3.25

விமர்சனம்

Advertisement

நடிப்பு - அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன்
தயாரிப்பு - ஆக்சஸ் பிலிம் பேக்டரி, ஹேப்பை ஹை பிக்சர்ஸ்
இயக்கம் - அஷ்வத் மாரிமுத்து
இசை - லியோன் ஜேம்ஸ்
வெளியான தேதி - 14 பிப்ரவரி 2020
நேரம் - 2 மணி நேரம் 34 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5

தமிழ் சினிமாவில் 2018ல் வெளிவந்த 96 படத்திற்குப் பிறகு நம்மை வியக்க காதல் கதைகளைப் பார்க்கவில்லை. கடந்த வருடத்தில் அப்படி ஒரு படம் வராத நிலையில் இந்த வருடத்தில் காதலர் தினத்தன்று வெளிவந்த அந்த ஒரு குறையைத் தீர்த்து வைத்திருக்கிறது இந்தப் படம்.

காதல் கதைக்குள் கடவுள் வந்தால் எப்படியிருக்கும் என்ற வித்தியாசமான கற்பனையுடன் காதலின் சிறப்பை அழுத்தமாக உணர்த்தியிருக்கும் படம் தான் இது. அறிமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து எப்படி இந்தக் கதையை யோசித்தார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

அரியர்ஸ் வைத்து இஞ்சினியரிங் முடித்தவர் அசோக் செல்வன். அவருடன் சிறு வயதிலிருந்தே நண்பர்களாக இருப்பவர்கள் ரித்திகா சிங், ஷாரா. அப்பா பார்த்த மாப்பிள்ளை பிடிக்காமல் தன்னைத் திருமணம் செய்து கொள் என ரித்திகா, அசோக் செல்வனிடம் ஒரு நாள் திடீரெனக் கேட்கிறார். அசோக்கும் சம்மதிக் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. ஆனால், திருமணம் முடிந்த பின் ரித்திகாவைத் தன் மனைவியாகப் பார்க்க முடியாமல் தவிக்கிறார் அசோக். இருவருக்கும் அடிக்கடி சண்டை வரை அது கடைசியில் விவாகரத்தில் போய் நிற்கிறது. விவாகரத்து வழங்கும் நாளன்று திடீரென கடவுளான விஜய் சேதுபதியை சந்திக்கிறார் அசோக். அவருக்கு ரித்திகாவைத் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் ஒரு வாழ்க்கையை வழங்குகிறார் கடவுள் விஜய் சேதுபதி. மீண்டும், ரித்திகா, அசோக்கைத் திருமணம் செய்து கொள்வாயா எனக் கேட்பதிலிருந்து வேறு ஒரு கதை ஆரம்பமாகிறது. அதில் அசோக்குக்கு ரித்திகா மீது எப்படி காதல் வந்தது, அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் சுவாரசியமான மீதிக் கதை.

2001ம் ஆண்டு ஷாம், ஜோதிகா, சிம்ரன் நடித்து வெளிவந்த 12 பி படம் போன்ற ஒரு திரைக்கதை. அந்தப் படத்தில் பஸ்ஸைப் பிடித்த ஷாம் கதை, பஸ்ஸைத் தவறவிட்ட ஷாம் கதை என இரு விதமான திரைக்கதையில் படம் நகரும்.

அது போல இந்தப் படத்தில் ரித்திகாவைத் திருமணம் செய்து கொண்ட பின் ஒரு கதை, ரித்திகாவைத் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் போது ஒரு கதை என இரு வேறு கதைகளை எழுதியிருக்கிறார் இயக்குனர்.

திருமணத்திற்கு சரி என சம்மதித்து பின் சண்டை போட்டு பிரிந்தது ஒரு கதை என்றால், திருமணம் செய்து கொள்ளாமலேயே ரித்திகாவின் மீதுள்ள காதலை அசோக் புரிந்து கொள்வதுதான் மற்றொரு கதை. அசோக்கிற்கு மட்டும் முன்னாடி நடந்தது என்ன என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும்படியான வரத்தைக் கொடுத்திருப்பார் கடவுள். அவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்து தன் காதலை அவர் எப்படி புரிந்து கொள்கிறார் என்பதுதான் இந்தத் திரைக்கதையின் ஹைலைட். ஒவ்வொருவருக்கும் இப்படி புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் கிடைத்தால் நாட்டில் விவாகரத்து நீதிமன்றங்களே இருக்காது.

அசோக் செல்வன் அப்படியே கதைக்குள் செம பிட் ஆகி இருக்கிறார். கதையை ரொம்பவே படித்து படித்து நேசித்திருப்பார் போலிருக்கிறது. எங்கேயுமே ஓவரான ஆக்டிங்கோ, குறைவான ஆக்டிங்கோ இல்லாமல் அவ்வளவு யதார்த்தமாய் நடித்திருக்கிறார். இப்படி ஒரு நடிகரை தமிழ் சினிமா இன்னும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையே என்ற ஒரு வருத்தம் வருகிறது.

இறுதிச் சுற்று படத்திற்குப் பிறகு ரித்திகா சிங்கிற்கு ஒரு அருமையான கதாபாத்திரம். நண்பனாக இருந்தவனிடமே திடீரென என்னைக் கல்யாணம் செய்து கொள் என்று கேட்பது சற்றே அதிர்ச்சியாக இருக்கிறது. பிளாஷ்பேக்கிலாவது ரித்திகாவிற்கு அசோக் மீது காதல் இருந்தது என்பதை லேசாகக் காட்டியிருக்கலாம். நூடுல்ஸ் மண்டை என அசோக் செல்லமாக அழைத்தாலும் அதில் காதலை விட நட்புதான் அதிகம் மேலோங்கி இருந்தது. பொறுமையாகக் காத்திருந்து நல்ல ஒரு கதாபாத்திரத்தைக் கைப்பற்றி ஸ்கோர் செய்திருக்கிறார் ரித்திகா.

ஷாராவிற்கு அதிக வேலையில்லை என்றாலும் வரும் சில காட்சிகளில் அன்பான நண்பனாக மனதில் இடம் பிடிக்கிறார்.

படத்தின் இரண்டாவது கதாநாயகியாக வாணி போஜன். அசோக் செல்வனின் ஸ்கூல் சீனியர். எப்போதும் சோகமே வடிவான முகத்துடன் வாணி கதாபாத்திரத்தை வடிவமைத்தது ஏனோ?. காதல் தோல்வி தான் என்றாலும் அதற்காக எப்போதுமே ஒருவர் அப்படியா இருப்பார்.

விஜய் சேதுபதிதான் படத்தில் கடவுள். ஒரு அழகான கேமியோ. நட்புக்காக இந்தப் படத்தில் நடித்தாலும் படத்தின் டுவிஸ்ட்டுக்கே அவர் தான் காரணம். அவருடைய உதவியாளராக ரமேஷ் திலக். இருவருமே அசோக்கை விசாரிப்பது கலகலப்பு.

லியோன் ஜேம்ஸ் பின்னணி இசை ஓகே. ஆனால், இப்படியான காதல் படங்களில் பாடல்கள் சிறப்பாக அமைவது படத்திற்கு பெரும் பலத்தைக் கொடுக்கும். அதைக் கொடுக்கத் தவறவிட்டார் லியோன்.

படத்தில் மெதுவாக நகரும் காட்சிகள் தான் குறையாகத் தெரிகின்றன. சில காட்சிகளை இன்னும் பரபரப்பாக வேகமாக நகர்த்தியிருக்கலாம். மொத்தமாக கொஞ்சம் பொறுமையாக படம் நகர்வது நமக்குக் கொஞ்சம் பொறுமையை இழக்க வைக்கிறது. அவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் ஒரு சுவாரசியமான காதல் கதையைப் பார்த்த திருப்தி நமக்கு நிச்சயம் கிடைக்கும்.

ஓ மை கடவுளே - கடவுள் காப்பாற்றுவார்

 

ஓ மை கடவுளே தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ஓ மை கடவுளே

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓