Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

விமானம் (மலையாளம்)

விமானம் (மலையாளம்),Vimanam
  • விமானம் (மலையாளம்)
  • பிருத்விராஜ்
  • இயக்குனர்: பிரதீப் எம்.நாயர்
26 டிச, 2017 - 14:24 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » விமானம் (மலையாளம்)

நடிகர்கள் : பிருத்விராஜ், துர்கா கிருஷ்ணா, சைஜூ குறூப், அலான்சியர் லே, சுதீர் காரமணா, லேனா மற்றும் பலர்
ஒளிப்பதிவு : ஷேக்நாத் ஜலால்
இசை : கோபிசுந்தர்
இயக்கம் : பிரதீப் எம்.நாயர்

பள்ளிப்பருவத்தில் ஒரு மாணவன் என்னவாக விரும்புகிறானோ அதற்கேற்ப அவர்களை ஊக்கம் கொடுத்து வளர்க்க வேண்டும் என்கிற கருத்தை மையப்படுத்தி உண்மை சம்பவத்தை கருவாக கொண்டு தொண்ணூறுகளின் காலகட்டத்தில் இந்தப்படம் உருவாகியுள்ளது.

சிறுவயதிலிருந்தே விமானம் குறித்த கனவிலேயே வளர்கிறார் பிருத்விராஜ். அவரது மெக்கானிக் மாமா சுதீர் காரமணாவும், பயாஸ்கோப் பெரியவர் அலான்சியர் லேவும் இவரது கனவுக்கு உரம் போட்டு பக்கபலமாக நிற்கிறார்கள். கூடவே சிறுவயது தோழியும் இப்போதைய காதலியுமான துர்கா கிருஷ்ணாவும். துர்காவின் தந்தைக்கு தனது மகள் பிருத்விராஜுடன் சுற்றுவது பிடிக்கவில்லை. சிங்கப்பூரில் வேலைபார்க்கும் தனது தங்கை மகன் சைஜூ குறூப்புக்கு அவரை திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார்.

இதற்கிடையே துர்காவின் தந்தையின் பழைய காரை ஏரியில் தள்ளிவிட்டு, அதில் உள்ள என்ஜினை கொண்டு சுயமாக சிறிய ரக விமானம் ஒன்றை வடிவமைக்கிறார் பிருத்விராஜ். சிலபல இயற்கை மற்றும் செயற்கை தடங்கல்களுக்கு பிறகு ஒரு வழியாக விமானம் பறக்க தயாராகிறது. சரியாக அந்த சமயத்தில் பிருத்விராஜ் காரை திருடிய உண்மை வெளிப்பட போலீஸ் அவரை கைது செய்து விமானத்தையும் பறிமுதல் செய்கின்றனர். பிருத்விராஜை ஜெயிலில் தள்ளிவிட்டு, தனது மகளை சிங்கப்பூர் அனுப்பி வைக்கும் வேலைகளில் இறங்குகிறார் துர்காவின் தந்தை. இதையும் மீறி தனது விமானம், காதலி இரண்டையும் பிருத்விராஜால் கைப்பற்ற முடிந்ததா..? இல்லை இதில் எது ஒன்றுக்காக இன்னொறை இழந்தாரா என்பது க்ளைமாக்ஸ்.

படம் முழுதும் விமானம் குறித்த கனவுகளுடனும் அதற்கான முயற்சிகளுடனும் கதையின் நாயகன் வெங்கிடி கேரக்டருக்கு உயிர் கொடுத்துள்ளார் பிருத்விராஜ். ஒருபக்கம் விமான தயாரிப்பு, இன்னொரு பக்கம் காதல் என இரண்டையும் பிரச்சனைகளுடன் எதிர்கொள்வது, க்ளைமாக்ஸில் காதலியை சந்திக்க, தான் உருவாக்கிய விமானத்தில் பறந்துவந்து ஏர்போர்ட்டுக்குள் இறங்குவது என ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் பிருத்விராஜ்.

நாயகி துர்கா கிருஷ்ணா மலையாள சினிமாவுக்கு இன்னொரு அழகான புதுவரவு. பாவாடை, தாவணியில் பிருத்விராஜூடன் சேர்ந்து ஊர் சுற்றும் காட்சிகளில் தொண்ணூறுகளின் கன்னியர்களை அப்படியே நினைவூட்டல் செய்திருக்கிறார்.

பிருத்விராஜூக்கு துணை நிற்பவர்களில் முக்கியமான சுதீர் காரமணா மற்றும் அலான்சியர் லே லோபஸ் இருவருமே போட்டி போட்டுக் கொண்டு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சிங்கப்பூர் மாப்பிள்ளையாக சைஜூ குறூப், பிருத்விராஜின் அம்மாவாக தீபா ராமானுஜம், துர்கா லட்சுமியின் அப்பா, பிருத்விராஜூக்கு ஊக்கம் கொடுக்கும் பாதிரியார் பாலசந்திரன், பார்வையற்றவராக நடித்துள்ள லேனா என படத்தில் இன்னும் பிற கேரக்டர்களுக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

கோபிசுந்தரின் இசையில் 'வானிலுயரே' பாடல் உற்சாகமூட்டுகிறது. ஷேக்நாத் ஜலால் ஒளிப்பதிவில் பிருத்விராஜ், விமானத்தை இயக்கும் காட்சிகள் பிரமிப்பாகவே படமாக்கப்பட்டுள்ளன.

இதே கதை 'எபி' என்கிற பெயரில் வினீத் சீனிவாசன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது இந்தப்படத்திற்கு ஒருவகையில் மைனஸ் தான். என்னதான் திரைக்கதையை மாற்றி, சில காட்சி அமைப்புகளை மாற்றினாலும் இது அந்தப்படத்தில் வந்துவிட்டதே, அந்தப்படத்தில் இன்னும் விறுவிறுப்பாக காட்டி இருந்தார்களே என்கிற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை. ஒரே நேரத்தில் ஒரே கதையை இரண்டு பேர் போட்டிபோட்டு உருவாக்கினால் இரண்டாவது படத்திற்கு இதுபோன்ற ஒப்பீடுகளும், சங்கடங்களும் வரவே செய்யும். ஆனால் அதையும் தாண்டி படத்தை ஓரளவு உயிர்ப்புடன் நகர்த்தி இருக்கிறார் கதாசிரியரும் இயக்குனருமான பிரதீப் எம்.நாயர்.

மொத்தத்தில், விமானம் - உயர உயர பறக்கும் என நம்புவோம்!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in