நவாசுதீன் சித்திக் நடிப்பில் வெளியாகியுள்ள தாதா படம் தான் "பாபுமோஷை பாண்டூகபாஸ்". இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா என்று இனி பார்ப்போம்.
கதைப்படி, காசுக்காக கொலை செய்பவர் பாபு பிகாரி எனும் நவாசுதீன் சித்திக். இவர் லோக்கல் அரசியல்வாதியான சுமித்ரா தேவி எனும் திவ்யா தத்தாவிடமும் அடியாள் வேலை பார்க்கிறார். ஒருநாள் ஒரு பிரச்னையில் திவ்யாவிற்கு நெருக்கமானவரை நவாசுதீன் போட்டுத்தள்ள, திவ்யாவிற்கும், நவாசுதீனுக்கும் மோதல் உருவாகிறது. அதன்பின்னர், நவாசுதீன் இடத்திற்கு பாங்கே பிகாரி எனும் ஜதின் வருகிறார். நவாசுதீனை போன்று பெரிய டானாக துடிக்கும் ஜதின், ஒருக்கட்டத்தில் நவாசுதீனை சுட்டுத்தள்ள அதன்பின் என்ன நடக்கிறது, நவாசுதீன் உயிர் பிழைத்தாரா எனும் கதையுடன் நவாசுதீன் - பிதிதாவின் காதலையும் கலந்துகட்டி விடையளிக்கிறது பாபுமோஷை பாண்டூகபாஸ்-ன் மீதிக்கதை.
போலீஸ் ரோலாக இருந்தாலும் சரி, கொடூர கொலைகாரனாக இருந்தாலும் சரி, எந்த ரோல் கொடுத்தாலும் தன்னால் நடிக்க முடியும் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் நவாசுதீன் சித்திக்.
நவாசுதீன் காதலியாக வரும் பிதிதா பேக் ரசிகர்களை கவர்ச்சி மழையில் நனையவிட்டிருக்கிறார்.
திவ்யா தத்தா, முரளி சர்மா, பகவான் திவாரி உள்ளிட்டோரும் தங்களது பாத்திரமறிந்து சிறப்பாக நடித்து இருக்கின்றனர்.
குஷான் கண்டி தான் படத்தின் இயக்குநர். அருமையாக படத்தை இயக்கியிருக்கிறார். குறிப்பாக திரைக்கதையின் ஓட்டமும், வனசங்களும் படத்திற்கு பிளஸாக அமைந்துள்ளன. இசை சுமார் தான், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு நன்றாக இருக்கிறது.
கதை மற்றும் நவாசுதீன் நடிப்பு அசத்தலாக இருந்தாலும் படத்தில் செக்ஸ், ஆபாசம், வன்முறை போன்ற காட்சிகள் அதிகம் இருப்பதால் குடும்பத்தோடு ரசிகர்கள் இப்படத்தை பார்க்க வருவார்களா என்பது கேள்விக்குறியே.?