நடிகர்கள் : வினீத் சீனிவாசன், ரெஜிஷா விஜயன், ரெஞ்சி பணிக்கர், லால், பிரசாந்த் நாராயணன், விஜய்பாபு, அனுஸ்ரீ
டைரக்சன் : லியோ தாடியஸ்
முதல் பட வாய்ப்பு தேடும் ஒரு உதவி இயக்குனரின் கதைதான். அதற்குள்ளாக ஒரு குற்றமும் கூடவே விசாரணையும் இணைந்து கொண்டால் எப்படி இருக்கும்..?
வினீத் சீனிவாசன் தனது முதல் படம் இயக்கும் வாய்ப்புக்காக பல பக்கங்களிலும் முயற்சி செய்கிறார். இதற்கிடையே ரெஜிஷாவை காதலித்து இரு குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணமும் செய்து கொள்கிறார். இவரது பக்கத்து அபார்ட்மெண்ட்டில் வசிப்பவர்கள் விஜய்பாபு-அனுஸ்ரீ தம்பதியினர். நட்பாகும் பழகுபவர் அனுஸ்ரீ, விஜய்பாபுவோ சிடுசிடு பார்ட்டி.
வங்கியில் அடமானம் வைத்திருந்த மனைவியின் நகை ஏலத்தில் போய்விடும் என்பதால் அதை மீட்பதற்காக பணத்திற்கு அலைகிறார் வினித். ஒரு கட்டத்தில் பணத்திற்கு ஏற்பாடாகி, கடைசி நேரத்தில் அதுவும் கைநழுவி போகிறது. மேனேஜரோ கடனை செலுத்திவிட்டு உடனே மீண்டும் அடமானம் வைத்து பணம் பெறலாம் என கூறியிருந்ததால், பக்கத்தில் உள்ள விஜய்பாபு வீட்டில் ஆள் இல்லாத நேரமாக பார்த்து பணத்தை திருடி பேங்க் வேலைகளை முடிக்கிறார் வினீத்.
ஆனால் பணத்தை திருப்பி வைக்கும்போது அதை விஜய்பாபு பார்த்துவிட, அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் விஜய்பாபு உயிர்விடுகிறார். அந்த கொலையை சாதுர்யமாக மறைத்தாலும் குற்ற உணர்வுடன் நடமாடுகிறார் வினீத் சீனிவாசன். இந்த வழக்கை விசாரிக்கும் பிரசாந்த் நாராயணன் சில தடயங்களை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக வினீத்தை நெருங்குகிறார்..
இந்தநிலையில் கர்ப்பமுற்று இருக்கும் தனது மனைவியிடம் இந்த கொலை விபரத்தை சொல்லிவிட்டு, போலீஸில் சரண்டராக கிளம்பும் வினீத்தை தேடி சரியாக வந்து நிற்கிறது போலீஸ். விசாரணையில் நடந்தவற்றை ஒப்புக்கொள்ளும் வினீத்திற்கு அவரே எதிர்பாராமல் போலீஸ் தரப்பில் இருந்து சில ஆச்சர்யமான விஷயங்கள் நடக்கிறது.. அதனால் சூழ்நிலையும் அடியோடு மாறுகிறது.. விசாரணையில் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடையும்படியாக அப்படி என்ன விஷயம் நடந்தது என்பது க்ளைமாக்ஸ்.
இயக்குனராக இருந்து நடிகராக மாறிய வினீத் சீனிவாசனுக்கு உதவி இயக்குனர் கேரக்டரில் நடிக்க சொல்லியா தர வேண்டும் பின்னியிருக்கிறார் மனிதர்.. அதிலும் கொலையை மறைத்துவிட்டு அவர் தவிக்கும் தவிப்பு இருக்கிறதே, அது இன்னொரு த்ரிஷ்யம்..
கதாநாயகி ரெஜிஷா விஜயனுக்கு இது மூன்றாவது படம். முதல் படத்திலேயே தான் கேரள அரசின் சிறந்த நடிகை விருது பெற்றதுக்கு தகுதியானவர் தான் என இதிலும் தனது நடிப்பால் நிரூபித்துள்ளார்.
துப்பறியும் போலீஸ் அதிகாரியாக வரும் பாலிவுட் நடிகர் பிரசாந்த் நாராயணனின் மேனரிசம் கலக்கல். கொலையாளியை அவர் நெருங்கும் விதம் த்ரில்லிங்காக இருக்கிறது. விஜய்பாபுவின் எதிர்பாராத மரணமும், அவரது மனைவி அனுஸ்ரீயின் முடிவும் அதிர்ச்சி ஏற்படுத்துவது உண்மை. வினீத்தின் தந்தையாக ரெஞ்சி பணிக்கரும், ரெஜிஷாவின் தந்தையான லாலும் தங்கள் பிள்ளைகள் காதலிப்பதை கூட்டாக சேர்ந்து நட்புடன் எதிர்ப்பது கலாட்டா.
அறிமுக இயக்குனர் லியோ தாடியஸ், சினிமா கதைக்களத்திலேயே முழுப்படத்தையும் நகர்த்தாமல், திடீரென அதற்குள் ஒரு க்ரைம் கதையை வைத்து கதையின் போக்கை திசைமாற்றி இருப்பது கொஞ்சம் ஏமாற்றத்தை தந்தாலும், படத்தின் விறுவிறுப்பை எந்தவிதத்திலும் குறையாமல் பார்த்துக்கொண்டுள்ளார். த்ரிஷ்யம் படத்தை தொடர்ந்து ரசிகர்களை இருக்கை நுனியில் அமரவைக்கும் ஒருவித பதைபதைப்பை இந்தப்படமும் ஏற்படுத்துகிறது என்பது உண்மை.