நடிகர்கள் : காளிதாஸ் ஜெயராம், நீட்டா பிள்ளை, ஜோஜூ ஜார்ஜ் மற்றும் பலர்
ஒளிப்பதிவு : ஞானம்
இசை : பைசல் ரஷி, கிரீஸ் குட்டன்
பின்னணி இசை : கோபிசுந்தர்
டைரக்சன் : அப்ரிட் ஷைன்
நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ், மலையாளத்தில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படம் இது. நிவின்பாலியை வைத்து 1983 மற்றும் ஆக்சன் ஹீரோ பிஜூ என இரண்டு ஹிட் படங்களை கொடுத்த அப்ரிட் ஷைன் இயக்கியுள்ள மூன்றாவது படம் என எதிர்பார்ப்புகளுடன், சற்றே தாமதமாக வெளியாகியுள்ள படம் தான் பூமரம்.
முழுக்க முழுக்க கல்லூரி மாணவர்களுக்கான படம்.. ஆனால் படத்தில் நிறைய எதிர்பார்த்து வந்தால் ஏமாந்து போவீர்கள்.. ஏனென்றால் இந்தப்படம் வழக்கமான எந்த வரைமுறைகளுக்கும் உட்படாத வகையில் படமாக்கப்பட்டுள்ளது என்பது தான்.
இன்டர் காலேஜ் போட்டிகள் தான் படத்தின் கதைக்களம். கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து அனைத்து கல்லூரிகளும் கலந்துகொள்ளும் கலைநிகழ்ச்சி போட்டிகளில் முதல் இடத்தை பிடித்து வெற்றிக்கோப்பையை தக்கவைத்திருக்கும் செயிண்ட் தெரசா மகளிர் கல்லூரி. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் தொடர் சாம்பியானாக இருந்து, சமீப ஆண்டுகளாக இந்த கோப்பையை மீட்க போராடும் மகாராஜா கல்லூரி இவைதான் இந்த போட்டியில் பிரதான நாயகர்கள்.
மகாராஜா கல்லூரியின் மாணவர் தலைவரான காளிதாஸ், இந்தமுறை தனது கல்லூரிக்கு கோப்பையை தட்டிக்கொண்டு வந்து, இழந்த பெருமையை மீட்க கலை நிகழ்ச்சிகளில் தீவிர கவனம் செலுத்தி, மாணவர்களை அணி சேர்க்கிறார். அதேபோல செயின்ட் தெரசா கல்லூரியின் மாணவி தலைவியான நீட்டா பிள்ளை இந்தமுறையும் தாங்களே கோப்பையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என மாணவிகளுக்கு ஊக்கம் அளித்து போட்டிகளில் கலந்துகொள்ள வைக்கிறார்.
மகாராஜா கல்லூரி கோப்பையை தட்டிச்சென்றதா..? செயின்ட் தெரசா கல்லூரி கோப்பையை தக்க வைத்ததா..? இதுதான் க்ளைமாக்ஸ்..
மொத்தப்படமும் இந்த கல்லூரி கலைநிகழ்ச்சி போட்டிகள் மற்றும் அதற்கு தயாராகும் ரிகர்சல்களை மையப்படுத்தியே சுழல்வதால் ஏதோ இன்டர் காலேஜ் போட்டிகளுக்கு பார்வையாளர்களாக சென்ற உணர்வுதான் நமக்கு ஏற்படுகிறது. அதேபோல நம் கல்லூரி காலங்களின் பழைய நினைவுகளையும் கிளறிவிட தவறவில்லை.
காளிதாஸ் தான் கதாநாயகன் என்றாலும் அவரின் தனித்தன்மையை நிரூபிக்கும் விதமான காட்சிகள் என எதுவும் இல்லை. எப்போதும் பத்து மாணவர்களோடு வருகிறார்.. கலை நிகழ்ச்சிகளை பார்வையிடுகிறார்.. மாணவர்களை ஊக்கப்படுத்துகிறார்.. அடிக்கடி கிடார் வாசிக்கிறார் அவ்வளவுதான். இவரது முழு திறமையை அடுத்த படத்தில் தான் பார்க்கவேண்டும்.
காதல் காட்சிகள் எதுவும் இல்லையென்பதால், நாயகி என குறிப்பிட்டு சொல்லமுடியாவிட்டாலும் அந்த இடத்தில் இருப்பது தான் தான் என காட்சிக்கு காட்சி தனது உற்சாகமான செயல்களால் நம்மை வசீகரிக்கிறார் நீட்டா பிள்ளை.. பார்ப்பதற்கு அசப்பில் ஜுனியர் லட்சுமி ராமகிருஷ்ணன் போலவே இருக்கிறார். தனது கல்லூரி மாணவிகளை அவர் போட்டிக்கு தயார்படுத்தும் விதமும் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமும் அவ்வளவு நேர்த்தி.
படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் ஜோஜூ ஜார்ஜ் தவிர மற்ற அனைவரும் புதுமுகங்களே.. என்றாலும் சோடை போகாத நடிப்பால் பலரும் தங்களை ரசிகர்கள் மனதில் பதிய வைக்கின்றனர். க்ளைமாக்ஸில் கோப்பையை வெல்வதில் சிக்கல் ஏற்படும் சமயத்தில் காளிதாஸ் எடுக்கும் முடிவு எதிர்பாராதது. மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் கல்லூரி மாணவர்களுக்கு மைமிங் பயிற்சி சொல்லிக்கொடுக்கும் அந்த இளைஞரும் அப்படி பயிற்சி கொடுத்த இளைஞர்கள் அதை மேடையேற்றாமல் வீணடித்தது கண்டு அவர் மனம் குமுறுவதும் நம்மை கண் கலங்க வைக்கின்றன.
படத்தில் இசை பெரும்பங்கு வகிக்கிறது. பைசல் ரஷி, கிரீஸ் குட்டன் ஆகியோரின் இசையில் 'ஞானும் ஞானும்', 'கடவத்தொரு தோணி ஆகிய பாடல்கள் ரிப்பீட் கேட்கும் ரீங்காரங்கள்.. ஆனால் கலை நிகழ்ச்சிகளில் இடம்பெறுவதாக இடையிடையே அடிக்கடி வந்து போகும் சில பாடல்கள் அலுப்பை தருகின்றன என்பதையும் சொல்லியாக வேண்டும். ஆயிரக்கணக்கான மாணவர்களை வைத்து கல்லூரி நிகழ்ச்சிகளை திறம்பட படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஞானம்.
கல்லூரிகளில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் போட்டிகள் என்பது வெறும் கோப்பையை கைப்பற்றுவது மட்டுமல்ல, மாணவர் பருவத்தில் இருந்தே மனிதம் வளர்க்க வேண்டும் என்பது தான் அதன் அடிப்படை என ஒரு செய்தியை சொல்லி நம்மை வழியனுப்பி வைக்கிறார் இயக்குனர் அப்ரிட் ஷைன்.
முதல் இரண்டு படங்களில் ரசிகர்களின் பல்ஸ் பார்த்து படம் எடுத்த இயக்குனர் அப்ரிட் ஷைன், இந்தமுறை கொஞ்சம் அலட்சியமாக அல்லது ஓவர் தன்னம்பிக்கையுடன் இருந்துவிட்டார்.. அந்தவகையில் 'பூமரம்' ஒரு புதிய முயற்சி என்றாலும் ஒரு திரைப்படமாக படமாக சராசரி ரசிகனை திருப்திப்படுத்தவில்லை என தாரளாமாக சொல்லலாம்.