தினமலர் விமர்சனம் » காதல் கதை
தினமலர் விமர்சனம்
இதுநாள் வரை வந்த தமிழ் சினிமா காதல் கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட காதல் கதையை உள்ளடக்கிய படம் இது. இயக்குனர் வேலு பிரபாகரன் தனது காதல்களையும், தான் கண்ட காதல்களையும் வரிசைப்படுத்தி, வகைப்படுத்தி இது எல்லாம் காதலே இல்லை... காமம் மட்டுமே! என முத்தாய்ப்பாக சொல்லி முற்றுப்புள்ளி வைத்திருப்பதுதான் புதுமை!
கதைப்படி ஊர் பெரிய மனிதர் ஒருவரின் ஜாதி வெறியாலும், போலி முகத்திரையாலும் காலியாகும் காதல்களையும், காதலர்களையும் காட்டி கதை சொல்லி இருக்கும் வேலுபிரபாகரன் அதனூடே மிகவும் சாமர்த்தியமாக ஆரம்ப காலந்தொட்டு தனது காதல்களையும், தன் மீதான காதலையும் கலந்து கட்டி சொல்லி, இவையெல்லாம் காதலே அல்ல.. காமம் ஒன்றே.. என கூறியிருப்பதுடன் இந்தியாவில் நடக்கும் பெண் வன் கொடுமை, வன்புணர்ச்சி எல்லாவற்றுக்கும் காரணம்., பெண்களை ஆண்கள் மாதிரி ஆடை முதற்கொண்டு அனைத்து விஷயங்களிலும் ப்ரியாக விடாமல் பொத்தி, பொத்தி வைப்பதுதான்.. என தீர்வும் சொல்லி இருக்கிறார்.
அவர் சொல்லி இருக்கும் தீர்வு சரியோ... தவறோ..? ஆனால் எடுத்துக் கொண்ட கதையை அழகாக, அம்சமாக சொல்லி சபாஷ் வாங்கி விடுகிறார். பேஷ்.. பேஷ்..! வேலு பிரபாகரனின் இந்த வித்தியாச முயற்சிக்கு இளையராஜாவின் இசையும், வேதா செல்வத்தின் ஒளிப்பதிவும் மோகன் பீட்டர் பாபியாவின் படத்தொகுப்பும் பக்கபலம் சேர்த்துள்ளன என்றால் மிகையல்ல.
ஷெர்லிதாஸ், சரத் செந்தில், ரத்தன், ஜெய், அதிரூபன், எஸ்.எஸ்.குமரன், வேலு பிரபாகரன் என அனைவரும் பாத்திரங்களாகவே வாழ்ந்து பளிச்சிட்டிருக்கின்றனர். வசனக் காட்சிகளில் சென்சார் போர்டுக்கு போகிற போக்கில் வேலுபிரபாகரன் போடும் சூடும், காதலில் கள்ளக்காதல், நல்லக்காதல் என்று ஏதும் கிடையாது... எல்லாமே காமம்தான் எனும் வாதமும் பிரமாதம். அதே மாதிரி படம் முழுக்க பரவிக் கிடக்கும் விரசக் காட்சிகளையும், உரசல் காட்சிகளையும் கதைக்கு தேவை எனும் அளவில் எடுத்துக் கொள்ள முடிவதும் பலம்!
வேலு பிரபாகரனின் காதல் கதை! சில இடங்களில் அபத்தம்! பல இடங்களில் ஆபாசம்! என்றாலும் இக்காலகட்டத்திற்கு சாலப்பொருத்தம்! சரியான காமவாசம்!!
காதல் கதை : காம கதை!!