அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஒரு சில படங்களில் தலை காட்டி இன்னமும் பெரிதாய் தலை நிமிர முடியாத அரவிந்த் ஆகாஷ், சாந்தினி இருவருடன் புதுமுகம் அஸ்வதி, பழகிய முகங்கள் எம்.எஸ்.பாஸ்கர், விச்சு விசுவநாதன், கல்யாண், யோகி பாபு... உள்ளிட்டோர் நடிக்க கல கல காமெடிப் படமாக நடிகர் மேஜர் கெளதமின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படமே "கண்ல காச காட்டப்பா".
சுகர் & ஸ்பைஸ் எண்டர்டெயின்மென்ட்டும் கனெக் ஆர்ட் புரடக்ஷன்ஸும் இணைந்து தயாரிக்க, ஐங்கரன் இண்டர்நேஷனல் பட நிறுவனம் வாங்கி வெளியிட்டிருக்கும் இப்பட கதை இதுதான்... மலேசியாவில் ஹவாலா பணமாக பாதுகாப்பாக இருக்கும் நம்மூர் மந்திரி ஒருவரின் நூறு கோடி ஊழல் பணத்தை, கொலம்பியா வங்கியில் போட வரும் அவரது மலேசிய டுபாக்கூர் கூட்டாளிகளும்., திருட்டு பேர்வழிகள் சிலரும் சந்தர்பப் சூழ்நிலை, தங்களுக்கு சாதகமானதால் சபல புத்தியில் தங்களுக்குள் அந்த பணத்தை பங்கு போட்டு கொள்ள முயற்சிக்கின்றனர். விதி வென்றதா? அவர்களது மதி வென்றதா..? என்பது தான் "கண்ணுல காச காட்டப்பா" படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்.. முழு நீள காமெடி என்ற பெயரில் இயக்குனர் மேஜர் கெளதம் ரசிகனை படுத்தாதது ஆறுதல்!
நாயகர் ஜெய்யாக வரும் அரவிந்த் ஆகாஷ், நாயகி ஷாலு வாக வரும் சாந்தினி இருவரும் இந்தப் படத்திற்கு அப்புறம் தலை நிமிரலாம். அத்தனை அசத்தலான, இயல்பான நடிப்பு இருவரிடமும். வாவ்! மதுவாக வரும் புதுமுகம் அஸ்வதியும் முதல் நாயகி சாந்தினிக்கு நிகராக நடிப்பிலும் கிளாமரிலும் வாய் பிளக்க வைக்கிறார் சபாஷ்!
பழகிய முகங்களான சின்ன பையனாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், ஜாக்காக வரும் விச்சு விசுவநாதன், மலேசிய டானாக ரொம்ப கெட்டவனாக வரும் டான்ஸ் மாஸ்டர் கல்யாண், அவரது அல்லக்கை அஸிஸ்டண்டாக கெட்டவனாக வரும் யோகி பாபு, ஜேம்ஸ் பாண்டு, மினிஸ்டர்.. உள்ளிட்டோர் படத்தை தங்களது காமெடியில் சீனுக்கு சீன் தூக்கி நிறுத்துகின்றனர்.
ராதாகிருஷ்ணனின் வசனத்தில் "அது, பொம்பள சூட்கேஸ்ன்னு எப்படி கண்டுபிடிச்ச? அவரு தான் தள்ளிட்டுப் போறார்ல்..." என்பது உள்ளிட்ட பன்ச் கள் படத்திற்கு பலம் சேர்க்கின்றன.
செல்வத்தின் படத்தொகுப்பு படத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. ஒளிப்பதிவும் இதுவரை எந்தப் படத்திலும் பார்த்திராத மலேசியாவின் இண்டு இடுக்கு அழகையும் அழகாக கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.
"தந்தானே தந்தானே துட்டு தந்தாணே..", "ஓடி ஓடி தேடி தேடி..." உள்ளிட்ட பாடல்களிலும், பின்னணி இசையிலும் திவாகர் சுப்ரமணியத்தின் இசை பேசப்படும் விதத்தில் இருக்கிறது
"நான், தாத்தாவுக்கு ஹெல்ப் பண்றேன் தாத்தா? எனக்கு ஹெல்ப் பண்றாரு..", எனும் நையாண்டி வசனங்கள், "சுடோ புல் பார் அபெக்ட்" எனும் அனந்துக்கு வந்த வியாதி,
உள்ளிட்ட காமெடிகளாலும், இந்தியாவின் இன்றைய டைமிங்கிற்கு ஏற்ற டைட்டிலாலும், கதையாலும் கவனம் ஈர்க்கும் இயக்குனர் மேஜர் கெளதமின் திறமைக்கு கட்டியம் கூற, மலேசிய பத்துமலை முருகன் கோயிலை எத்தனையோ திரைப்படங்களில் காட்டியிருந்தாலும், இதுவரை எந்தப்படத்திலும் காட்டியிராத கோணத்தில் மிக சிறப்பாக, படுபிரமாண்டமாக கதையோடு ஒட்டி காட்டியிருக்கும் ஒன்று போதும், வாவ்! புலிக்கு பிறந்தது பூனையாகுமா.? ! மேஜர் கெளதம் அப்பா மாதிரி., நடிப்பில் அவ்வளவாக சோபிக்கவில்லை என்றாலும் இயக்கத்தில் நிச்சயம் ஜெயிப்பார் என நம்பலாம்!
ஆக மொத்தத்தில், "கண்ல காச காட்டப்பா படத்திற்கு காமெடி விரும்பும் ரசிகர்கள் நம்பி போலாம்ப்பா!"