நடிகர்கள் : பர்கான் அக்தர், ஸ்ரத்தா கபூர், அர்ஜூன் ராம்பால், புரப் கோஹ்லி.
இயக்கம் : சுஜாத் சவுதாகர்
ராக் ஆன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம், முந்தைய பாகங்களில் நடித்தவர்களே இப்பபடத்திலும் இணைந்து நடித்துள்ளனர். கூடவே அவர்களுடன் ஸ்ரத்த கபூர் புதிதாக இணைந்துள்ளார். இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்தது என்று இனி பார்ப்போம்...
கதைப்படி, கேதர் ஜவேரி எனும் புரப் ஹோக்லி, ஏன் நமது நண்பர்கள் எல்லாம் பிரிந்து கிடக்கிறார்கள், நாம் ஏன் மீண்டும் ஒன்று சேர்ந்து இசை நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்று எண்ணுகிறார். அதற்கு ஏற்றார்போல் ஜோசப் எனும் அர்ஜூன் ராம்பால் பண ரீதியாகவும் செல்வாக்காக இருக்கிறார். மேலும் இசை நிகழ்ச்சி ஒன்றிலும் நடுவராகவும் இருந்து வருகிறார். இவர்களின் மற்றொரு நண்பருமான ஆதித்யா செரப் எனும் பர்கான் அக்தர், தன் குடும்பம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு மெகாலாயாவில் தனித்து, சமூக சேவை செய்து வாழ்ந்து வருகிறார். தன் நண்பர் ஒருவரின் தற்கொலைக்கு தான் காரணமாகிவிட்டேனோ என்ற குற்ற உணர்ச்சியில் தனித்து வாழ்கிறார். ஒருநாள் தற்கொலை செய்ய முயலும்போது ஆதித்யா, ஜியா எனும் பாடகி ஸ்ரத்தா கபூரை சந்திக்கிறார். அவரது பாடும் திறனை பார்த்து அசந்து போகும் அந்த தருணத்தில் தற்கொலை முயற்சியை கைவிடுகிறார். அதேசமயம் ஜியா பாடுவது அவரது தந்தைக்கு பிடிக்கவில்லை, எதிர்ப்பையும் மீறி அவ்வப்போடு பாடி வருகிறது. இதுஒருபுறம் இருக்க தான் தத்தெடுத்த கிராமம் தீ விபத்தால் பாதிக்கப்பட அவர்களுக்கு உதவ அதிக நிதி தேவைப்படுகிறது. அரசை நம்பினால் சரிவாராது என்பதால் மீண்டும் இசை நிகழ்ச்சி நடத்தி பணம் திரட்ட எண்ணுகிறார் ஆதித்யா. பிரிந்த நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மீண்டும் இசை நிகழ்ச்சி நடத்தி வேண்டிய பணத்தை திரட்டினார்களா...?, ஜியா தொடர்ந்து பாட அவரது அப்பா சம்மதித்தாரா...? என்பது ராக் ஆன்-2 படத்தின் மீதிக்கதை.
பர்கான் அக்தர், அர்ஜூன் ராம்பால், ஸ்ரத்தா கபூர், புரப் ஹோக்லி... என நான்குபேர் முதன்மை ரோலில் நடித்திருக்கிறார்கள். ஆனால் படத்தின் அநேக கதை பர்கானை சுற்றியே நகருவதால் அவரது ரோல் மட்டுமே படம் முழுக்க தெரிகிறது. அதிலும் தேசிய விருது பெற்ற அர்ஜூன் ராம்பால் இந்தப்படத்தில் முழுமையாக வீணடிக்கப்பட்டுள்ளார். ஸ்ரத்தா கபூரிடமும் இப்படியொரு நடிப்பை எதிர்பார்க்கவில்லை. அவரது நடிப்பும் சுத்தமாக எடுபடவில்லை.
படத்தின் பிரதானமே இசை தான், ஆனால் இசையும் சரி, பின்னணி இசையும் சரி ரசிக்கும்படி ஒலிக்கவில்லை. படத்தொகுப்பும் சுமார் தான்.
ராக் ஆன் எனும் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லிவிட்டு, அதை கொஞ்சம் கூட இயக்குநர் பூர்த்தி செய்யாதது ஏமாற்றம். படத்தில் கதை என்று பெரிதாக ஒன்றும் இல்லை, அதை எடுத்து சென்றவிதமும் ரசிகர்களை ஈர்க்கும்படி இல்லை. இதன்மூலம் இயக்குநர் சுஜாத் சவுதாகர், ரசிகர்களை ஏமாற்றவிட்டார் என்று சொல்ல தோன்றுகிறது.
மொத்தத்தில், ‛‛ராக் ஆன்-2 - நத்திங் டு டூ ‛அண்ட்' நத்திங் டு சே...''சுஜாத் சவுதாகர்