3.25

விமர்சனம்

Advertisement

நடிப்பு - த்ருவ் விக்ரம், பனிதா சாந்து
தயாரிப்பு - ஈ 4 என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - கிரிசாயா
இசை - ரதன்
வெளியான தேதி - 22 நவம்பர் 2019
நேரம் - 2 மணி நேரம் 38 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5

தமிழ் சினிமாவில் காதல் படங்களைச் சொல்லும் விதமும், அவற்றிற்கான காட்சிகளும் தான் மாறிக் கொண்டிருக்கிறதே தவிர அந்த காதல் மட்டும் மாறாமல் தான் உள்ளது.

உண்மைக் காதலின் உணர்வுகளையும், வலியையும் சொல்லும் மற்றுமொரு காதல் படம் என்று இந்தப் படத்தைச் சொல்லிவிட முடியாது. ஆக்ஷனில் இருக்கும் வெறித்தனத்தை சமீபத்தில் பார்த்த சினிமா ரசிகர்களுக்கு காதலில் இருக்கும் வெறித்தனத்தைக் காட்டியிருக்கும் படம் தான் இந்த ஆதித்ய வர்மா.

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி ஆக அறிமுகமாகி. ஹிந்தியில் கபீர் சிங் ஆக வசூல் சாதனை படைத்த படம் தமிழில் ஆதித்ய வர்மா ஆக வந்திருக்கிறது. சாதிப் பெருமையையும், சாதியால் பிரியும் காதலையும் சொல்லும் படம் தான் இது. ஆனால், படத்தின் தலைப்பில் அந்தப் பெருமையைச் சொல்லும் வர்மா என்பதை சேர்த்ததன் காரணம் என்னவோ ?.

தெலுங்கு ஒரிஜனல் படத்தை அப்படியே தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்கள். கிரீசய்யா இப்படத்தை இயக்கியிருக்கிறார். ரீமேக் படம் தான் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கான படமாகவும் கொடுத்திருக்கிறார்.

த்ருவ் விக்ரம், மங்களூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் ஹவுஸ் சர்ஜன் படிப்பில் இருக்கிறார். கல்லூரிக்குப் புதிதாக வரும் மாணவி பனிதா சாந்துவைப் பார்த்ததும் காதலில் விழுகிறார். காதல் என்றால் சாதாரண காதல் அல்ல, வெறித்தனமான காதல். கணக்கில்லா முத்தங்கள், கணக்கு வைத்துக் கொண்ட உடல் உறவுகள் என அவர்கள் காதல் கடக்கிறது. எம்.எஸ்.முடித்த பின் பனிதா வீட்டிற்குச் சென்று தங்கள் காதல் பற்றி சொல்கிறார் த்ருவ். ஆனால், பனிதாவின் அப்பா அவரது சாதியில் தான் திருமணம் செய்வேன் எனச் சொல்லி த்ருவ்வை அவமானப்படுத்தி அனுப்புகிறார். உடனடியாக பனிதாவிற்கு வேறு ஒரு திருமணத்தையும் செய்து வைக்கிறார். காதலியை கை பிடிக்க முடியாத சோகத்தில் தீவிர குடிகாரராகவும், போதைப் பொருளுக்கு அடிமையாகவும் மாறுகிறார் த்ருவ். இருப்பினும் சிறந்த அறுவை சிகிச்சை மருத்துவராகவும் பெயரெடுக்கிறார். அதன் பின் அவர் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

1999ல் வெளிவந்த காதலின் தீவிரத்தைச் சொன்ன, விக்ரம் நடித்த சேது படம் அவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையைத் தந்தது. 20 வருடங்கள் கழித்து 2019ல் வெளிவந்துள்ள விக்ரம் மகன் த்ருவ் அறிமுகமாகியுள்ள ஆதித்ய வர்மா அவருக்கு முதல் படத்திலேயே சரியான முகவரியைத் தந்துள்ளது.

இது முதல் படமா என ஆச்சரியப்படும் அளவிற்கு நடித்திருக்கிறார் த்ருவ். கோபக்கார இளைஞன், வெறித்தனமான காதலன், பாசக்கார மகன், நட்புக்கே இலக்கணமான நண்பன், கைராசியான மருத்துவர் என ஒவ்வொரு கட்டத்திலும் அந்தந்த காட்சிகளுக்கேற்ப நடிப்பில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறார். முதல் படத்திலேயே இந்த அளவு கனமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்குத் தனி திறமை வேண்டும். அது அப்பா விக்ரமிடமிருந்து மகன் த்ருவ்வுக்கு இயல்பாகவே வந்துவிட்டது போலிருக்கிறது. என்னதான் அழகாக இருந்தாலும் எமோஷனல் காட்சிகளில் அழ வைக்கும் ஹீரோக்களைக் கண்டால் நம்மவர்களுக்குப் பிடித்துவிடும். அது த்ருவ்விற்கு முதல் படத்திலேயே கிடைத்துவிட்டது. தமிழ் சினிமாவிற்கு இயல்பாக நடிக்கத் தெரிந்த ஒரு புதுமுகம் வந்துவிட்டார்.

பார்த்த உடனேயே காதல் நெருப்பைப் பற்றிக் கொள்ள வைக்கிறார் பனிதா சாந்து. சாந்தமான பெண்ணாகத் தெரிபவரா இவ்வளவு சரசத்தில் ஈடுபடுகிறார் என அதிர்ச்சியடைய வைக்கிறார். பெரிய கண்கள், இயல்பான சிரிப்பு, கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பு என முத்திரை பதிக்க முயற்சித்திருக்கிறார். இடைவேளைக்குப் பின் இவரை கதைக்குள் கொண்டு வரவேயில்லை. கிளைமாக்சுக்கு முன்பாக வந்து மற்றுமொரு அதிர்ச்சியைக் கொடுக்கிறார்.

த்ருவ்வின் நெருங்கிய நண்பனாக அன்புதாசன். ஒவ்வொருவருக்கும் சுக, துக்கங்களில் பங்கெடுக்கும் ஒரு நண்பன் எப்படி இருப்பானோ அச்சு அசலாய் அப்படியே இருக்கிறார் அன்புதாசன். பிரியா ஆனந்த் ஓரிரு காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார். திணிக்கப்பட்ட கதாபாத்திரமாகவே இவர் கதாபாத்திரம் இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடலோரக் கவிதைகள் ராஜா. நாயகன் த்ருவ்வின் அப்பாவாக நடித்திருக்கிறார். காதலின் உணர்வைச் சரியாகச் சொல்லும் த்ருவ்வின் பாட்டியாக லீலா சாம்சன்.

ரதன் இசையமைப்பில் பாடல்களும், பின்னணி இசையும் ரசிக்க வைக்கின்றன. பார்க்கும் போது பாடல்கள் பிடிக்கின்றன, இருந்தாலும் மனதில் பதிய மறுக்கிறது. இனி, கேட்கக் கேட்க பிடிக்க வாய்ப்புள்ளது.

படத்திற்கு ஏ சான்றிதழ். கணக்கிலடங்கா முத்தங்கள், கணக்கு வைத்துக் கொண்ட உடல் உறவுகள் என ஆரம்பத்திலேயே சொன்னோம். அப்படியான காட்சிகளைத் தவிர்த்திருந்தால் குடும்பத்துடன் பார்க்கும்படியான படமாக இருந்திருக்கும். இடைவேளைக்குப் பின் கதையை எப்படி கொண்டு போவது என தடுமாறியிருக்கிறார்கள். த்ருவ்வின் டாக்டர் லைசன்ஸ் ரத்து, நடிகை பிரியா ஆனந்த்திடம் சென்று படுக்கையைப் பகிரலாமா எனக் கேட்பது ஆகியவை தேவையற்றவை. படம் முழுவதும் புகை, குடி, போதை எச்சரிக்கை வாசகங்களை வைத்திருக்க வேண்டிய கட்டாயம். படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். முதல் பாதியில் இருந்து ஒரு விறுவிறுப்பு, தெளிவு இரண்டாவது பாதியில் இல்லை. கிளைமாக்சுக்கு முன்பாக மீண்டும் கதைக்குள் வந்து நெகிழ்ச்சியுடன் முடித்திருக்கிறார்கள்.

ஆதித்ய வர்மா - ‛ஆல்கஹால் காதல்'

 

பட குழுவினர்

ஆதித்ய வர்மா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓