நடிகர்கள் : வினீத் சீனிவாசன், அனு சித்தாரா, சுராஜ் வெஞ்சாரமூடு, ஹரீஷ் பெருமனா, இன்னொசன்ட், மம்முக்கோயா, தர்மாஜன் போல்காட்டி, விஜயராகவன் மற்றும் பலர்
இயக்கம் : திலீப் மேனன்
நீண்ட நாளைக்குப்பிறகு மலையாளத்தில் யானையை மையமாக வைத்து வெளியாகியுள்ள படம் இது.
சிறுவயதில் கிராமத்தில் உள்ள தனது தோழி அனு சித்தாரா வீட்டில் உள்ள யானையின் தாயத்தை திருடினார் என பொய்யாக குற்றம் சாட்டப்படுகிறார் ஹாசிம் என்கிற வினீத் சீனிவாசன். இதனால் அவமானப்பட்ட ஹாசிமின் தந்தை குடும்பத்தை அழைத்துக்கொண்டு ஊரைவிட்டே வெளியேறுகிறார். பல வருடங்கள் கழித்து செல்வந்தனாக அதே கிராமத்துக்கு திரும்பும் வினீத் சீனிவாசன், நொடிந்து போய்க்கிடக்கும் அனுவின் தந்தையிடம் இருந்து அந்த யானையை தானே விலைக்கு வாங்குகிறார்.
வினீத் சீனிவாசனின் தாயாருக்கோ அந்த யானைக்கு சொந்தக்காரர் மீதான பழைய கோபம் காரணமாக 'சேகரன் குட்டி' என்கிற அதன் பெயரை அப்துல் காதர் என மாற்றி கல்யாணம் பண்ணி வைக்க முடிவெடுக்கிறார். ஆனால் அந்த முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. இதை பயன்படுத்தி பஞ்சாயத்து தலைவரான சுராஜ் வெஞ்சாராமூடு யானை இந்துக்களுக்குத்தான் சொந்தம் என மதப்பிரச்சனையை கிளப்ப நினைக்கிறார்.
யானைக்கு பத்து நாட்கள் அவகாசம் தரப்பட்டு, பத்தாவது நாள் அது இடப்பக்கம் திரும்பினால் பள்ளிவாசலுக்கு சொந்தம் என்றும் வலப்பக்கம் திரும்பினால் அது கோவிலுக்கு சொந்தம் என்றும் முடிவு செய்யப்படுகிறது. பத்தாவது நாள் யானை எந்தப்பக்கம் திரும்பியது, வினீத் சீனிவாசன் யானையை தக்கவைக்க என்ன செய்தார், அவர் மீது பழி சுமத்தியது யார், அந்த பழியை அவர் துடைத்தாரா என்பதற்கு க்ளைமாக்ஸ் விடைசொல்கிறது.
முஸ்லீம் இளைஞன் ஹாசிமாக தனது கேரக்டரில் இயல்பாக பொருந்தியுள்ளார் வினீத் சீனிவாசன். எந்த வித ஹீரோயிசமும் காட்டாமல் கதையின் சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு நடித்துள்ளார். பளீர் புன்னகையால் நம் மனம் கவரும் அனு சித்தாரா முன்னணி நாயகியாக உயர்வதற்கான வாய்ப்பு இந்தப்படத்தின் மூலம் அவரை தேடிவரலாம். காமெடி, வில்லத்தனம் இரண்டையும் ஒரே நேரத்தில் செய்யும் நடிகராக தன்னை மீண்டும் ஒருமுறை அடையாளப்படுத்தியுள்ளார் தேசிய விருது நடிகரான சுராஜ் வெஞ்சாராமுடு.
இரண்டாம் ஹீரோ என சொல்லும் விதமாக படம் முழுக்க யானைப்பாகனாக வரும் அச்சுட்டி தனது யதார்த்தமான நடிப்பால் நம் மனதில் பதிகிறார். கிறிஸ்துவ பாதிரியாராக வரும் நடிகர் இன்னொசன்ட் பரிசு விழுந்த லாட்டரியை யானையிடம் பறிகொடுப்பது செம காமெடி. தர்மஜன் போல்காட்டி பத்து நிமிடமே வந்தாலும் யானையுடனான காமெடி காட்சிகளில் செம கலாட்டா பண்ணுகிறார். மற்ற நடிகர்களும் கதாபாத்திரங்களின் தன்மை உணர்ந்து அவற்றை இயல்பாக பிரதிபலித்துள்ளனர்.
யானை யாருக்கு சொந்தம் என்பதாகட்டும், நாயகன்-நாயகி காதலாகட்டும் இந்து-முஸ்லீம் பின்னணியில் உருவாகியுள்ள இந்த கதையை எந்த சார்புமின்றி எந்த சர்ச்சைக்கும் இடம் கொடுக்காதபடி அழகாக, கவனமாக கையாண்டுள்ளார் இயக்குனர் திலீப் மேனன். யானைக்கு நடிகர் திலீப் குரல் கொடுத்துள்ளது சிறப்பு. யானை சம்பந்தப்பட்ட காட்சிகள் ரொம்பவே இயல்பாக படமாக்கப்பட்ட விதம் அருமை. குழந்தைகளை இந்தப்படம் நிச்சயம் கவரும் என்பதில் சந்தேகமில்லை.