தினமலர் விமர்சனம் » அய்யனார்
தினமலர் விமர்சனம்
மிருகம், ஈரம் படங்களை அடுத்து ஆதி கதாநாயகராக நடித்து வெளிவந்திருக்கும் ஆக்ஷன் படம்தான் அய்யனார்.
முதல்காட்சியிலேயே ஒரு கொலையை மறைக்க முயற்சிக்கிறார் ஹீரோ ஆதி. அது யார்? ஏன்? ஏதற்கு? என்பதை விளக்க விரிகிறது ப்ளாஸ்பேக். கதைப்படி கிராமத்தில் மகழ்ச்சியாக வாழும் ஜெயபிரகாஷ் - அனுபமா தம்பதியினர் குடும்பத்திற்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். இதில் மூத்தவர் ஹீரோ ஆதிக்கும், அவரது தம்பிக்கும் ஏழாம் பொருத்தம். ஆதி ஏதாவது தவறு செய்தால் அதை அப்பா - அம்மாவிடம் உடனடியாக போட்டுக் கொடுக்கும் பொறுப்பை சின்னவர் விஷ்ணு பிரியன் செவ்வனே செய்து வருகிறார். இது ஆதிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்த அண்ணன் - தம்பி இருவருக்குமிடையே பகை, நீர்பூத்த நெருப்பாக வளர்கிறது. வளர்ந்து பெரியவன் ஆனதும் மாநில அளவில் பெரிய வாலிபால் விளையாட்டு வீரரான ஆதி, அத்திறமை மூலம் மத்திய அரசில் பணிக்கு சேர்ந்துவிட வேண்டும் என்று காத்திருக்கிறார். கூடவே ஒரு ஒரு மகளிர் கல்லூரிக்கு வாலிபால் கோச்சாக போகுமிடத்தில் வாலிபாலில் சாதிக்கத் துடிக்கும் ஹீரோயின் மீரா நந்தன் மீது காதல் கொள்கிறார்.
காதல், காத்திருப்பு என காலம் தள்ளும் ஆதி கையில் காசு பணம் இல்லாமல் திண்டாட, சென்னையில் டி.வி. சேனல் ஒன்றில் கேமரா மேனாக கைநிறைய சம்பாதிக்கும் தம்பி விஷ்ணுபிரியன், அண்ணன் ஆதியை அடுத்தடுத்து அவமானப்படுத்துகிறார். இச்சமயத்தில் ஆதி எண்ணிய படியே விளையாட்டு வீரர் கோட்டாவில் அவருக்கு மத்திய அரசு வேலை ஒன்று கிடைக்க குடும்பமே சந்தோஷத்தில் திகைக்கிறது. இந்த சமயத்தில் தம்பியின் அவசர அழைப்பை ஏற்று சென்னை வரும் ஆதி, தம்பியை பார்க்க கூடாத நிலையில் பார்க்கிறார். அதனால் கடும் கோபம் கொள்கிறார். அதன் விளைவு என்ன? என்பதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும், ப்ளாஸ்பேக்கிற்குள், ப்ளாஸ்பேக் வைத்து சொல்கிறது அய்யனார் படத்தின் மீதிக்கதை!
பிரபாகர் அலைஸ் அய்யரனாராக ஆதி பிரமாதமாக நடித்திருக்கிறார். சொந்த தம்பியையே ஹீரோ ஆதி கொன்றிருக்க மாட்டார் என்பது முதல் காட்சியிலேயே புரிந்துவிட்டாலும், ஆதியின் தம்பியை கொன்றது யார்? எவர்? என்பதை நோக்கி கதை செல்லும் வேகத்தில் எந்த குறையும் வைக்காமல் காட்சிகளை நகர்த்தி இருப்பதில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமித்ரன் மிளிர்கிறார்.
சந்தானம், எஸ்.எஸ்.குமரன் உள்ளிட்ட காமெடி நண்பர்களுடன் சொந்த வீட்டிலேயே சோற்றுக்கு அலையும் ஆதி, வாலிபால் ப்ளேயராக, மீரா நந்தனின் காதலராக, அப்பாவிற்கு பிடிக்காத, அம்மா செல்லமாக, தம்பியை கொன்றவர்களை பழிவாங்க புறப்படும் இடத்தில் ஆக்ஷன் ஹீரோவாக என்று படிப்படியாக ரசிகர்களின் மனதை பக்காவாக கொள்ளையடித்து விடுகிறார்.
இறந்துபோன் அப்பாவின் லட்சியத்தை நிறைவேற்ற போராடும் மீரா நந்தன் ஆதியுடனான காதல் காட்சிகளில் கைதேர்ந்த நடிப்பை வெளியிட்டிருக்கிறார். கவர்ச்சிக்கு மட்டும் பஞ்சம் வைத்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது.
ஆதியுடன் சந்தானம் அண்ட் கோவினர் பண்ணும் காமெடி, அப்பா ஜெபிரகாஷின் அதட்டல் உருட்டல், அம்மா அனுபமாவின் பாசப்போராட்டம், தம்பி விஷ்ணுபிரியனின் திக்குவாய் நடிப்பு எல்லாவற்றையும் மறக்கடித்து மழுங்கடித்து விடுகிறது. மகாதேவன் - ரவிகலே உள்ளிட்ட வில்லன் கோஷ்டியினரின் அரசியல் அராஜகமும், தமனின் இனிய இசையும், ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலத்தை அளித்திருக்கிறது.
அரிவாளும் கையுமாக அலையும் கமர்ஷியல் அய்யனார், வசூலில் மெய்யனார்!