தினமலர் விமர்சனம்
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் கதை, திரைக்கதை, வசனத்தில் எத்தனையோ படங்கள் வெளிவந்திருந்தாலும் இத்தனை பிரமாண்டமாய் ஒரு திரைப்படம் வெளிவந்ததில்லை... எனும் அளவில் பராசக்திக்குப் பின் பேசப்படும் படமாக அமைந்துள்ளது பொன்னர் சங்கர்! இதை சில வாரங்களுக்கு முன் இப்படத்தை பார்த்த முதல்வர் கருணாநிதியே உணர்ந்ததால்தான் பொன்னர் - சங்கர் ஆடியோ வெளியீட்டு விழாவில், இப்படத்தை இயக்கிய தியாகராஜனின் கைகளில் முத்தமிட வேண்டும்! பொன்னரும், சங்கருமாக நடித்திருக்கும் அவரது மகன் பிரஷாந்தின் கன்னங்களில் முத்தமிட வேண்டும் என்று தேர்தல் பரபரப்பிலும் வந்து அவ்விழாவில் கலந்து கொண்டு உணர்ச்சி பொங்க பேசியிருப்பார் போலும்!
கொங்கு மண்டலத்தின் அண்ணன்மார் கதை என்றும், பொன்னர் - சங்கர் என்றும் இன்னமும் பேசப்பட்டு வரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெருமைமிகு வரலாறுதான் இந்த படம்!
கதைப்படி, குறுநில அரசர்களான அப்பாவும், அண்ணனும் இவன் உனக்குத்தான்! அவனுக்குத்தான் நீ! என சிறு வயது முதல் அடையாளங் காட்டி வளர்த்த அம்மாஞ்சி மாமன் நெல்லையன் கொண்டானை தவிர்த்து திடீரென மாற்றான் மந்தியப்பனுக்கு மாலையிடும்படி இளவரசி அடிபணியாத தாமரையோ, மணந்தால் நெல்லையன் கொண்டான்! இல்லையேல் மரண(தேவன்)ங்கொண்டான் என தன் கருத்தில் பிடிவாதமாக இருக்கிறார். இளவரசர் மந்தியப்பன் கூட்டத்திடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு வேண்டா வெறுப்புடன் தாமரைக்கும், நெல்லையன் கொண்டானுக்கும் மணம் முடித்து வைத்து அரண்மனையை விட்டு துரத்தி அடிக்கின்றனர் கவுண்டர் மன்னர்களான அப்பாவும், அண்ணனும்! அப்பொழுது அம்மாஞ்சி கணவனுவன் சீரும் வேண்டாம்; சிறப்பும் வேண்டாம் என கிளம்பும் தாமரை, அண்ணன் சின்னமலை கொழுந்து கவுண்டரிடம் ஒரு சபதம் போடுகிறாள்! அது என்ன சபதம்? அது எப்படி நிறைவேதியது? அதை எப்படி பொன்னரும் - சங்கரும் நிறைவேற்றினார்கள்? அதை நிறைவேற்றும் பொன்னர் - சங்கருக்கும், தாமரைக்கும் என்ன உறவு? அவர்கள் ஏன் போகிறார்கள் துறவு? எப்படி உறவுக்கு திரும்புகிறார்கள் பிறகு? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும், பிரமாண்டமாகவும், பிரஷாந்தா(?)கவும் விடையளிக்கிறது பொன்னர் - சங்கர் படத்தின் மீதிக்கதை!
பொன்னரும் - சங்கருமாகிய அண்ணன் - தம்பி பாத்திரங்களில் பொன்னராகவும், சங்கராகவும் சங்க கால தமிழனை, குறுநில மன்னனை, வீராதி வீரனை கண் முன் நிறுத்துகின்றார் பிரஷாந்த். காதல் இளவரசனாக மம்பட்டியானின் மகனாக மரத்தை சுற்றி டூயட் பாடிக் கொண்டிருந்த பிரஷாந்த்தானா இது? வாவ்!! ஒவ்வொரு காட்சியிலும் புராண காலத்து போர்வீரனை, குறுநில இளவரசனை இல்லை... இல்லை... மன்னாதி மன்னனை நம் கண்முன் நிறுத்துகிறார் பிரஷாந்த். குதியேற்றமானாலும் சரி... வாள் சண்டையானாலும் சரி... வெளு்தது வாங்கிவிடுகிறார் மனிதர். பேஷ்! பேஷ்!!
பொன்னர் - சங்கர் இருவரது ஜோடியாக முத்தாயி, பவழாயி கேரக்டரில் அறிமுகமாகியிருக்கும் பூஜா சோப்ராவையும், திவ்யா பரமேஸ்வரனையும் இயக்குனர் தியாகராஜனால் மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் எனும் அளவில், படம் முழுக்க தேவதைகளாக மிளிர்கின்றனர் இருவரும்.
கதாநாயகர்களின் தந்தை நெல்லையன் கொண்டானாகவும், இளவரசி தாமரை (குஷ்பு)யின் அம்மாஞ்சி மாமனாகவும் நடிகர் ஜெயராம், நல்லதுக்கு போராடும் மாயவர் மந்திரி கிழவராக நாசர், பெருந்தன்மை மிக்க சோழ அரசனாக பிரபு, மான ரோஷம் நிரம்பிய காளி அரசனாக நெப்போலியன், வில்லன் மந்தியப்பனாக பிரகாஷ் ராஜ், அவரது அப்பாவாக கேப்டன் ராஜ், பொன்னர் - சங்கருக்காக தன் வாரிசுகளையும் காவு கொடுத்து மனைவியையும் இழந்து இருவருக்கும் போர் பயிற்சி தரும் ஆசானாக ராஜ்கிரண், சின்னமலை கொழுந்து கவுண்டராக பொன்வண்ணன், அவரது மகன் வையம்பெருமானாக ரியாஸ்கான், கதாநாயகர்களின் நண்பராக போஸ் வெங்கட், இளவரசி குஷ்புவின் மகளாகவும், கதாநாயகர்களின் சகோதரியாகவும் சினேகா மற்றும் கீதா, சீதா, லஷ்மி ராமகிருஷ்ணன், பொன்னம்பலம், பெசன்ட் நகர் ரவி, டெல்லி கணேஷ் உள்ளிட்ட எல்லோருமே பாத்திரத்திற்கேற்ற பளீச் தேர்வு. அவ்வளவு ஏன்? ஒரு பாடலுக்கு பிரமாண்ட முரசு கொட்டும் தாமிரபரணி பானு கூட பளீச் தேர்வுதான்.
எருதுகளை கட்ட ஏர் உழுத படியே பிரமாண்டமாக பொன்னரும் - சங்கரும் உறியடிக்கும் ஆரம்ப காட்சியில் தொடங்கி, இராமாயணம், மகாபாரத போர் காட்சிகளையே மிஞ்சும் வகையில் படமாகியிருக்கும் க்ளைமாக்ஸ் போர் காட்சி வரை ஒவ்வொரு சீனும் ரசிகர்களையே அரசர் காலத்திற்கு அழைத்துப் போகும் பிரமாண்டம் என்றால் மிகையல்ல! எல்லோரும் புராணகால தமிழையே பேசியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அவ்வாறு இல்லாதது சிறு குறை!!
இந்த காலத்திற்கு பொருந்தும் கலைஞர் கருணாநிதியின் அரசியல் வசனங்களும், எந்த காலத்திற்கும் பொருந்தும் அந்தப்புரத்து வசனங்களும், வார்த்தை ஜாலங்களும், தியேட்டரில் விசில் பறக்க செய்கிறது. டி.முத்து ராஜின் கலை - இயக்கம், ஷாஜி குமாரின் ஒளிப்பதிவு, பிரஷாந்தின் பிரமாதமான விஷுவல் எபெக்ட்ஸ், தியாகராஜனின் இயக்கம், எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக இளையராஜாவின் இதமான பதமான இசை என எல்லாமும் சேர்ந்து கலைஞரின் பொன்னர் சங்கரை காண்போரையும் (மனதளவில்) மன்னர் மன்னாதி மன்னர் ஆக்கிய ஆக்கியுள்ளதென்றால் மிகையல்ல.
பொன்னர் - சங்கர் : மன்னாதி மன்னர்!
-------------------------------------------
கல்கி விமர்சனம்
சதியால் இழந்த இன மானத்தை மீட்டெடுக்க போராடும் இரண்டு இளைஞர்களின் சரித்திரம் தான் பொன்னர் சங்கர். கதை, திரைக்கதை, வசனம் கலைஞர் கருணாநிதி. முதலிரண்டும் ஓ.கே. வசனம் தான் படத்தை பின்னோக்கி இழுக்கிறது.
சரித்திரக் கதை என்றாலும் விறுவிறுப்பாகவும், பிரம்மாண்டமாகவும் படத்தை இயக்கி இருக்கிறார் தியாகராஜன். குறிப்பாக இரண்டு மூன்று போர்க்கள காட்சிகள் ஆங்கில படங்களுக்கு நிகரான செட். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்திருக்கும் பிரசாந்த், தன் பங்கை திறம்படவே செய்திருக்கிறார். அறிமுக நாயகனுக்குரிய உழைப்பு தெரிகிறது அவரிடம். கவர்ச்சியும், காதலுமாக சூப்பர் மாடல்கள் திவ்யா பரமேஸ்வரன், பூஜா சோப்ரா.. இருவரும் அவ்வப்போது வந்து போகும் கதாநாயகிகள். சினேகா, பிரசாந்தின் தங்கை. இருந்தும் இருவருக்கும் ஒரு டயலாக் கூட இல்லையே ஏன்?
பின்னணியிலும் பாடல்களிலும் இளையராஜாவின் ஆளுமை இல்லை. குஷ்பு, ஜெயராம் இருவரின் நடிப்பில் கச்சிதம், எந்த பாத்திரத்திலும் பொருந்தும் பிரகாஷ்ராஜ் மாந்தியப்பனாக வரும்போதெல்லாம் நம் மனசுக்குள் பக்பக். காட்சிக்கு காட்சி பிரம்மாண்டம் கொடுத்து கண்களை வியப்பால் விரிய வைத்திருக்கும் கலை இயக்குனர் ஆர்.முத்துராஜுக்கும் அதனை அப்படியே கொடுத்திருக்கும் இயக்குனர் தியாகராஜனுக்கும் பாராட்டுகள்.
------------------------
குமுதம் விமர்சனம்
கொங்கு மண்டலத்தில் சொல்லப்பட்டு வந்த அண்ணன்மார் கதைதான் கலைஞரின் கைவண்ணத்தில் சினிமாவாக உதயமாகியிருக்கிறது.
பொன்னர் சங்கர் சகோதரர்கள் அம்மா குஷ்புவின் சபதம், ஆசானாக வரும் ராஜ்கிரணின் சபதம் என இந்த இரண்டையும் நிறைவேற்றி சோழமண்டலத்திற்கு அடிமையாகாமல் கொங்கு நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத்தருவதுதான் கதை.
இரட்டை வேடங்களில் சரவெடி வெடித்திருக்கிறார் பிரசாந்த். அணைக்கட்டை திறக்க மறுக்கும் முரட்டுக் கூட்டத்துடன் பிரசாந்த் மோதும் ஆரம்ப காட்சியே அமர்க்களம்தான். பிரசாந்தின் ஆசானாக வரும் ராஜ்கிரண் தனக்குக் கொடுத்த வேலையை அழகாகச் செய்திருக்கிறார். காளி மன்னனாக நல்லவராகவும், குழந்தையை பலிபோடச் சொல்லும் வில்லனாகவும் பாஸ் மார்க் வாங்குகிறார் நெப்போலியன்.
பிரசாந்தின் தங்கையாக வந்து “ம்... அவ்ளோதானா?’’ என நம் ஏக்கப் பெருமூச்சை அதிகப்படுத்துகிறார் சினேகா. மற்றபடி, இளவரசிகள் முத்தாயி, பவளாயியாக வரும் பூஜாசோப்ரா, திவ்யா பரமேஸ்வரன் இருவரின் முக அழகைவிட “இடை’’தான் அதிகம் பேசுகிறது. ரசித்துக் கொண்டே இருக்கலாம்.
“குழந்தை வரம் வேண்டும்னு ஆண்டவன் சன்னிதானத்தை தேடிப் போகும் மக்களே! ஆண் பெண் உறவுலதான் அந்த பாக்கியம் கூடி வரும் என்பதை ஏன் மறந்தீர்கள்...?’’ போன்ற கலைஞரின் வசனங்களில் நல்ல கூர்மை. பிரகாஷ்ராஜின் குள்ளநரித்தனம் கைதட்டல் போட வைக்கிறது. ஆனால், தாய்தந்தை இறப்புகூட தெரியாதது மாதிரி பிரஷாந்த் சம்பந்தப்பட்ட க்ளைமாக்ஸ் காட்சி கொஞ்சம் சொதப்பிவிட்டது.
ஒளிப்பதிவாளரும் ஆர்ட் டைரக்டரும் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்கள். பாராட்டலாம். இளையராஜா அமைத்திருக்கும் பின்னணி இசையும், பாடல்களும் யானை பலம்.
பொன்னர்சங்கர் - வின்னர்சங்கர், குமுதம் ரேட்டிங் ஓகே