முந்தைய பாகத்தில் கணவனைத் தேடும் மனைவியாக வந்த வித்யா பாலன், இதில் கடத்தப்பட்ட மகளைத் தேடுகிறார்.
சக்கர நாற்காலியில் முடங்கி கிடக்கும் இளம்பெண் மினி, உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவிருக்கும் நிலையில் கடத்தப்படுகிறாள். அவளைத் தேடிச் செல்லும் தாய் துர்கா, விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு செல்ல, அந்த விபத்தின் பின்புலத்தை விசாரிக்க வரும் இந்திரஜித் கையில் சிக்குகிறது அவளின் டைரி. அதன்மூலம், அவள் ஒரு தேடப்படும் குற்றவாளி என அறியும் இந்திரஜித், துர்காவை என்ன செய்தார்; மினியின் நிலை என்ன உள்ளிட்ட கேள்விகளுக்கு, சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் பதில் தந்திருக்கிறார், இயக்குனர் சுஜாய் கோஷ்.
படத்தின் துாண், அஸ்திவாரம் எல்லாமே வித்யா பாலன் தான்; புடவை கட்டும் விதத்தில் கூட, தன் நுட்பமான நடிப்புத் திறனால், நம் புருவம் உயர வைக்கிறார். நடிப்பில் அவர் விட்டது போக மீதியை, இந்திரஜித்தாக வரும் அர்ஜுன் ராம்பால் நிரப்புகிறார். இவர்களைக் கடந்து, மற்ற பாத்திரங்களும் அசலாகத் தெரிவது, இயக்குனரின் அசத்தல் வெற்றி!
தபன் பாசுவின் ஒளிப்பதிவு, கோல்கட்டாவின் தெருக்களை அச்சு அசலாக படம் பிடித்திருக்கிறது; முதல் பாகத்தோடு ஒப்பிடுகையில், பாசுவின் உழைப்பு சற்று குறைவு தான் என்றாலும் குறையில்லை! திரைக்கதையின் வேகத்தை, தன் பின்னணி இசையால் நமக்குள் கடத்துகிறார் கிளின்டன் செரிஜோ.
கஹானி முதல்பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கு எந்த தொடர்பும் கிடையாது. முந்தைய பாகத்தில் கணவனைத் தேடும் மனைவியாக வந்த வித்யா பாலன், இதில் கடத்தப்பட்ட மகளைத் தேடுகிறார், கூடவே குழந்தைகளுக்கு நேரும் பாலியல் தொந்தரவுகளையும் வேறு ஒரு வித்தியாசமான கோணத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குநர் சுஜாய் கோஷ். தேர்ந்த பாத்திரத் தேர்வு மற்றும் வலுவான திரைக்கதையால், 'நல்ல படம்' எனும் நிலையை சிரமமின்றி எட்டுகிறது கஹானி 2.