தினமலர் விமர்சனம் » வந்தான் வென்றான்
தினமலர் விமர்சனம்
"கோ", "ரவுத்திரம்" என அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வரும் ஜீவா நடித்து வெளிவந்திருக்கும் லேட்டஸ்ட் திரைப்படம், டாப்ஸி நாயகியாக நடித்திருக்கும் இரண்டாவது படம், ஹீரோ நந்தா வில்லன் அவதாரம் எடுத்திருக்கும் புதியபடம். "ஜெயம் கொண்டான்", "கண்டேன் காதலை" உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர்.கண்ணனின் மூன்றாவது படம்... என இன்னும் பல சிறப்புகளுடன் கூடவே, எதிர்பார்ப்புகளுடன் ரிலீசாகியிருக்கிறது "வந்தான் வென்றான்".
கதைப்படி ஒரே அம்மா, இரண்டு அப்பாக்களுக்கு (புரட்சி!) பிறந்தவர்கள் நந்தாவும், ஜீவாவும்! நந்தாவின் அப்பா இல்லாமல் போக, அவரது அம்மாவை இரண்டாவதாக திருமணம் செய்யும் ஜீவாவின் அப்பா, நந்தாவை என்னதான் பெற்ற பிள்ளை போல் பாவித்தாலும், ஜீவாவிற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக நந்தாவிற்கு சின்ன வயதிலேயே தாழ்வு மனப்பான்மை! அதன் வெளிப்பாடு தம்பியை கிணற்றில் தள்ளிவிட்டு, விவரம் அறியாவயதிலேயே மும்பைக்கு திருட்டு ரயில் ஏறும் நந்தா, அங்கு வளர்ந்து பெரிய தாதா ஆகிறார்.
மும்பையின் மொத்த தாதாக்களுக்கும் பெப்பே காட்டிவிட்டு முதல் இடத்தில்(!) இருக்கும் நந்தாவை தேடி வரும் ஜீவா (சின்னவயதில் கிணற்றில் தத்தளித்த ஜீவாவை ஊரும், உறவும் ஒன்று சேர்ந்து காபந்து செய்வது பிறகு ப்ளாஷ்பேக்கில் வருகிறது...) அண்ணனை திருத்த தன் காதலையே பணயம் வைக்கிறார். ஜீவாவின் அண்ணன் நந்தா திருந்தினாரா? ஜீவாவின் காதல் என்ன ஆனது? நந்தா மீது இருக்கும் கொலை வழக்கு உள்ளிட்ட மும்பை போலீசின் எண்ணற்ற வழக்குகள் என்ன ஆயிற்று...? நந்தா-ஜீவா மீண்டும் இணைய ஜீவாவின் காதலி டாப்சியின் பங்கு என்ன...? என்பது உள்ளிட்ட இன்னும் பல கேள்விகளுக்கு வித்தியாசமாக பதில் சொல்கிறது "வந்தான் வென்றான்" படத்தின் மீதிக்கதை! அதை இன்னும் சற்றே விறுவிறுப்பாக சொல்லி இருந்தால் மேலும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்பது குறை!
"கோ", "ரவுத்திரம்" படங்களில் பார்த்த துருதுரு, விறுவிறு ஜீவாவை வந்தான் வென்றானிலும் பார்க்க முடிகிறது சுவாரஸ்யம். அதேநேரம் கதாநாயகி விஷயத்தில் கூட அவர் செய்யும் கற்பனைகள் ஹாஸ்யமாகி போவது படத்திற்கு பலவீனத்தை சேர்ப்பதை இயக்குநர் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்.
நந்தாவை வில்லன் என்பதை விட வில்லானிக் ஷீரோ எனலாம். ஸ்மார்ட் வில்லன்! விபரம் புரியாத வயதில் தம்பி ஜீவா மீது சினம் கொள்வது ஓ.கே., அதேநேரம் விபரம் தெரிந்து வளர்ந்த பின்பும், தம்பி என தெரிந்தும் அவரை குற்றுயிரும் குலை உயிருமாக விட்டுச் செல்வதெல்லாம் ரொம்ப ஓவர் நந்தா!
அழகி அஞ்சனாவாக டாப்சி, ஜீவாவின் காதலியாக வருகிறார். இவரது பாத்திரம் கற்பைனை கதாபாத்திரம் என்பதை முன்கூட்டியே ஓரளவு யூகிக்க முடிவது படத்தின் மற்றுமொரு பலவீனம்!
பாம்பே பானிபூரி வாலாவாக வரும் சந்தானமும், அவரது காமெடியும் ஆறுதல், அதுகூட மற்ற படங்கள் அளவு இல்லாதது வருத்தம். ரஸின் ரஹ்மான், மாளவிகா, அழகம்பெருமாள் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு! அதே தேர்வை கதை விஷயத்திலும் இயக்குநர் ஆர்.கண்ணன் காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்! குருநாதர் மறந்துவிட்ட மும்பை தாதா விஷயங்களை சிஷ்யர் கண்ணன் தன் மூன்றாவது படத்தில் கையில் எடுத்திருப்பது ஏனோ புரியவில்லை!
எஸ்.தமனின் அதிரடி இசை, பி.ஜி.முத்தையாவின் அழகிய ஒளிப்பதிவு, கண்ணனின் இயக்கத்தில் எதிர்பாராத புதிய க்ளைமாக்ஸ் எல்லாம் சேர்ந்து, "வந்தான் வென்றான்" படத்தை "வந்தான் போனான்" என்ற அளவில் இல்லாமல் பார்த்து கொள்கிறது! பலே! பலே!!
--------------------------------------------------------------------------
குமுதம் சினிமா விமர்சனம்
சிறுவயதில் வீட்டை விட்டு ஓடிப்போன முரட்டு அண்ணனை மும்பையில் கண்டு பிடித்து ஊருக்கு கூட்டிச் செல்ல தம்பி செய்யும் தந்திரங்கள்தான் கதை.
மும்பையில் மிகப் பெரிய தாதாவாக நந்தா வளர்ந்து நிற்கிறார். எப்படியாவது நந்தாவைச் சந்திச்சு தன் பிரச்னையைச் சொல்ல வேண்டும் என ஜீவா துடிக்கிறார். சொல்கிறார். தாப்ஸியை சந்தித்தது முதல் காதலில் விழுந்து எழுந்தது வரை சகலமும் சொல்லிவிட்டு, "என் அப்பாவைக் கொன்றவனை போலீஸில் சரணடையச் செய்யவேண்டும். இல்லையென்றால் கொன்னுட்டு வா... நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கறேன் என காதலியின் சபதம் கலந்த வேண்டுகோளை நந்தாவிடம் ஒப்பிக்கிறார். தாப்ஸியின் அப்பவைக் கொன்றது வேறு யாருமில்லை நந்தாதான். நந்தாவிடமே ஜீவா இதைச் சொல்லும்போது திரைக்கதையில் "ஜிவ் என சூடு கிளம்புகிறது. இயக்கம் ஆர். கண்ணன்.
தம்பியே அண்ணனைப் போட்டுத் தள்ளுவானா...? போலீஸிடம் சரண் அடையச் சொல்வானா என எக்கச்சக்க எதிர்பார்ப்புகளோடு உட்கார்ந்தால்... திடீரென ஜீவாதான் தம் தம்பி என நந்தாவுக்குத் தெரிந்துவிடுகிறது. கத்தியால் குத்திவிட்டு ஆஸ்பத்திரிக்குச் செல்லும் வழியில் ஜீவாவை ரோட்டில் தூக்கி எறிந்துவிட்டுச் செல்கிறார். பானி பூரி விற்பவராக வந்து சந்தானம் கிச்சுகிச்சு மூட்டுகிறார். தியேட்டரே கலகலக்கிறது.
அண்ணனின் திட்டங்களை தந்திரமாக பொடிப்பொடியாக்கி, கார்மெண்ட்ஸ் என்ற பெயரில் அண்டர்ப்ளே செய்யும் நந்தாவை கொஞ்சம் கொஞ்சமாக தனி ஆளாக்கி போலீஸில் சரண் அடையச் செய்கிறார். தம்பிக்காவும், குடும்பத்திற்காகவும் மனம் திருந்துகிறார் நந்தா.
தமன் இசையில் "அஞ்சனா, "காஞ்சன மாலா பாட்டுகள் நம்மை ரசிக்க வைக்கின்றன. முத்தையாவின் உறுத்தாத ஒளிப்பதிவை கைதட்டி பாராட்டலாம்.
வந்தான் வென்றான் மனதில் நிற்கிறான்.
குமுதம் ரேட்டிங் - ஓகே