தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மூவிஸ் வெளியிட்டிருக்கும் படம் வ குவாட்டர் கட்டிங். அவரது தயாரிப்பில் இதே பட ஹீரோ நடித்து சமீபத்தில் வெளிவந்து சக்கை போடு போட்ட தமிழ்ப்படம் மாதிரி தரமான படமாக இருக்கும் என்று நம்பி தியேட்டருக்குப் போனால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. படத்தின் டைட்டிலில் கடைசி நேரத்தில் ஒட்டிக் கொண்ட `வ` மாதிரியே படமும் புரியாத புதிராகத்தான் இருக்கிறது என்பது கொடுமை. மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும் கதை மறுநாள் காலை 6 மணியுடன் முடிவதுதான் வ படத்தின் ஒரே ஹைலைட்.
கதைப்படி ஹீரோ சிவா ஊரில் இருந்து கிளம்பி சென்னை வருகிறார், துபாய்க்கு விமானம் ஏறுவதற்காக... வந்த இடத்தில் தன் அக்காள் கணவர் எஸ்.பி.பி.சரணுடன் வண்டியில் கிளம்பி ஒரு குவாட்டருக்கும், கட்டிங்கிற்காகவும் அலைவதுதான் வ படத்தின் மொத்த கதையும்! இதை சுவாரஸ்யமாக சொல்கிறேன்பேர்வழி என சொதப்பி எடுத்திருக்கின்றனர் இயக்குனர் தம்பதிகளான புஷ்கர் - காயத்ரி இருவரும். இவர்களது முதல் படமான ஆட்டோ எனும் ஓரம்போ படத்திலாவது ஸ்கிரீன்ப்ளே சுமார் என்றாலும் டேக்கிங்ஸ் பிரமாதமாக இருந்தது. இதில் ஸ்டோரி, ஸ்கிரீன்ப்ளே, டேக்கிங்ஸ் எல்லாமே வீக்! டயலாக் மட்டுமே சில இடங்களில் ஆறுதல்.
துபாய்க்கு ப்ளைட் ஏற வந்த ஹீரோ குறைந்தபட்சம் குவாட்டர் - கட்டிங் இல்லாமல் அந்த இரவை கழிக்க முடியாது எனும் நிலையில் காந்தி ஜெயந்தி, மஹாவீர் ஜெயந்தி போன்ற மதுவிடுதிகளுக்கு விடுமுறையான ஒரு நாளில் தன் அக்காள் புருஷனையும் கூட்டிக் கொண்டு அலைவது காமெடிக்கு வேண்டுமானால் ஓ.கே. ஆனால் அதையே ஒரு முழு படக் கதையாக நினைத்துக் கூட பார்க்க முடியாது என்றாலும் அதுதான் வ படத்தின் மொத்தக் கதையும் என்பது வேதனை!
ஆனாலும் அரசியல் பொதுக்கூட்டத்தில் குவாட்டரும், பிரியாணி பொட்டலமும் தருகிறார்கள் என ஹீரோ சிவா ஓடுவதும், அங்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போலீசுக்கு பயந்து ஓடுவதும், ஸ்டார் ஓட்டலில் எப்படியும் கட்டிங்காவது கிடைக்கும் என பேரருக்கு பணம் கொடுத்து பிரச்னையில் சிக்கி, பின் விரட்டியடிக்கப்படுவதும், அப்படியும் அடங்காமல் ஹீரோவே பேரர் வேஷத்தில் ஹோட்டலுக்குள் புகுந்து சரக்கு தேடிப்பார்த்து கிடைக்காமல் ஏமாறுவதும், இறுதியாய் சூதாட்ட கிளப்பில் கிடைக்குமென சீட்டாடப் போய் வசமாய் சிக்குவதும், பின் மாமன் சரண் புண்ணியத்தில் ஹீரோ தப்புவதும் சுவாரஸ்யமான திருப்பங்கள். ஆனாலும் இதெல்லாம் ஒரு படத்தில் வடடிவேலுவோ, வையாபுரியோ நடிக்க வேண்டிய காமெடி காட்சிகள் என்ற அளவில் ரசிக்க வேண்டியவை என்பதை சொல்லவும் வேண்டுமா? ஆனால் இதையே முழுப்படத்திற்கும் கதையாக்கி, காட்சிகளாக்கி இருக்கும் இயக்குனர்களின் துணிச்சல், ரசிகர்களுக்கு இருக்குமா? என்பது கேள்விக்குறியே!
சிவா, எஸ்.பி.பி. சரண் உள்ளிட்ட நான்கைந்து கேரக்டர்கள்தான் படத்தின் மொத்த நட்சத்திரங்கள் என்பது ஒரு விதத்தில் பலமாக தெரிந்தாலும், ஒரு விதத்தில் பலவீனமாகவும் தெரிகிறது. சிவா, சரண் இருவது நல்ல நடிப்பும், நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும் ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையும், ஆண்டனியின் படத்தொகுப்பும் வ படத்திற்கு பெரிய பலம்!
புஷ்கர் - காயத்ரி தம்பதியரின் எழுத்தும், இயக்கமும் வ படத்தை பார்த்து வாவ் என்று வாய்பிளக்கவும் விடவில்லை! உவ்வே என்று வாய்திறக்கவும் விடவில்லை!
---------------------------------------
குமுதம் விமர்சனம்
"ஸார் ஒரு குவாட்டர் கட்டிங் கொடுங்க - ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இப்படித்தான் டிக்கெட் கேட்டு வாங்குகிறார்கள். டாஸ்மாக்கில் கேட்க வேண்டியதை தியேட்டரில் கேட்க வைத்து புண்ணியம் கட்டிக் கொண்டார்கள் ஜோடி இயக்குநர்கள்.
"தமிழ்ப்படம் எடுத்து கலாய்த்தவர்கள். அதே மூடில் "குவாட்டர் கட்டிங்கை "வ என்ற பெயரில் தந்திருக்கிறார்கள். "வ என்றால் "ஒன்றின் கால் பகுதி என்ற தமிழகராதியின் பொருளைத் தேடிப்பிடித்து இந்தப்பெயரை வைத்திருக்கிறார்கள்.
ஒரு ஆங்கிலப் படத்தின் ஒரு வரிக் கதையை நினைவு படுத்தினாலும், கொஞ்சம் அல்ல நிறையவே புதிதாகவும் யோசித்து இருக்கிறார்கள். "சரோஜா படத்தின் சில காட்சிகளைத் தவிர்த்துப் பார்த்தால் தமிழில் இந்த வகை படங்கள் புதுசுதான். ஆனால் திரைக்கதை என்று ஒன்று இருப்பதையே மறந்துவிட்டார்கள். படம் முழுக்க சரக்கு சமாச்சாரம்தான். ஒரு குவாட்டருக்காக ஹீரோ சுறா இரவு முழுக்க அலைவதுதான் கதை.
எதுக்கு? கோவை இளைஞருக்கு சவுதியில் வேலை. விடிந்தால் பிளைட். அங்கே போனால் தண்ணி அடிக்க முடியாது. அதனால் ராத்திரி ஒரு குவாட்டர் கட்டிங் அடிக்க ஆசைப்படுகிறார். தன் அக்காவின் வருங்கால கணவருடன் சென்னை முழுக்க அலைகிறார். அன்று தேர்தலுக்கு முதல்நாள் என்பதால் டாஸ்மாக் கடை லீவு. இரவு முழுக்க, அலைந்து, இடையில் வரும் ஆபத்துக்களை தவிடு பொடியாக்கி, அவர் செய்யும் சாகஸங்கள் அப்பப்பா... ஒரு நவீன காவியமே படைத்துவிட்டார்கள். மொக்கையாக யோசிப்பது என்பது இதுதானோ....!
"தமிழ்ப்படம் ஹீரோ சிவாதான் இங்கேயும் ஹீரோ. அவருக்கு வாயில் சனிபோல. பேசிப்பேசியே மாட்டிக் கொள்கிறார். சரக்குக்காக மனிதர் இந்த அலை அலைகிறார். இந்தப் பேச்சு பேசுகிறார். சில இடங்களில் சபாஷ் போடவும் வைக்கிறார். நடிப்பில் குறையில்லை; சரக்குதான் சரியில்லை.
அவரது வருங்கால அக்கா கணவராக வரும் எஸ்.பி.பி. படத்திற்கு ப்ளஸ் சேர்க்கிறார். வருங்கால மச்சினனுக்கு சரக்கு வாங்கித்தர அவர் படும்பாடு, ரசிக்க முடிகிறது. கேரக்டருக்கு ஏற்ற குண்டு உடம்பு. கிங்குடன் சீட்டாட்டத்தில் மோதும் சிங்கமாக வருவது ரசிப்பு. சுறா தன்னைக் காப்பாற்றியது குவாட்டாருக்காக என்று வருத்தப்படும் இடத்தில்கூட சிரிக்க வைக்கிறார். ஆனால் கஷ்டப்பட்டு.
லேகா வாஷிங்டன் கதாநாயகி. வாத்தியார் பொண்ணு மக்குரகம். அம்மா திட்டத்திட்ட, தற்கொலைக்குப் போகிறோர். சுறா காப்பாற்றி, அவரோடு சேர்ந்து கொண்டு சரக்கு தேடுகிறார். குறைவான வாய்ப்பு. பிரின்ஸ் என்ற பெயரில் வரும் வில்லன், எம்.ஆர்.ராதா குரலில் வரும் அவரது அப்பா கிங் என்று குறை வைக்காத பாத்திரங்கள்.
இசை ஜி.வி.பிரகாஷ். துள்ள வைக்கவில்லை ஆனாலும் இளமை உண்டு. "உன்னைக் கண் தேடுதே... ரீ மிக்ஸ் பாடல் தாளம் போட வைக்கிறது. "நச்சான வசனங்கள் சில இருந்தும் ரசிக்க முடியாத காட்சியமைப்பால் அது வீண்.
ஒளிப்பதிவு நிரவ்ஷா. படத்தை உட்கார்ந்து பார்க்க உதவியாய் இருப்பது இவர் மட்டும்தான். சென்னை நகரின் இரவு வாழ்க்கையை காமிராவில் சுற்றிக் காட்டுவது நல்ல அனுபவம். அந்த மஞ்சள் டோனில் பிசிறில்லாமல் போகிறது.
ஒவ்வொரு முயற்சியிலும் சரக்குக் கிடைக்காத போதெல்லாம் ஹீரோ எவ்வளவு மனசு வருத்தப்படுகிறாரோ, அதே ஃபீலிங்தான் படம் பார்த்து முடித்தவர்களுக்கும். உண்மைதானே. சரக்கு இல்லாவிட்டால் எதுதான் எடுபடும்!
குமுதம் ரேட்டிங் : ஓ.கே.!