நடிகர்கள் ; ஆண்டனி வர்கீஸ், ரேஷ்மா ராஜன், ஸ்ருதி ஜெயன், பின்னி ரிங்கி பெஞ்சமின், அம்ருதா அன்னா ரெஜி மற்றும் பல புதுமுகங்கள் ,கதை ; செம்பான் வினோத் ஜோஸ் (நடிகர்) ,இசை ; பிரசாந்த் பிள்ளை ,ஒளிப்பதிவு ; கிரிஷ் கங்காதரன் ,.,இயக்கம் ; லிஜோ ஜோஸ் பள்ளிசேரி.
எப்போதோ ஒருமுறை புதுமுகங்கள் நடிக்கும் படம் ஒன்று திடீரென வெளியாகி திரையுலகத்தை மட்டுமல்ல, ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்துவிடும்.. அப்படிப்பட்ட ஒரு படம் சமீபத்தில் வெளியாகியுள்ள அங்கமாலி டைரீஸ்..
கேரளாவில் உள்ள அங்கமாலி என்கிற ஊரில் இளைஞர் பட்டாளம் ஒன்றின் அன்றாட நடவடிகைக்களும் அவை தரும் சுக துக்கங்களும் தான் மொத்தப்படமும்.. கதையின் நாயகனாகிய வின்சென்ட் சின்னவயதிலேயே தனக்கென நண்பர்கள் டீம் செட் பண்ண ஆசைப்படும் கேரக்டர்.. வளர்ந்து பெரியவனானதும் அப்படியே கேங் மெயின்டெய்ன் பண்ணுகிறார்.
கல்லூரி பருவ காதல் கைவிட்டு போன நிலையில் இன்னொரு பெண்ணான சகி அவன் வாழ்வில் நுழைகிறாள்.. ஏதாவது தொழில் செய்யவேண்டும் என முடிவெடுக்கும் வின்சென்ட்டும் நண்பர்களும் அந்த ஊரிலேயே உள்ள ரவி, ராஜன் என்பவர்களுக்கு எதிராக பன்றி இறைச்சிக்கடை போடுகிறார்கள்.. தொழில் போட்டியில் விலையை குறைத்து இவர்கள் விற்க, இருதரப்புக்கும் அடிதடி ரணகளம் ஆகி, அதில் ஒரு உயிர்ப்பலியும் வின்சென்ட்டால் நிகழ்ந்து விடுகிறது..
வழக்கு, ஜாமீன், பெயில் என ஆண்டனியின் வாழ்க்கை திசைமாற, சகியின் காதலை விலக்குகிறான் வின்சென்ட்.. ஒருபக்கம் இறந்தவர் வீட்டாருடன் லட்சங்களில் சமரச பேரம் நடக்க, இன்னொரு பக்கம் இறந்தவனின் சகோதரன் வின்சென்ட்டை பழி தீர்க்க வெறியுடன் அலைகிறான்.. இந்தநிலையில் வின்சென்ட்டுக்கு ஆதரவாக இருக்கும் டாக்டர் லிசி, வின்செட்டுடன் காதலாகி, அவனுடன் திருமண வாழ்க்கையிலும் இணைகிறாள்..
லிசியின் உதவி மற்றும் நிலத்தை விற்ற பணம் ஆகியவற்றை வைத்து இழப்பீடு பணத்தை செட்டில் செய்த நிலையில் புது வாழ்க்கைக்கு தயாராகிறான் வின்சென்ட். சமரசம் பேசிய ரவி, ராஜன் மிகப்பெரிய தொகையை எடுத்துக்கொண்டு, அதில் ஒரு பகுதியை மட்டுமே தங்களுக்கு கொடுத்தது தெரியவர, இறந்தவனின் சகோதரன் ஒரு பண்டிகை தினத்தில் வின்சென்ட்டை கொல்ல களத்தில் குதிக்கிறான். இறுதியில் என்ன நடக்கிறது என்பதை கொஞ்சம் பதைபதைப்புடன் சொல்லி முடித்திருக்கிறார்கள்..
படத்தின் கதை என மேலே சொல்லப்பட்டது ஒரு பகுதிதான்.. இதில் பல உப கதாபாத்திரங்களின் வாழ்வியலையும் பின்னிப்பிணைத்து முழுப்படத்தையும் நகர்த்தியுள்ளார் இயக்குனர் லிஜோஜோஸ் பள்ளிசேரி.. நடந்த உண்மை சம்பவங்களி அடிப்படையில் படத்தின் கதையை படு சுவாரஸ்யமாக எழுதியுள்ள நடிகர் செம்பான் வினோத்துக்கு மிக சிறந்த கதாசிரியராக வெற்றிமுகம் கிடைத்துள்ளது.
நிறைய இடங்களில் அடுத்து இதெல்லாம் நடக்கும் என நாம் யூகித்தால் அடுத்த வினாடியே அதை உடைக்கும் விதமாக படம் வேறு திசையில் பயணிக்கிறது. ஆனால் அதுவே படத்துடன் நம்மை ஒன்ற வைக்கிறது.. அங்கமாலி பகுதியின் உணவு வகைகளை பட்டியலிட்டுக்கொண்டே டைட்டில் கார்டு போடுவது முதல், பேண்டு வாத்திய கருவிகளின் பின்னணி இசையுடன் ஆரம்ப கட்ட காட்சிகளை நகர்த்திய விதமும் அருமை..
வின்சென்ட்டாக நடித்துள்ள ஆண்டனி வர்கீசுக்கு களையான முகம்.. சதா கோபமும் எகிறலுமாக படம் முழுக்க, நம் கவனத்தை திரும்ப விடாமல் தன் பக்கம் ஈர்க்கிறார். மூன்று நாயகியரில் முதல் காதலியாக வரும் அம்ருதா (சீமா), முத்தம் கொடுத்தே நம்மை கட்டிப்போட முயற்சிக்கிறார்.. இரண்டாவது நாயகியான பின்னி (சகி) கதாநாயகன் கொலை வழக்கில் சிக்கிய பின்னும் தனது காதலை விட்டுக்கொடுக்காமல் நேர்மையாக இருப்பதில் தனது கம்பீரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மூன்றாவதாக லிசி கதாபாத்திரமாக வரும் ரேஷ்மா ராஜன், லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் என்கிற மாதிரி அவரது துறுதுறு நடிப்பு, வசீகர புன்னகையால் நம்மை கட்டிப்போட்டு விடுகிறார். ட்ரிங்க்ஸ் அடித்துவிட்டு ஆண்டனியிடம் தனது காதலை வெளிப்படுத்தும் விதம் செம க்யூட்... இன்னும் கொஞ்ச நாளைக்கு நம் கண்களில் லிசியின் உருவம் நிழலாடிக்கொண்டே இருக்கும் என்பது உண்மை.
ஆண்டனி தரப்பு நண்பர்களாகட்டும் எதிர் தரப்பு ஆட்களாகட்டும் எந்நேரமும் ஒரு திமிரும் தெனாவெட்டுமாகவே திரிகிறார்கள்.. குறிப்பாக ரவி, ராஜன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரத்குமார் (புதுமுகம் தான்) மற்றும் டிடோ வில்சன் இருவரின் நடிப்பும் செம.. ஆனால் கொஞ்சம் பிசகி இருந்தால் கம்மட்டிப்பாடம் மணிகண்ட ஆச்சாரியையும் வினாயகனையும் இமிடேட் செய்தது போல ஆகியிருக்கும்.. நாட்டு வெடிகுண்டு செய்யும் குஞ்சூட்டியாக வரும் சின்ஜோ வர்கீஸ் வரும் காட்சிகளில் எல்லாம் பட்டையை கிளப்புகிறார்.. இவர்கள் அனைவரும் அடிக்கடி மோதிக்கொள்ளும் சண்டைக்காட்சியை வடிவமைத்த ஸ்டண்ட் மாஸ்டரை தேடிப்போய் ஒரு ஸ்பெஷல் பொக்கே கொடுக்கவேண்டும்.. இயற்கையான சண்டைக்காட்சிகளுடன் நன்றாக மேய்த்திருக்கிறார் அனைவரையும்..
காமெடி காட்சிகளை படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் சிலரே கவனித்துக்கொள்வதால் திரைகதையில் அலுப்பு தட்டவில்லை. கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவில் அங்கமாலி எனும் நகரம் நம்மை ஆரம்பத்தில் கலவரப்படுத்தவே செய்கிறது.. ஆனால் அதுதான் படம் முழுவதும் அந்த சூழலுடன் நம்மை ஒன்றவும் வைக்கிறது.. பின்னணி இசையில் ஒரு புதிய முயற்சியை கையாண்டு இருக்கிறார் பிரசாந்த் பிள்ளை.. நன்றாகவே ஒர்க் அவுட்டும் ஆகியிருக்கிறது..
முந்தைய படமான டபுள் பேரலை எத்தனை தடவை பார்த்தாலும் சாதாரண ரசிகனுக்கு புரியடஹா விதமாக இயக்கி தனது மேதாவித்தனத்தை காட்டியிருந்தார் லிஜோஜோஸ் பள்ளிசேரி.. ஆனால் இந்தப்படத்தில் தனக்கும் ரசிகனுக்குமான இடைவெளியை வெகுவாக குறைத்திருக்கிறார் தன. என்ன ஒன்று வெகுஜன ரசிகர்கள் மற்றும் யதார்த்த சினிமா காதலர்கள் ஆகியோரை ஈர்க்கும் இந்தப்படம் பெண்களையும் குழந்தைகளையும் கவருமா என்பது சந்தேகம் தான்.
மொத்தத்தில் அங்கமாலி டைரீஸ் - ஒரு புதிய அனுபவம்