2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ
தயாரிப்பாளர் - லலித்குமார்
இயக்கம் - டெல்லி பிரசாத் தீனதயாள்
இசை - கோவிந்த் வசந்தா
நடிப்பு - விஜய் சேதுபதி, பார்த்திபன், சத்யராஜ், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன்
வெளியான தேதி - 10 செப்டம்பர் 2021 (நேரடியாக டிவி ரிலீஸ்)
நேரம் - 2 மணி நேரம் 26 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

ஒரு அரசியல் படம் என்றால் அது நேரடியான அரசியல் படமாக இருக்க வேண்டும். அதில் வித்தியாசம் என்கிற பெயரில் வேறுவிதமான கிரியேட்டிவிட்டியை சேர்ப்பது சொல்ல வரும் நேரடி கருத்துக்களை காம்ப்ரமைஸ் செய்து கொள்வதாகிவிடும்.

அந்த விதத்தில் இந்தப் படத்தில் ஸ்பிலிட் பர்சனாலிட்டி, அதாவது, ஒருவருக்குள் இருக்கும் இரண்டு விதமான ஆளுமை என்பதை வைத்து கதையை அமைத்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் ஏற்கெனவே அபூர்வமாய் வந்தவைதான் இந்த ஸ்பிலிட் பர்சனாலிட்டி. ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த அந்நியன் பட விக்ரம் கதாபாத்திரம் போன்றது என்றால் ரசிகர்களுக்குப் புரிந்துவிடும்.

அதிரடியான அரசியல் படமாய் கொடுக்க நினைத்து ஒரு மாநகராட்சி வார்டுக்குள் சிக்கிய ஒரு அரசியல் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன்.

சிறு வயதிலிருந்தே அரசியலில் இறங்க வேண்டும் என்ற தீவிர ஆர்வத்தில் இருப்பவர் விஜய் சேதுபதி. அவர்கள் ஏரியாவில் தலைவராக வலம் வரும் பார்த்திபனைப் பார்த்துத்தான் அவருக்கு அப்படி ஒரு ஆசை. சில பல வேலைகளைச் செய்து எப்படியோ பார்த்திபனின் மனதில் இடம் பிடித்துவிடுகிறார். மாநகராட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றியும் பெறுகிறார். வெற்றி பெற்ற பின் அவர் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளைக் கார்ப்பரேட் கம்பெனிக்கு எழுதிக் கொடுக்கிறார். ஆனால், அந்த விஷயம் மீடியாவில் வெளிவந்து விடுகிறது. இது எப்படி வெளியில் வந்தது என பார்த்திபன் விசாரிக்க ஆரம்பிக்கிறார். விஜய் சேதுபதி மீதும் அவரது ஏரியா மக்கள் கோபமடைகிறார்கள். இது எல்லாவற்றிற்கும் காரணம் தன்னிடம் திடீரென ஏற்படும் ஸ்பிலிட் பர்சனாலிட்டி என்பது விஜய் சேதுபதிக்குத் தெரிய வருகிறது. அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை சுற்றிச் சுற்றி சொல்லியிருக்கிறார்கள்.

அமைதிப்படை அமாவாசை போன்றதொரு கதாபாத்திரத்தில் சிங்காரவேலன் ஆக விஜய் சேதுபதி. ஆனால், அவரை சிங்கம் என்றுதான் ஏரியா மக்கள் அழைப்பார்களாம். விஜய் சேதுபதியின் நடிப்பு சிங்கமாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் அது சாதாரணமாகத்தான் இருக்கிறது. சமீப காலங்களில் விஜய் சேதுபதி தேர்வு செய்யும் கதாபாத்திரங்களில் ஒரு அழுத்தம் இல்லாமல், பெரிய ஸ்கோப் இல்லாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. அந்த பழைய விஜய் சேதுபதியைப் பார்க்கவே முடியவில்லையே ஏன் ?. எல்லா காட்சியிலும் ஒரே மாதிரி பேசுகிறார், ஒரே மாதிரி மேனரிசம் செய்கிறார். கிளைமாக்சில் சத்யராஜுடனான காட்சியில் மட்டுமே பழைய விஜய் சேதுபதியைப் பார்க்க முடிகிறது. தன்னை சோதித்துப் பார்த்துக் கொள்வது அவருக்கு நல்லது.

ஏரியா அரசியல் பெரும்புள்ளியாக பார்த்திபன். அவரை எல்லோரும் தலைவரே, தலைவரே என அழைக்கிறார்கள். ஆனால், அவருக்கும் மேலே ஒரு தலைவர் இருக்கிறார் என்பதை கிளைமாக்சில் தான் காட்டுகிறார்கள். இந்த மாதிரியான கதாபாத்திரமெல்லாம் தனக்கு சர்வ சாதாரணம் என ஊதித் தள்ளுகிறார் பார்த்திபன், சில பல இடங்களில் விஜய் சேதுபதியை பின்னுக்கும் தள்ளுகிறார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடி வேண்டும் என்பதற்காக ராஷி கண்ணா. தமிழ் சினிமாவின் வழக்கப்படி ஹீரோ யார், அவரது பின்னணி என்ன என்றெல்லாம் பார்க்காமல் காதலில் விழும் மார்வாடி வீட்டுப் பெண் கதாபாத்திரம். மொத்தமாக ஐந்து காட்சிகளில் வந்தால் ஆச்சரியம். விஜய் சேதுபதியின் தங்கையாக மஞ்சிமா மோகன். மொத்தமாக நான்கு காட்சிகள், இரண்டு வரி வசனம் பேசியிருந்தால் அதிகம். விஜய் சேதுபதியின் தில்லுமுல்லுத்தனங்களுக்கு எப்போதும் உதவி செய்யும் உயிர் நண்பனாக கருணாகரன். கார்ப்பரேட் பெண் முதலாளியாக பிக் பாஸ் புகழ் சம்யுக்தா. ஒரே ஒரு காட்சியில் கிளைமாக்சில் வந்தாலும் அசத்திவிட்டுச் செல்கிறார் சத்யராஜ்.

கோவிந்த் வசந்தா இசையில் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றுமில்லை. பாடல்கள் என்று சில வந்து போகின்றன.

மாநகராட்சிக்கோ, அரசுக்கோ சொந்தமான ஒரு இடத்தை ஒரு மாநகராட்சி கவுன்சிலர் கையெழுத்து போட்டுக் கொடுத்தாலே அந்த இடத்தை ஒரு கார்ப்பரேட் கம்பெனி வாங்கிக் கொள்ள முடியுமா ?. படத்தின் முக்கியக் கருவே இதுதான், அதிலேயே கோட்டை அல்ல அதல பாதாளத்தை விட்டிருக்கிறார்கள் ?. அரசியல் படம் என்றால் அதில் நம்பகத்தன்மை வேண்டும். இதை ஒரு பேன்டஸி அரசியல் படமாகக் கொடுத்து சறுக்கியிருக்கிறார்கள்.

துக்ளக் தர்பார் - துக்கடா தர்பார்

 

துக்ளக் தர்பார் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

துக்ளக் தர்பார்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓