தினமலர் விமர்சனம் » மஞ்சள் வெயில்
தினமலர் விமர்சனம்
உயிரை கொடுத்தேனும் நல்லநட்பு, நல்ல காதலை இணைத்து வைக்கும் எனும் கருத்தை வலியுறுத்தி வெளிவந்துள்ள படம்!
கல்லூரித் தோழியின் சகோதரி திருமணத்திற்காக ஊட்டிக்கு வருகிறார்கள் ஹீரோவும், அவரது நண்பர்களும். வந்த இடத்தில் தோழியின் அக்காவை மணம் முடிக்க வேண்டிய வில்லன் மாப்பிள்ளை, தோழிக்கு வலை விரிக்கிறார்.
விடுவாரா ஹீரோ? சின்ன வயது முதலே தோழியின் ஒன்றாக படித்து அவர் மீது அளவில்லாத அன்பு வைத்திருப்பவர் ஆயிற்றே ஹீரோ! அதன் விளைவு தோழியை கூட்டிக் கொண்டு சென்னைக்கு கிளம்பி விடுகிறார். விடுவாரா வில்லன்? துரத்துகிறார்! பிறகென்ன...? நாயகனும், நாயகியும் கல்யாணம் கட்டிக் கொண்டு வில்லனுக்கு பெப்பே காட்ட வேண்டியதுதானே? என நீங்கள் நினைத்தால் அது தப்பு!
நாயகனுக்கும், நாயகிக்கும் வெறும் நட்பு மட்டும்தான். ஆனால், நாயகிக்கு ஒரு காதலும் இருக்கிறது. அதற்கு நாயகன் உதவுகிறார். அது, யாருடனான காதல்? அதற்கு நாயகர் எவ்வாறு உதவுகிறார்? வில்லன் என்ன ஆனார்? விறுவிறுப்பாகவும் விடை அளிக்கிறது மஞ்சள் வெயிலின் மறுபாதி!
கல்லூரி தோழியாக சந்தியாவும், அவரது நண்பராக பிரசன்னாவும், காதலராக அன்பு, காதல் கிசுகிசு படங்களில் நாயகராக நடித்த பாலாவும் போட்டி போட்டு நடித்திருக்கின்றனர். பாலாவின் காதலை காட்டிலும் பிரசன்னாவின் நட்பும், நடிப்பும் நச்சென்று இருக்கிறது!
நாயகி சந்தியா, அவரது அக்கா தாரிகா, அப்பா நிழல்கள் ரவி எல்லோரும் பாத்திரத்திற்கேற்ற தேர்வு. பளீச் நடிப்பு!
வில்லன் ஆர்.கே.வின் உருவத்திற்கும் அவரது குரலுக்கும் 'சிங்க்' ஆகாதது வருத்தம். அதே மாதிரி ஆர்.கே.வின் "விக்"கும் வீக்!
பா.விஜய்யின் பாடல்வரிகள், பரத்வாஜின் இசை, கவியரசுவின் ஒளிப்பதிவு இவை காதுகளுக்கும், கண்களுக்கும் குளிர்ச்சி. எடிட்டர் உதயசங்கரின் கத்தரி படத்தொகுப்பில் இன்னும் கொஞ்சம் பயன்பட்டிருந்தால் மஞ்சள்வெயிலாக இதமாக இருந்திருக்கும்!
மஞ்சள்வெயில் : மதிய வெயில்!-------------------------
கல்கி விமர்சனம்
தன் தோழியின் காதலனை தேடி கண்டுபிடித்து, அவளோடு அவனை சேர்த்து வைத்து விட்டு, போராடி உயிர் துறக்கும் நண்பனின் கதைதான் "மஞ்சள் வெயில்'. லூசு குண்டம்மா காயத்ரியாக சந்தியா, காயத்ரியின் நண்பனாக விஜய் கதாபாத்திரத்தில் பிரசன்னா, காமெடி ரவுடியாக எப்போதும் டாடா சுமோவில் காதலர்களை துரத்திக் கொண்டிருக்கும் ஆர்.கே. என இவர்களை சுற்றியே படத்தின் பெரும்பகுதி நகர்கிறது.
சந்தியாவின் அக்காவான தாரிகாவுக்கு, ஆர்.கே.வை மணம் முடிக்க ஏற்பாடு நடக்கிறது. திருமணத்துக்கு வரும் சந்தியா மீது மோகம் கொண்டு, அக்காவை விட்டு விட்டு தங்கையை மணந்து கொள்ள சூழ்ச்சி செய்கிறார் ஆர்.கே. இவரிடமிருந்து தப்பித்து, நண்பனோடு சேர்ந்து காதலனான பாலாவை, சந்தியா எவ்வாறு கரம் பிடிக்கிறார் என்பதே மீதிக்கதை.
கல்லுõரியில் மாணவர்கள் செல்போன் வைத்துக் கொண்டு எம்.எஸ்.பாஸ்கரை வாட்டியெடுக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. "அப்பாவி மாதிரி முகம் வைச்சுக்கிட்டு "அஞ்சாதே' பட வில்லன் வேலையா செய்யுற...'' என ஆங்காங்கே வசனங்களைத் தூவியிருக்கிறார் இயக்குநர். நட்புக்காக கிரிக்கெட் மட்டையால் கோயில் பெல்லை அடித்து சந்தியாவின் காதலை சேர்த்து வைத்து கைத்தட்டு வாங்குகிறார் பிரசன்னா.
ஒளிப்பதிவு சுமார் ரகம். "உனக்காகவே வாழ்கிறேன்...' பரத்வாஜின் குரலில் கேட்கும்படி உள்ளது. மற்றபடி அழுத்தமான கதையை, வலுவான திரைக்கதை கொண்டு அமைக்காமல் இயக்குநர் விட்டு விட்டதால் ஊட்டி ரயில் மாதிரி படம் மெதுவாகவே நகர்கிறது.
மஞ்சள் வெயில் மாலை நேரத்து மயக்கம்!