ரிலீஸ்க்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று, ரிலீஸான இன்றே(செப்., 22) இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள நியூட்டன் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை நியூட்டன் பூர்த்தி செய்ததா என்று இனி பார்ப்போம்...
நியூட்டன் குமார் அலைஸ் நியூட்டன் எனும் ராஜ்குமார் ராவ், நேர்மையான அரசு கிளார்க். இவரை இதுவரை தேர்தலே நடந்திராத நக்சல் பாதித்த இடத்திற்கு தேர்தல் அதிகாரியாக நியமித்து வெற்றிகரமாக தேர்தல் நடத்தும் பொறுப்பை அரசு ஒப்படைக்கிறது. இவருக்கு உதவ லோக்நாத் எனும் ரகுபிர் யாதவ், மால்கோ எனும் அஞ்சலி பாட்டில் ஆகியோர் உதவியாளராக களமிறங்குகின்றனர். கூடவே ராணுவ அதிகாரியான ஆத்மா சிங் எனும் பங்கஜ் திரிபாதியின் உதவியையும் நாடுகிறார் நியூட்டன். இவர்களின் துணையோடு வெற்றிகரமாக தேர்தலை நடத்தி சாதித்தாரா... என்பது படத்தின் அரசியல் நையாண்டி கலந்த மீதிக்கதை.
அமைதியான, நேர்மையான அதிகாரியாக ராஜ்குமார் ராவ் பளீச் தேர்வு. படத்தின் ஒட்டுமொத்த கதையையும் தனி ஒரு ஆளாக தன் தோளில் சுமந்து அற்புதமாக அதை கொண்டு செலுத்தியிருக்கிறார். ராஜ்குமார் ராவ்வின் திரையுலக பயணத்தில் நிச்சயம் இப்படம் அவருக்கு பெயர் சொல்லும் படமாக அமையும்.
ராஜ்குமார் தேர்தலை நடத்த உறுதுணையாக இருந்து படத்திற்கும் வலு சேர்த்துள்ளனர் அஞ்சலி பாட்டில், பங்கஜ் திரிபாதி மற்றும் ரகுபிர் யாதவ்.
ஸ்வப்னில் சோனாவானேயின் ஔிப்பதிவு நக்சல் பாதித்த இடங்களை அழகாக படம் பிடித்திருக்கிறது. ஸ்வேதா வெங்கட் மேத்யூவ்வின் படத்தொகுப்பு பக்கா தொகுப்பு.
அமித் மஷூகர் தான் இப்படத்தின் இயக்குநர். படத்தை அவ்வளவு அருமையாக இயக்கியிருக்கிறார். தேர்தல் என்ற விஷயத்தை அதிலும் நக்சல் பாதித்த பகுதிகளில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற ஒரு கடினமான கதைகளத்தை மிக நேர்த்தியாக சினிமாட்டிக் தனமாக இல்லாமல், படத்திற்கு என்ன தேவையா அதை சரியாக செய்திருக்கிறார் இயக்குநர். படத்திற்கு வசனங்களையும் அரசியல் நையாண்டி கலந்து சுவாரஸ்யமாக கொடுத்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர்.
மொத்தத்தில் நியூட்டன் - வெற்றி முகமே!