நிறையவே வாய்ப்பு. அதை அம்மணியும் சவாலாக ஏற்றுக் கொண்டு சரியாக செய்து சபாஷ் வாங்கி விடுகிறார்.
இளையராஜாவின் பின்னணி இசையே பல இனிய பாடல்களுக்கு சமமாக, படம் முடிந்த பின்பும் நம் காதுகளில் ரிங்காரமிடுவதும், தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் பொட்டல்காடுகளும் கூட சுவிஸ் குளிர் மலைகளாக மிளிர்வதும், பாஸ்கர் சக்தியின் பக்காவான வசனங்களும், மு.காசிவிஸ்வநாதனின் கன கச்சிதமான படத்தொகுப்பும், சுசீந்திரனின் இயல்பான இயக்கத்திற்கு வலு சேர்த்துள்ளன.
மொத்தத்தில் அழகர்சாமியின் குதிரை : அழகான சவாரி குதிரை!