அர்ஜுன், பிரசன்னா கிருஷ்ணா, வைபவ், வரலட்சுமி, சுருதிஹரிஹரன் , சுமன், சுஹாசினி மணிரத்னம், சுதாராணி, "அச்சமின்றி அச்சமின்றி "அருண் வைத்யநாதன் எழுத்து, இயக்கத்தில், இப்பட இயக்குனர் உள்ளிட்ட உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராம் ஆகிய நால்வர் கூட்டணியின் "பேஷன் ஸ்டுடியோஸ்" தயாரிப்பில் வந்திருக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படமே "நிபுணன்".
அவ்வப்போது ஒரு பக்கமாக உடல் உறுப்புகள் செயல் இழக்கும் உபாதையுடன் ஒரு வருடத்தில் ஒய்வு... எனும் நிலையில் குற்றப் பிரிவு சிறப்பு போலீஸ் அதிகாரி அர்ஜுன் வசம் ஒரு சீரியல் சைக்கோ கில்லர் வழக்கு வந்து சேருகிறது. அதை தன் உதவி அதிகாரிகள் பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார் சகிதம் புலனாய்வு செய்யும் அர்ஜுனுக்கு, ஒரு சமூக சேவகர், ஒரு டாக்டர், ஒரு வக்கிலை அடுத்தடுத்து கொடூரமாக கொன்ற அந்த சைக்கோ கில்லரின் அடுத்த குறி தான், தான்... என்பது தெரிய வருகிறது. அய்யய்யோ அப்புறம்? அப்புறமென்ன..? அந்த சைக்கோ கில்லர் அர்ஜுனை போட்டுத்தள்ளுவதற்கு முன் அர்ஜுன், தன் சகாக்களுடன் அந்த சீரியல் கில்லரை சாய்த்தாரா? அந்த சீரியல் சைக்கோ கில்லர் நான்காவதாக காவல்துறை அதிகாரி அர்ஜுனன குறிவைக்கக் காரணம் என்ன? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு திக், திக், சஸ்பென்ஸ் திரில்லராக விடை சொல்ல முயன்று அதில் பாதி வெற்றி பெற்று, மீதி கோட்டை விட்டிருக்கிறது "நிபுணன்" படத்தின் கதையும் காட்சிப்படுத்தலும்.
போலீஸ் அதிகாரி ரஞ்சித் காளிதாஸாக அர்ஜூன் வழக்கம் போலவே சற்று, ஜாஸ்தியாகவே வாழ்ந்திருக்கிறார். பொதுவாக ஆக்ஷன் படங்கள் என்றாலே அர்ஜுன் காட்சிகளுடன் ரொம்பவே ஒன்றிவிடுவார். அதேபோல் இப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தாலும், போலீஸ் உடை அணியாமல் வரும் அவரது லுக்கும், உடைகளும் அவரை ஒரு ஸ்டைலிஷ் போலீஸ் அதிகாரியாக காட்டுகிறது. தனது முதிர்ந்த நடிப்பால், சண்டைக் காட்சிகளிலும், தொடர் கொலையை கண்டுபிடிப்பதிலும் அர்ஜுன் ரொம்பவே நடித்திருக்கிறார்.
அதிலும், அர்ஜுனுக்கு உதவ, பிரசன்னா, வரலட்சுமி சரத் என இரு துணை அதிகாரிகள் இருந்தும், மொத்தப்படத்தையும் தான் , பார்கின்ஸன் நோயால் பாதிக்கப் பட்டவர் என்பதையும் மறந்து தன் தோளில் சுமக்கும் போலீஸ் அர்ஜுன் ,கொஞ்சம் ஜாஸ்தி தான். சரி , தனது 150-வது படத்தில் நடித்திருக்கும் அவரை அதற்காக சகிக்கலாம். ஒரு போலீஸ் அதிகாரியாக மட்டுமல்லாமல், ஒரு கணவனாக, அப்பாவாக, அண்ணனாக, தோழனாகவும.அர்ஜுன் ரொம்பவே இளமை துள்ள வலம் வந்திருக்கிறார்.
அர்ஜுனின் போலீஸ் டீமில் ஒருவராக வரும் பிரசன்னா இளம் போலீஸ் அதிகாரியாக வே வாழ்ந்து ,தனது கதாபாத்திற்கு தேவையானதை சிறப்பாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அதை அர்ஜுன் கூடுமானவரை தனது ஹீரோயிஸம் காட்டும் முயற்சியால் தடுத்திருக்கிறார்.
பெண் போலீஸ் அதிகாரியாக அதே அர்ஜுன் டீமில் வரும் வரலட்சுமி சரத்குமாருக்கு இப்படத்தில், ஒரு வெயிட்டான கேரக்டர்.. அர்ஜூனின் டாமினேஷனையும் தாண்டி, அதனை அவர் சரியாக பயன்படுத்தியிருக்கிறார் எனலாம்.
அர்ஜூனின் தம்பியாக வரும் வைபவ், வில்லனாக கொடூர சைக்கோ சீரியல் கில்லராக வரும் கிருஷ்ணா இருவரும் படத்தில் பயன்படுத்தப் பட்டிருக்கும் விதம் ரொம்பவும் கொடுமை!
கணவர் மீது அன்பும் அக்கறையும் கொண்ட இளம்மனைவியாக மனதில் நிற்கிறார் ஸ்ருதி ஹரிஹரன், வசதியான தம்பதிகளாக வந்து தங்களது மகளையே கொன் று விட்டு நாடகமாடும் சுமன் - சுஹாசினி தம்பதிகள் ,நிஜ கெளரவ கொலைகளையும் மிஞ்சியிருக்கின்றனர்.
நவீன் எஸ்ஸின் பின்னணி இசை, ஹாலிவுட் தர மிரட்டல்.
அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில் காட்சிகள் ஒவ்வொன்றும் இப்படத்தின் சஸ்பென்சையும், த்ரில்லையும் கூட்டுகின்றன.
சென்னையில் சமூக போராளி ஒருவர் மர்மமான முறையில் கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார். கொலை செய்யப்பட்டவரின் உடலில் ஒரு சீரியல் நம்பரும், முகத்தில் மாஸ்க்கும் தடயமாகவிட்டுச் செல்லப்பட்டிருக்கிறது. அந்தகொலை குறித்து விசாரிக்க ஹீரோ அர்ஜுன் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்று அமைக்கப்படுகிறது. ஆனால் அதற்குள் டாக்டர் ஒருவர் அதேபோல கொடூர சித்தரவதை செய்யப்பட்டுகொலை செய்யப்படுகிறார். இந்த கொலை மூலம் இரு கொலைக்கும் தொடர்பு இருப்பதையும், அந்த சீரியல் சைக்கோ கில்லரை விரைவில் பிடிக்க வேண்டும்.... என்னும் கான்செப்டும் காட்சிப்படுத்தலுமே தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதுசு... என்னும் வகையில் இயக்குனர் எக்கச்சக்கமாக ஜெயித்திருக்கிறார்.
அதே நேரம் அர்ஜுன் ஹீரோயிஸம் காட்ட வேண்டுமென்பதற்காக பிரசன்னா, வரலட்சுமி உள்ளிட்ட பிறகேரக்டர்களை (குறிப்பாக க்ளைமாக்ஸில் கைமுடியாத அர்ஜூன் தனது கட்டை மட்டும் அவிழ்த்துக் கொண்டு, பிரசன்னா, வரூவின் கட்டை உடனடியாக அவிழ்த்து விடாது, முடியாத கையோடு தான் மட்டும் போராடுவது....) டம்மி செய்திருப்பதும் பலவீனம். அதே மாதிரிவில்லன் "கழுகு" கிருஷ்ணா தான் அடுத்து கொல்ல வேண்டிய அர்ஜூன் தனது 3வது கொலை முடிந்த பின் வசமாக கைகளில் சிக்கியும் அவரை கொல்லாது விட்டு விட்டு அதன்பின், வேறொரு நாளில் அர்ஜுனுக்கு, அதுவும் போலீஸ் ஆபிஸர் அர்ஜுனுக்கு நாள் நட்சத்திரம் பார்த்து கொல்ல முயன்று வசமாக போலீஸ் வசம் சிக்குவது, சாமான்யரசிகனால் கூட சுத்தமாக நம்ப முடியாத ஹம்பக் பலவீனம்.
மொத்தத்தில், "நிபுணனில் அவ்வளவு பெரிதாக நிபுணத்துவம் இல்லை... என்றாலும், ஆக்ஷ்ன் கிங்குக்காகவும், சஸ்பென்ஸ் திரில்லருக்காகவும் "நிபுணனை ஒரளவுக்கு ரசிப்பான் ரசிகன் என நம்பலாம்!"