கசபா (மலையாளம்) - விமர்சனம்
நடிகர்கள் : மம்முட்டி, வரலட்சுமி, நேகா சக்சேனா, சம்பத், சித்திக், ஜெகதீஷ், மஹ்பூல் சல்மான் மற்றும் பலர்
இசை : ராகுல்ராஜ
ஒளிப்பதிவு : சமீர் ஹக
இயக்கம் : நிதின் ரெஞ்சி பணிக்கர்
ஐந்து வருடங்கள் கழித்து மம்முட்டி மீண்டும் போலீஸ் யூனிபார்ம் அணிந்திருக்கும் படம், நடிகை வரலட்சுமி மலையாளத்தில் அறிமுகமாகியுள்ள படம், பிரபல கதாசிரியர் ரெஞ்சி பணிக்கரின் மகன் நிதின் இயக்குனராக மாறியிருக்கும் படம் என சில முக்கிய அம்சங்களுடன் வெளியாகியுள்ள படம் தான் இந்த கசபா.
கமிஷனர் சித்திக்கின் மகனும் அவரது காதலியும் நான்கைந்து போலீசாருடன் சேர்ந்து போலீஸ் வாகனத்தில் பயணிக்கும்போது வெடிகுண்டு வீசி கொல்லப்படுகிறார்கள். மாவோயிஸ்ட்டுகள் தான் இதற்கு காரணம் என போலீஸாரால் சொல்லப்படுகிறது. இதற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கும் விதமாக தனக்கு கீழே நேர்மையாக பணியாற்றிவரும் மம்முட்டியை கசபா பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு ட்ரான்ஸ்பர் செய்கிறார் கமிஷனர்.
மம்முட்டியின் விசாரணையில் அந்த ஊரை சேர்ந்த சம்பத் அரசியலில் போட்டியிடுகிறார் என்பதும் அவருக்கும் விபச்சார விடுதி நடத்தும் அவரது ஆசை நாயகி வரலட்சுமிக்கும் இந்த கொலையில் தொடர்பு உள்ளது என்ப்பதும் தெரியவருகிறது. அதற்கான காரணமும் தெரியவருகிறது. இதில் திடீரென எதிர்பாராத விதமாக சம்பத்துக்கு எதிராக திரும்புகிறார் வரலட்சுமி.. இருவருமே ஒருவர் மற்றவரை கொல்வதற்காக மம்முட்டியை தங்கள் பக்கம் பணத்தையும் உடலையும் வைத்து ஆசை காட்டுகின்றனர்.. மம்முட்டி எடுத்த முடிவு யாருக்காவது சாதகமாக இருந்ததா என்பது க்ளைமாக்ஸ்..
மம்முட்டியின் முந்தைய போலீஸ் கதைகளில் இருந்து பெரிய மாற்றம் இல்லாத படமாகத்தான் இந்த கசபா வெளியாகி இருக்கிறது. சொல்லப்போனால் படத்தின் இயக்குனரான நிதிநின் தந்தை ரெஞ்சி பணிக்கர் தனது கதைகளில் வரும் போலீஸ் ஆபிசர்களை மிடுக்காக சித்தரித்ததில் பாதிகூட இதில் இல்லை என்றே சொல்லவேண்டும்.
சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ராஜன் சக்காரியாவாக மம்முட்டி கம்பீரம் காட்டினாலும், அவரது கேரக்டர் வடிவமைப்பு பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை... ஸ்டைலாக ஆடியபடி வரும் காட்சிகளிலும், சிகரெட்டை தூக்கிப்போட்டு ரஜினி ஸ்டைல் பண்ணுவதிலும் கலக்குகிறார் மனிதர். சீனியர் பெண் போலீஸ் அதிகாரியின் தெனாவட்டுக்கு பதிலடி தரும் விதமாக் அவரது பேன்ட் பக்கிளில் கையைவிட்டு இழுக்கும்போது நமக்கே பக் என்கிறது.
விபச்சார விடுதி நடத்துகின்ற ஈவு இரக்கமற்ற தலைவியாக, வில்லனின் ஆசைநாயகியாக என, பல நடிகைகள் நடிக்கவே தயங்கும் துணிச்சலான கேரக்டரில் நடித்துள்ளார் வரலட்சுமி.. மலையாள ரசிகர்களுக்கு இவரது வரவு பிரமிப்பை கொடுக்கும் என்பது உண்மை. மம்முட்டியுடன் இவர் சவால் விட்டு மோதும் காட்சிகள் பலே..
தனது அரசியல் வாழ்க்கை நன்றாக ஆரம்பிக்கவேண்டும் என்பதற்காக தனக்கு பிரச்சனை தருபவர்களை எல்லாம் போட்டுத்தள்ளும் சம்பத், எதிரிகளுக்கு உளவு சொல்லி கைக்கூலி வாங்கும் போலீஸ் நரியாக ஜெகதீஷ், மாணவர் தலைவராக வந்து மம்முட்டிக்கு உதவி, அதனாலேயே உயிரைவிடும் மஹ்பூல் சல்மான், விலைமாதுவாக வரும் இன்னொரு நாயகி நேகா சக்சேனா, தன்னை வரலட்சுமியின் தந்தை என அவரிடம் கூட கடைசிவரை வெளிப்படுத்தாமல் அவருக்கு கையாளாக வேலை பார்க்கும் அலான்சியர் லோபஸ் என பல துணைக்கதாபாத்திரங்கள் தங்களது வேலையை சரியாக செய்துள்ளார்கள்.
இயக்குனர் நிதின் சொன்ன எந்த விஷயம் மம்முட்டியை மயக்கி இந்தப்படத்தில் ஒப்புக்கொள்ள வைத்தது என தெரியவில்லை. ஒரு போலீஸ் அதிகாரி எதிரிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் அதிரடி காட்சிகளுக்கு படத்தில் அப்படி ஒரு பஞ்சம்.. பாரில் நடக்கும் சண்டைக்காட்சி ஒன்றுதான் மம்முட்டி ரசிகர்களுக்கான தீனி.. மட்டன் பிரியாணி எதிர்பார்த்து வந்த மம்முட்டி ரசிகர்களுக்கு குஸ்கா.. இல்லையில்லை வெரைட்டி ரைஸ் போட்டு முணுமுணுக்க வைத்து அனுப்புகிறார் நிதின்.