Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன் (மலையாளம்)

கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன் (மலையாளம்),kattappanayile hrithik roshan
  • கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன் (மலையாளம்)
இயக்குநர் நாதிர்ஷா இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் இது.
22 நவ, 2016 - 16:32 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன் (மலையாளம்)

நடிகர்கள் : விஷ்ணு உன்னிகிருஷ்ணன், பிரயாகா மார்ட்டின், சித்திக், சலீம்குமார், தர்மராஜன் போல்காட்டி, கலாபவன் சாஜன், ஷிஜு வில்சன், சுவாசிகா

டைரக்சன் : நாதிர்ஷா

தயாரிப்பு : நடிகர் திலீப்


கடந்த வருடம் பிருத்விராஜை வைத்து 'அமர் அக்பர் அந்தோணி' என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் நாதிர்ஷாவின் இரண்டாவது படம் இது.. தனது முதல் படத்திற்கும், இந்தப்படத்திற்கும் கதை எழுதிய கதாசிரியர்களில் ஒருவரான விஷ்ணு உன்னிகிருஷ்ணனை ஹீரோவாக்கி அவர் இயக்கியுள்ள இந்தப்படத்தை, அவரது நண்பரான நடிகர் திலீப் தயாரித்துள்ளார்..


இடுக்கி மாவட்டம் கட்டப்பனை என்கிற சிறிய நகரத்தில் வசிப்பவர் சித்திக்.. எண்பதுகளில் சினிமாவில் நடிகனாக ஆசைப்பட்டு அந்த முயற்சி தோல்வியடைந்ததால் தனது மகன் கிருஷ்ணனையாவது ஹீரோவாக்கி விடலாம் என மகனின் சிறுவயதில் இருந்தே முயற்சி எடுக்கிறார். ஆனால் மகனோ 'சுமார் மூஞ்சி குமார்' என்கிற அளவில் இருப்பதால் அந்த கனவிலும் மண் விழுகிறது.


இந்தநிலையில் வளர்ந்து வாலிபனாகும் கிருஷ்ணன் தன்னை ஹிருத்திக் ரோஷன் போல இருப்பதாக நினைத்துக்கொள்கிறான்.. ஊராரும் அந்தப்பெயரை சரியாக உச்சரிக்க தெரியாமல் அவனை 'ரித்விக் ரோஷன்' ஆக மாற்றிவிடுகிறார்கள்.. சினிமா வாய்ப்பு தேடும் கிருஷ்ணனுக்கு செயின் திருடன், பிக்பாக்கெட் பேர்வழி என சின்னசின்ன வேடங்களில் மட்டுமே தலைகாட்டும் வாய்ப்பு கிடைக்கிறது..


தன் அழகு குறித்த தாழ்வு மனப்பான்மையால் தவிக்கும் கிருஷ்ணனை அவனறியாமல் சிறுவயதில் இருந்தே விரும்புகிறாள் அவனது தோழி லிஜிமோல்.. இன்னொரு பக்கம் கிருஷ்ணனின் பக்கத்துவீட்டுகு குடிவரும் பிரயாகா அவனுடன் நட்பாக பழக, அதை காதலாக மாற்ற துடிக்கிறான் கிருஷ்ணன்.


இந்நிலையில் திடீரென எதிர்பாராத விதமாக கிருஷ்ணனை தனது படத்தின் ஹீரோவாக ஆக்குகிறார் இயக்குனரான கலாபவன் சாஜன்.. எல்லாம் கூடிவரும் வேளையில் எதிர்பாராமல் கிருஷ்ணனின் நாயகன் கனவு, காதலி கனவு எல்லாமே தகர்ந்துபோகும் சூழல் உருவாகிறது. முடிவில் கிருஷ்ணன் என்னவானான் என்பதே க்ளைமாக்ஸ்..


கதைதான் ஒரு படத்தின் நாயகன் என உறுதியாக நம்பியுள்ள இயக்குனர் நாதிர்ஷா, 'அழகர்சாமியின் குதிரை' சுசீந்திரன் ரேஞ்சுக்கு இந்தப்படத்தில் ரிஸ்க் எடுக்கவே செய்திருக்கிறார். கதை நாம் பார்த்து பார்த்து சலித்தது தான் என்றாலும், அதை இன்றைய ட்ரெண்டுக்கு மாற்றி, படம் முழுவதும் காமெடியை உள்நுழைத்து அக்மார்க் பொழுதுபோக்கு படமாக மாற்றி இருப்பதில் கவனம் ஈர்த்திருக்கிறார்.


விஷ்ணு உன்னிகிருஷ்ணன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை இம்மி பிசகாமல் பிரதிபலித்திருக்கிறார். தனது உருவம் குறித்து அவர் தாழ்வு மனப்பான்மையால் மருகுவதும், தனுஷ், ரஜினி ஆகிய ஹீரோக்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதும், எதிர்பாராமல் கிடைத்த ஹீரோ வாய்ப்பும், காதலியும் கைவிட்டு போகும் சூழலை அழகாக தனது முகத்தில் வெளிப்படுத்தி இருப்பதுமாக ஜமாய்த்திருக்கிறார்.


விஷ்ணுவுடன் படம் முழுதும் கூடவே வரும் ஆட்டோ ட்ரைவரான தர்மராஜன் போல்காட்டி, காமெடிக்கு முழு உத்தரவாதம் தருகிறார். விஷ்ணுவின் முயற்சிக்கு ஆரம்பத்தில் இருந்தே தோள்கொடுத்து சென்டிமென்ட்டிலும் மனதில் நிறைகிறார். சினிமாவில் வாய்ப்பு தேடும் நாயகியாக வரும் பிரயாகா சிரிப்பிலே நம்மை கவர முயற்சிக்கிறார் என்றாலும் நடிப்பதற்கான வாய்ப்பு குறைவு தான்..


காதலனை கழட்டிவிட்டு வசதியானவனை திருமணம் செய்யும் சுவாசிகா, விஷ்ணு உன்னிகிருஷ்ணனிடம் தனது காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் லிஜிமோல் இருவரும் நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். 'பிரேமா' புகழ் ஷிஜு வில்சன் கெஸ்ட் ரோளில் நட்புக்காக தலைகாட்டியுள்ளார். படத்தின் மற்றிரண்டு முக்கிய தூண்களாக சீனியர் நடிகர்களான சலீம்குமாரும் சித்திக்கும் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.. குறிப்பாக சலீம்குமார் தோற்றத்திலும் தனது பழைய டைமிங் காமெடியிலும் மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார். சினிமா இயக்குனராக வரும் கலாபவன் சாஜன், சென்டிமென்ட்டில் போட்டு தாக்குகிறார்.


பிஜிபாலின் இசையில் இரண்டு பாடல்கள் எழுந்து ஆட்டம்போட தூண்டுகின்றன. ஷிஜு காலித்தின் ஒளிப்பதிவு கட்டப்பனையின் இயற்கை அழகை அப்படியே அள்ளி வந்திருக்கிறது.. ரசிகர்கள் நிச்சயம் இந்தப்படத்தை ஏற்றுக்கொள்வார்கள் என நம்பி இந்தப்படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர் நாதிர்ஷா மீண்டும் வெற்றிக்கனியை ருசித்திருக்கிறார் என்பதை தியேட்டர்களில் இடைவிடாது ஒலிக்கும் கைதட்டல்கள் மூலமாகவே உணர்ந்துகொள்ள முடிகிறது.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in