சித்தார்த் மல்கோத்ரா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ஆக்ஷ்ன் கலந்த காமெடி படம் தான் "ஏ ஜென்டில்மேன்".
கதைப்படி, கவுரவ் எனும் சித்தார்த் மல்கோத்ரா, மியாமி நகரில் மல்டிநேஷனல் கம்பெனி நடத்தி வருகிறார். அவரது அலுவலகத்தில் காவ்யா எனும் ஜாக்குலின் வேலை பார்க்கிறார். கவுரவிற்கு, காவ்யா மீது காதல் பிறக்கிறது. ஆனால் கவுரவ் மிகவும் எளிமையாக இருப்பதால் அந்த காதலை ஏற்க மறுக்கிறார் காவ்யா. இதற்கிடையே கோலோனல் எனும் சுனில் ஷெட்டி மும்பையில் ஒரு தொழிலதிபர். அவர் ரிஷி என்பவரை தேடி வருகிறார். ஒருநாள் ஏதேச்சையாக ரிஷி மாதிரி இருக்கும் கவுரவ்வை தவறுதலாக தாக்கி விடுகிறார் கோலோனல். ரிஷி என்பவர் யார், எதற்காக அவரை கோலோனல் தேடுகிறார். ரிஷியும், கவுரவ்வும் ஒரே ஆளா...? இல்லை இரண்டு பேரா...? என்ற கதையுடன், கவுரவ்வின் காதல் கைகூடியதா என்பது ஜென்டில்மேன் படத்தின் மீதிக்கதை.
சித்தார்த் மல்கோத்ரா, கவுரவ்-ரிஷி என இரண்டு விதமான ரோல்களில் நடித்திருக்கிறார். அதிலும் ஆக்ஷ்னில் மிரட்டியிருக்கிறார் சித்தார்த். ஆக்ஷ்னில் மிரட்டிய சித்தார்த், நடிப்பிலும் கொஞ்சம் மிரட்டியிருந்தாலும் படம் இன்னும் கொஞ்சம் உயிரோட்டமாக இருந்திருக்கும்.
ஜாக்குலின் பெர்னான்டஸ் வழக்கம்போல ஹீரோயின் என்ற ரேஞ்சை விட்டு கீழ் இறங்கவில்லை, அவரது நடிப்பு சொல்லி கொள்ளும் அளவுக்கு இல்லை. கவர்ச்சி பதுமையாக மட்டுமே வலம் வருகிறார். சில இடங்களில் ஆக்ஷ்ன் காட்சிகளில் நடித்திருக்கிறார்.
சுனில் ஷெட்டி வில்லனாக நடித்திருக்கிறார். ஆனால் அவரிடத்திலும் துளியும் வில்லத்தனம் தென்படவில்லை.
சச்சின் ஜிகார் இசையில் டிஸ்கோ டிஸ்கோ, பாட் பேன் ஜெய... உள்ளிட்ட பாடல்கள் துள்ளல். படத்திற்கு ஒளிப்பதிவு பக்கபலமாக இருந்தாலும், படத்தொகுப்பை இன்னும் கொஞ்சம் பட்டை தீட்டியிருக்கலாம்.
ராஜ் அண்ட் டிகே எனும் இரட்டை இயக்குநர்கள் தான் இப்படத்தை இயக்கியுள்ளனர். ஆக்ஷ்ன் படம் எடுக்கிறேன் என சில இடங்களில் கோட்டை விட்டிருக்கிறார்கள். அதற்கு கதையும் வலுவாக அமையாதது பலவீனம். மற்றபடி ஆக்ஷ்ன் பிரியர்களுக்கு படம் பிடிக்கும்.
மொத்தத்தில், "ஏ ஜென்டில்மேன் - இன்னும் பக்கா ஜென்டில்மேன்"-ஆக இருந்திருக்கலாம்!