Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

கூடே (மலையாளம்)

கூடே (மலையாளம்),koode
  • கூடே (மலையாளம்)
  • பிருத்விராஜ்
  • பார்வதி
  • இயக்குனர்: அஞ்சலி மேனன்
21 ஜூலை, 2018 - 18:02 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கூடே (மலையாளம்)

நடிகர்கள் : பிருத்விராஜ், பார்வதி, நஸ்ரியா, அதுல குல்கர்னி, ரஞ்சித், ரோஷன் மேத்யூ

இசை : ஜெயச்சந்திரன் / ரகு தீக்சித்

ஒளிப்பதிவு : லிட்டில் ஸ்வயம்ப்

டைரக்சன் : அஞ்சலி மேனன்

ஹேப்பி ஜர்னி என்கிற மராத்தி மொழி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த கூடே. பெங்களூர் டேய்ஸ் புகழ் அஞ்சலி மேனன் நான்கு வருடம் கழித்து இயக்கி இருக்கும் படம் என்பதாலேயே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் இது. எதிர்பார்ப்பை ஈடு கட்டியுள்ளாரா அஞ்சலி மேனன்...?

புட்பால் விளையாட்டில் ஆர்வமுள்ள சிறுவன் பிருத்விராஜ், பிளஸ்டூ படிக்கும் காலத்தில் தனக்கு தங்கையாக சுவாசக் குறைபாட்டோடு பிறந்த நஸ்ரியா மீது அதிக பாசம் காட்டுகிறார். ஆனால் படிப்பில் நாட்டம் குறைந்த பிருத்விராஜை அவரது தாய்மாமன், வேலைக்காக வெளிநாட்டுக்கு அழைத்தது செல்கிறார். பல வருடங்கள் கழிந்த நிலையில் திடீரென ஒருநாள் நஸ்ரியா இறந்துவிட்டார் என தகவல் வர ஊருக்கு திரும்புகிறார் பிருத்விராஜ்.

குடும்பத்தை நீண்டகாலம் பிரிந்திருந்ததால் பெற்றோர் மீது அவ்வளவாக ஒட்டுதல் இல்லாத பிருத்விராஜ் நஸ்ரியாவின் காரியங்கள் முடிந்ததும் மீண்டும் வெளிநாட்டுக்கு திரும்ப முடிவு செய்கிறார். கார் மெக்கானிக்கான தனது தந்தையின் கார் ஷெட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பழைய வேன் ஒன்றை எடுத்துக் கொண்டு ஊரை சுற்றிப்பார்க்க கிளம்புகிறார் பிருத்விராஜ். அன்றைய இரவில் சில வித்தியாசங்களை உணர தொடங்கும் பிருத்விராஜூக்கு அந்த வேனுக்குள் காட்சியளிக்கிறார் நஸ்ரியா.

இறந்துபோனவர் எப்படி கண்ணுக்கு தெரிகிறார் என ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்தாலும் போகப்போக நஸ்ரியா காட்டும் அன்பில் அவர் உயிருடன் இருப்பது போலவே உணரும் பிருத்விராஜ், தான் ஊரில் இருந்த காலகட்டத்தில் தன் மீது நஸ்ரியா வைத்திருந்த அளவற்ற அன்பை, நஸ்ரியாவின் டைரி, ஆல்பம் மூலமாக புரிந்துகொள்கிறார். பிருத்விராஜுக்கும் தான் வளர்த்த செல்ல நாய்க்கும் மட்டுமே கண்களுக்கு தெரியும் நஸ்ரியாவுக்கு, அவர் மனம் விரும்பும் அனைத்தையும் ஒரு அண்ணனாக நிறைவேற்றி தர ஆரம்பிக்கிறார் பிருத்விராஜ்..

இந்தநிலையில் பள்ளிப்பருவத்தில் பிருத்விராஜ் தன்னுடன் படித்த பார்வதியை விரும்பியதும், தற்போது பார்வதி திருமணமாகி விவாகரத்தும் பெற்று, குடும்பத்தாரின் அடக்குமுறையில் வாழ்ந்து வருவதும் நஸ்ரியாவுக்கு தெரியவர இருவரையும் ஒன்றுசேர்க்கும் முயற்சியில் இறங்குகிறார் நஸ்ரியா. அவரின் இந்த முயற்சி சாத்தியமானதா..? அதற்காக பிருத்விராஜ் கொடுத்த விலை என்ன..? நஸ்ரியாவின் இருப்பை மற்றவர்களால் அறிய முடிந்ததா என இன்னும் சில கேள்விகளுக்கு மீதிப்படம் விடை சொல்கிறது.

ஆரம்பத்தில் மூடி டைப்பாக இருக்கும் பிருத்விராஜ், நஸ்ரியா செய்யும் கலாட்டாக்களால் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பான ஆளாக மாறுவது, தாழ்வு மனப்பான்மையால் தனது பள்ளி தோழி பார்வதியிடம் இப்பவும் காதலை சொல்ல தயங்குவதும் , பின் துணிச்சல் பெறுவதும் என இதுவரை பார்த்திராத ஒரு புதிய கதாபாத்திரமாகவே தெரிகிறார்.

கதாநாயகி என பார்வதி இருந்தாலும் படம் முழுவதும் நம்முடன் பயணிக்கும் நஸ்ரியா தான் நம் மனதை ஆக்கிரமிக்கிறார். நடிப்புக்கு நான்கு வருட இடைவெளி விட்டிருந்தாலும், அந்த பழைய துறுதுறுப்பும் விளையாட்டுத்தனமும் அவரிடம் குறையவே இல்லை.. சில நேரம் உம்மணா மூஞ்சியாக, சில நேரம் அறிவுஜீவியாக வரும் பார்வதி வழக்கம்போல பக்குவப்பட்ட நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

பிருத்விராஜின் தந்தையாக நடித்துள்ள இயக்குனர் ரஞ்சித், நஸ்ரியாவின் காதலனாக வரும் ரோஷன் மேத்யூ என படத்தின் உப கதாபாத்திரங்கள் படத்தை மேலும் சுவாரஸ்யப்படுத்துகிறார்கள். புட்பால் கோச்சாக கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார் அதுல குல்கர்னி. பல வருடங்களுக்கு பிருத்விராஜூம் அவரும் சந்திக்கும் அந்த தருணம் நெகிழ்ச்சியாக படமாக்கப்பட்டுள்ளது. ரகு தீக்சித்தின் பின்னணி இசை படத்துக்கு மிகப்பெரிய பலம். கதை நிகழும் பகுதி ஊட்டியை சுற்றி என்றாலும் இதுவரை நாம் பார்த்திராத ஒரு புதிய கோணத்தில் நமக்கு ஊட்டியை சுற்றிக்காட்டுகிறார் ஒளிப்பதிவாளர் லிட்டில் ஸ்வயம்ப்

பெங்களூர் டேய்ஸ் படத்தில் துள்ளலும் உற்சாகமுமாக கதை சொன்ன அஞ்சலி மேனன், இதில் அன்னான் தங்கை பாசத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார். பிருத்விராஜ் - நஸ்ரியாவின் அண்ணன் தங்கை பாசம் இன்னொரு பாசமலரை நினைவு படுத்துகிறது. இளம் வயது பிருத்விராஜ், பார்வதியாக நடித்த சிறுவர்களை அவர்களது சாயலிலேயே தேர்வு செய்திருப்பது இயக்குனரின் மெனக்கெடலை காட்டுகிறது. இறந்துபோனவர் எப்படி மீண்டும் காட்சி தருகிறார்.. இது எப்படி சாத்தியம் என்கிற கேள்வியை ஒதுக்கிவைத்து விட்டு படத்தை பார்த்தால் கூடே ஒரு உணர்வுப்பூர்வமான படம்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in