தினமலர் விமர்சனம் » ஒடியன் (மலையாளம்)
ஒடியன் (மலையாளம்) - விமர்சனம்
நடிகர்கள் : மோகன்லால், பிரகாஷ்ராஜ், சனா அல்தாப், நரேன், சித்திக், இன்னொசன்ட் மற்றும் பலர்.
ஒளிப்பதிவு : ஷாஜி குமார்
இசை : சாம் சி.எஸ், ஜெயச்சந்திரன்
டைரக்சன் : வி.ஏ.ஸ்ரீகுமார் மேனன்
மோகன்லால் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள படம் தான் ஒடியன்.
கிராமங்களில் மின்சார வசதி இல்லாத காலகட்டங்களில் கதை ஆரம்பிக்கிறது. தங்களுக்கு பிடிக்காத எதிரிகளை பயமுறுத்துவதற்காக மிருகங்களைப் போல தங்களது தோற்றங்களை மாற்றிக் கொண்டு அச்சுறுத்தும் ஒடியன்களை பற்றிய கதைதான் இந்த படம். கிட்டத்தட்ட அழிவுநிலைக்கு வந்துவிட்ட ஒடியன்களில் கடைசி ஒடியனாக வருகிறார் மோகன்லால். தன்னுடன் படித்த பள்ளித் தோழியான மஞ்சு வாரியர் மீது தனக்குள்ள காதலை சொல்லாமல் மறைக்கிறார் மோகன்லால். அதேசமயம் மஞ்சுவாரியரின் முறைமாமனான பிரகாஷ்ராஜ், மஞ்சுவாரியரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதுடன், அவரது கண்பார்வை இழந்த தங்கையையும் அடைய முயற்சி செய்கிறார்
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மஞ்சு வாரியர், தனது கணவராக நரேனை ஏற்கிறார். ஆனால் திருமணமான சில நாட்களிலேயே மர்மமான முறையில் கொல்லப்படுகிறார் நரேன். மஞ்சு வாரியரின் தங்கையை விரும்பி திருமணம் செய்யும் பள்ளிக்கூட வாத்தியார் கூட, இதேபோல மர்மமான முறையில் இறக்கிறார். இந்த இரண்டு மரணங்களுக்கும் மோகன்லாலும். அவரது ஒடி வித்தையும் தான் காரணம் என மஞ்சுவாரியர் உட்பட பலரும் நம்புகிறார்கள்.
இந்த வருத்தத்தால் சொல்லாமல் கொள்ளாமல் ஊரை விட்டு கிளம்பும் மோகன்லால், பதினைந்து வருடங்கள் கழித்து இந்த இருவரின் சாவில் உள்ள உண்மையை தெரிந்து கொண்டு ஊருக்கு திரும்புகிறார். உண்மையில் இந்த இரண்டு கொலைகளை செய்தது யார், எதற்காக செய்தனர், அவர்களை மோகன்லால் எப்படி பழி தீர்க்கிறார், தன்மீதுள்ள பழியை எப்படி துடைக்கிறார் என்பதுதான் மீதிக்கதை..
ஒடியன் மாணிக்யன் என்ற அந்த கேரக்டராகவே தன்னை மாற்றிக் கொண்டுள்ளார் மோகன்லால். இளம்வயது உருவமாகட்டும், சடைமுடி தொங்கும் வயதான தோற்றமாகட்டும், இரண்டிலுமே நடிப்பில் மிடுக்கு காட்டியுள்ளார்.. குறிப்பாக ஒடி வித்தையை அவர் வெளிப்படுத்தும் விதம் சூப்பர். கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் மொட்ட ராஜேந்திரன் அன் கோவுடன் மோகன்லால் மோதும் காட்சி உண்மையிலேயே பிரமிப்பூட்டுகிறது.
கதையின் நாயகியாக வரும் மஞ்சுவாரியர், தனது வாழ்க்கையும் தனது தங்கை வாழ்க்கையும் ஒருசேர தொலைந்து போனதை நினைத்து குமுறும் கேரக்டரில் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கருகரு முகத்தோற்றத்துடன் வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் பிரகாஷ்ராஜுக்கு இந்தப்படம் உண்மையிலேயே புதிய அனுபவமாகத்தான் இருக்கும்.
மற்றபடி திரையில் வரும் உப கதாபாத்திரங்கள் தங்களது பங்களிப்பை நிறைவாக செய்துள்ளனர். பழைய காலகட்டத்தை பிரதிபலிக்கும் விதமாக அழகாக சுழன்றிருக்கிறது ஷாஜி குமாரின் ஒளிப்பதிவு. சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை அதிர வைக்கிறது.
இதுவரை யாரும் தொடாத கதை... மோகன்லால், பிரகாஷ்ராஜ் என பெரிய நட்சத்திரங்கள்... இவையெல்லாம் இருந்தும் திரைக்கதையில் செமையாக கோட்டை விட்டுள்ளார் அறிமுக இயக்குனர் வி.ஏ.ஸ்ரீகுமார் மேனன். கதையை பிளாஸ்பேக் காட்சிகளாக விட்டுவிட்டு நகர்த்துவது ஒருகட்டத்தில் சலிப்பையே ஏற்படுத்துகிறது. சண்டைக்காட்சியில் மோகன்லாலின் உழைப்பு அத்தனையையும் மனதில் ஒட்டாத திரைக்கதையால் வீணடித்தும் விட்டார் ஸ்ரீகுமார் மேனன்.
மொத்தத்தில் நமது எதிர்பார்ப்பில் பாதியைக்கூட நிறைவு செய்யாமல் திருப்பி அனுப்புகிறான் இந்த ஒடியன்.