நடிகர்கள் : வித்யா பாலன், மானவ் கவுல், நேகா தூபியா
இயக்கம் : சுரேஷ் திரிவேணி
வித்யா பாலன், ஆர்.ஜே.வாக நடித்து வெளிவந்துள்ள, குடும்ப சென்ட்டிமென்ட் நிறைந்த படம் தான் தும்ஹாரி சுலு. இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா என்று இனி பார்ப்போம்.
மும்பையில் வாழும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அசோக் துபேயின் (மானவ் கவுல்) மனைவி சுலோச்சனா எனும் வித்யாபாலன். 12ம் வகுப்பு பெயிலானாலும் தன்னால் சாதிக்க முடியும் என்ற அதீத நம்பிக்கை உடையவர். ஒருநாள் ரேடியோ ஒன்றில் ஆர்ஜே.,வாக பணிபுரியும் வாய்ப்பு வித்யாவிற்கு வருகிறது. அவரின் குரலும், பேசும் விதமும் ரசிகர்களுக்கு பிடித்து போக அதை தொடருகிறார். ஆனால் வித்யாபாலன் குடும்பத்தாருக்கு இது பிடிக்கவில்லை. ஒரு குடும்பத்தில் ஒரு இக்கட்டான பிரச்னை வருகிறது. அதில் வித்யாபாலனும் சிக்குகிறார். அது என்ன பிரச்னை, அதிலிருந்து வித்யாபாலன் மீண்டு வந்தாரா...? இல்லையா...? என்பது தும்ஹாரி சுலு படத்தின் மீதிக்கதை.
வித்யாபாலன், தன்னால் எப்படிப்பட்ட ரோலிலும் நடிக்க முடியும் என நிரூபித்திருக்கிறார். குடும்ப தலைவியாக, ஆர்ஜே.,வாக அசத்தலாக நடித்திருக்கிறார்.
வித்யாபாலனின் கணவராக வரும் மானவ் கவுலும் ஒரு சாதாரண இல்ல தலைவராக நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்க்கிறார்.
நேகா தூபியா, ஆர்.ஜே.மால்சிகா ஆகியோரும் பிரமாதமாக நடிக்கவில்லை என்றாலும் தங்கள் ரோலை சிறப்பாக செய்திருக்கிறார். சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ஆயுஸ்மான், படத்திற்கு உறுதுணையாக இல்லை.
"பேன் ஜா து மெரி ராணி..." பாடல்கள் தவிர மற்ற பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. சவுரவ் கோஸ்வாமியின் ஒளிப்பதிவு பல இடங்களில் ஓவியமாகவும், சில இடங்களில் ஓகே என்ற அளவில் தான் இருக்கிறது.
சுரேஷ் திரிவேணி, ஒரு அழகான குடும்ப படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் திரைக்கதையில் அதை கோட்டை விட்டுள்ளார். முதற்பாதி கதையின் ஓட்டம் சரியாக செல்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் ஏகப்பட்ட குழப்பம், சில இடங்களில் பழைய படங்களில் பார்த்த காட்சிகள் வந்து செல்கின்றன.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண், தன்னால் முயன்றளவுக்கு பொருளாதார ரீதியாக உதவி, குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்து கொள்ளலாம் என்ற அடிப்படையை மையமாக வைத்து வெளியாகியுள்ள தும்ஹாரி சுலு படத்தை, குடும்ப படம் பார்க்க விரும்புவர்களும், வித்யபாலனின் ரசிகர்களும் ஒரு முறை பார்க்கலாம்.