திரௌபதி,Draupathi

திரௌபதி - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ரிச்சர்ட், ஷீலா
தயாரிப்பு - ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன்
இயக்கம் - மோகன் ஜி
இசை - ஜுபின்
வெளியான தேதி - 28 பிப்ரவரி 2020
நேரம் - 2 மணி நேரம் 28 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

தமிழ் சினிமாவில் சில சாதிய பின்னணியைத் தாங்கிப் பிடிக்கும் படங்கள், கடந்த சில ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கின்றன. பா.ரஞ்சித் தான் சார்ந்த சமுதாய மக்களின் பிரச்சினைகள், அவர்களது வாழ்வியல் ஆகியவற்றை மையமாக வைத்து தொடர்ந்து படங்களை இயக்கியும், தயாரித்தும் வருகிறார். அந்தப் படங்களுக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து மற்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் தாங்களும் ஏன் அப்படி படங்களைக் கொடுக்கக் கூடாது என்று நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது. அதன் விளைவாக வந்திருக்கும் படம் தான் இந்த திரௌபதி.

ஆணவக் கொலைகள் என்பது தமிழ்நாட்டில் அடிக்கடி செய்திகளில் அடிபடும் ஒரு விஷயமாக இருக்கிறது. அந்த ஆணவக் கொலைகள் வேறு ஒரு சதித் திட்டத்தாலும் நடக்கிறது என்ற ஒரு புதிய சம்பவத்தை இந்தப் படத்தில் கதையாக வைத்திருக்கிறார் இயக்குனர் மோகன். அவர் சொல்ல வந்த விஷயத்தை இன்னும் விறுவிறுப்பாகச் சொல்லியிருந்தால் இந்த திரௌபதியின் சபதம் முழுமையாக வென்றிருக்கும்.

மனைவி, மைத்துனி, மாமா ஆகியோரைக் கொன்ற குற்றத்திற்காக சிறையில் இருந்துவிட்டு பெயில் மூலம் வெளியில் வருகிறார் ரிச்சர்ட். நேராக சென்னைக்குச் சென்று நண்பன் அறையில் தங்குகிறார். ஒரு வக்கீல், ஒரு அரசியல்வாதி ஆகிய இருவரையும் முகத்தை மறைத்துக் கொண்டு கொடூரமாகக் கொலை செய்கிறார். ஒரு அரசு அதிகாரியையும் கொல்ல முயற்சிக்கிறார். அவை அனைத்தையும் வீடியோவாக எடுத்து போலீஸ் அதிகாரிக்கும் அனுப்புகிறார். அந்தக் கொலையை யார் செய்தது என்பது பற்றி போலீஸ் விசாரிக்க ஆரம்பிக்கிறது. ஒரு கட்டத்தில் ரிச்சர்ட் தான் குற்றவாளி எனக் கண்டுபிடித்து கைது செய்கிறார்கள். ஆனால், அவர் தான் எந்த கொலைகளையும் செய்யவில்லை, தான் ஒரு நிரபராதி என்கிறார். நடந்த சம்பவங்களை விவரிக்கிறார். அவர் கொலையாளியா, ஏன் இருவரைக் கொன்று, ஒருவரைக் கொலை செய்ய முயற்சித்தார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஆணவக் கொலை என்பதை பணத்துக்காக சிலர் திட்டமிட்டு ஏமாற்றி கொலை செய்துவிட்டு, அவர்களது உறவினர்கள் மீதே பழி போடுகிறார்கள் என ஒரு புதிய கதையைத் தந்துள்ளார் இயக்குனர் மோகன். மேலும், வேறு சில குறிப்பிட்ட சமுதாய மக்களை நேரடியாகவே காட்சிகள் மூலமும், கதாபாத்திரங்கள் மூலமும், வசனங்கள் மூலமும் தாக்கியுள்ளார். சில வசனங்கள் மியூட் செய்யப்பட்டிருந்தாலும் என்ன பேசுகிறார்கள் என்பதை யூகிக்க முடிகிறது. முழு உண்மையாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, உண்மைக்குப் பக்கத்திலாவது கதையும், சம்பவங்களும் இருக்க வேண்டும். ஆனால், உண்மைக்குப் புறம்பாக இருப்பதில் அவருடைய நியாயம் தவறியிருக்கிறது.

கடந்த பல வருடங்களாகவே தமிழ் சினிமாவில் தனக்காக ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்க போராடிக் கொண்டிருப்பவர் ரிச்சர்ட். அவருக்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு மாற்றத்தையும், திருப்புமுனையையும் கொடுக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம். இந்தப் படம் தனக்கு அதைச் சரியாகச் செய்யும் என நினைத்து ரிச்சர்ட்டும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். பிளாஷ்பேக்கில் இவருக்காக இன்னும் அழுத்தமான சில காட்சிகளை இயக்குனர் வைத்திருந்திருக்கலாம். அந்தக் காட்சிகளில் இவரை விட இவர் மனைவி திரௌபதி கதாபாத்திரத்திற்குத்தான் பெயர் கிடைக்கிறது.

திரௌபதி கதாபாத்திரத்தில் ஷீலா. காட்டன் புடவை, அழுத்தமாக தலை சீவி பின்னிய கூந்தல், அதிகார நடை, தமிழ்ப் பெண்களுக்கே உரிய அத்தனை அம்சங்களுடன் கூடிய ஒரு கதாபாத்திரம். இப்படி ஒரு கதாபாத்திரத்தை தமிழ் சினிமாவில் பார்த்து கொஞ்ச நாட்களாகி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஊருக்கு ஒரு திரௌபதி இருந்தால் அந்தப் பகுதி மக்களும் சீரும் சிறப்புமாகவே இருப்பார்கள். ஆனால், தன் சாதி மக்களுக்காக மட்டும் பேசாமல், மற்ற சாதி மக்களுக்காகவும் பேசக் கூடியவராக அவர் இருக்க வேண்டும்.

ரிச்சர்ட் செய்யும் கொலைகளை விசாரிக்கும் காவல் துறை அதிகாரியாக நிஷாந்த். ஒரு முக்கியமான கதாபாத்திரம் இது. இன்னும் பிரபலமான ஒருவரை இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கலாம். ஆனாலும், நிஷாந்த் மீது நம்பிக்கை வைத்து இந்தக் கதாபாத்திரத்தை இயக்குனர் கொடுத்திருப்பார் போலிருக்கிறது. இதற்கு முன் இவரை சில நெகட்டிவ் கதாபாத்திரங்களில் பார்த்திருப்பதால் நல்ல போலீஸ் ஆக நடிப்பதை இந்தப் படத்தில் ஏற்க முடியவில்லை.

மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களில் கிளைமாக்சுக்கு முன்பாக வக்கீலாக வரும் கருணாஸ் மட்டுமே தெரிந்த முகமாக இருக்கிறார். மற்றவர்களை அதிகம் பார்த்ததில்லை. இருந்தாலும் அவரவர் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமாகவே நடித்திருக்கிறார்கள்.

படத்தின் திரைக்கதையில் ஆங்காங்கே ஒரு தொய்வு வருகிறது. அதை ஓரளவிற்கு தன் பின்னணி இசை மூலம் சரி செய்கிறார் ஜுபின். கதைக்குத் தேவையான விதத்தில் தன் ஒளிப்பதிவைப் பற்றியும் குறிப்பிட வைக்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ் நாராயண். படத்தொகுப்பாளர் தேவராஜுக்கு இன்னும் அதிக வேலை கொடுத்திருக்கலாம் இயக்குனர்.

படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக ஒரு டிரைலர் மூலம் மட்டுமே பரபரப்பை ஏற்படுத்திய படம். அந்த அளவிற்கு படமாகப் பார்க்கும் போது ஒரு பரபரப்பு இல்லை. படத்திற்குள் இந்த திரௌபதி பற்றி ஒரு டாகுமென்டரி எடுக்கிறார்கள். அது போலவே ஆங்காங்கே இந்தப் படமும் ஒரு டாகுமென்டரி உணர்வை ஏற்படுத்துகிறது.

திரௌபதி - தீ அல்ல

 

திரௌபதி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

திரௌபதி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓