ஆயுஸ்மான் குரானா, ராஜ்குமார் ராவ், கிர்த்தி சனோன் நடிப்பில் வெளியாகியுள்ள ஒரு முக்கோண காதல் கதை தான் "பரேலி கி பார்பி". இப்படம் ரசிகர்களை மகிழ்வித்ததா.... என்று இனி பார்ப்போம்.
கதைப்படி, பிட்டி மிஸ்ரா எனும் கிர்த்தி சனோன், சுதந்திரமாக வாழும் பெண். இவரது பெற்றோர் பங்கஜ் திரிபாதி மற்றும் சீமா, கிர்த்திக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஒருநாள் கிர்த்தி, "பரேலி கி பார்பி" எனும் புத்தகத்தை படிக்கிறார். அந்தபுத்தகம் தன்னைப்பற்றியது என்பதை தெரிந்து கொள்கிறார். இதையடுத்து அந்த புத்தகத்தை எழுதிய ராஜ்குமார் ராவ்வை தேடி செல்கிறார். அவரது முகவரி கிடைக்காததால் அந்த புத்தகத்தை வெளியிட்ட ஆயுஸ்மான் குரானாவை தேடி செல்கிறார். அங்கு, கிர்த்தி, இந்த புத்தகத்தை எழுதியவரை பார்க்க வேண்டும் என்கிறார். கிர்த்தியை பார்த்த மாத்திரத்திலேயே ஆயுஸ்மானுக்கு காதல் பிறக்கிறது. பின்னர் இவர்கள் இருவரும் சேர்ந்து ராஜ்குமாரை சந்திக்கிறார்கள். இங்கிருந்து ஒரு முக்கோண காதல் கதை ஆரம்பமாகிறது. இறுதியில் கிர்த்தி சனோனை கரம்பிடித்தது யார் என்பது பரேலி கி பார்பி படத்தின் சென்ட்டிமென்ட் நிறைந்த மீதிக்கதை.
படத்தில் கிர்த்தி சனோன் தான் பிரதான பாத்திரமே. அவரை சுற்றி தான் மொத்த படமும் நகருகிறது. அதனால் தன் ரோலை சிறப்பாக செய்திருக்கிறார் கிர்த்தி சனோன். முந்தைய படங்களில் வெறும் கவர்ச்சி நடிகை போன்றே வலம் வந்த கிர்த்தி, இந்தப்படத்தில் கிளாமராக இல்லாமல் நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார்.
ராஜ்குமார் ராவ், ஆயுஸ்மான் குரானா இருவரும் கிர்த்திக்கு பக்க பலமாக அமைந்திருக்கின்றனர். இவர்களை போன்றே பங்கஜ் திரிபாதி, சீமா, ரோகித் சவுத்ரி உள்ளிட்டோரும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றனர்.
நில் பட்டே சனாட்டா படத்தை தொடர்ந்து அஸ்வினி ஐயர் திவாரி இயக்கும் இரண்டாவது படம் இது. ஒரு அழகிய காதல் கதையை, சென்ட்டிமென்ட்டாக சிறப்பாக இயக்கியிருக்கிறார். அவருக்கு பக்க பலமாக திரைக்கதை, ஒளிப்பதிவு, பாடல்களும் சிறப்பாக அமைந்திருக்கின்றன. அதேசமயம் படத்தின் கிளைமாக்ஸ் என்ன என்பதை முன்கூட்டியே அறிவது பலவீனம். மற்றபடி, "பரேலி கி பார்பி" படத்தை அனைவரும் சென்று பார்க்கலாம், ரசிக்கலாம்.