தினமலர் விமர்சனம்
இளையராஜா இசையில், நீண்ட இடைவெளிக்குப் பின் சங்கிலி முருகன் தலைமையில், புதியவர் பிரான்சிஸ் மார்க்ஸ் எழுத்து, இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்க வெளிவந்திருக்கும் திரைப்படமே ஓய்.
ஒரு கொலை குற்றத்திற்காக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இளம் பெண் ஸ்வேதா, அக்காவின் திருமணத்திற்காக சென்னைப் போக பரோலில் வெளியே வருகிறார். அவரை தீர்த்து கட்ட ஒரு கும்பல் கொலை வெறியுடன் அலைகிறது. அந்த கும்பலின் கைகளில் சிக்காமல், சென்னை பஸ் ஏறும் ஸ்வேதா, விதிவசத்தால், சென்னைக்குப் போகாமல் அப்பேருந்துள் தன் அருகே அமர்ந்திருக்கும் இளைஞர் கிருஷ் எனும் கிருஷ்ணா வீட்டிற்கு செல்கிறார். கிருஷ், தன் காதலி காயத்ரியை பார்க்க ஸ்வேதாவின் உடமைகளுடன் சென்னைக்குப் போக, ஸ்வேதா, கிருஷ் தவறவிட்ட குடும்ப சங்கிலியுடன் கிருஷின் கிராமத்துக்கு செல்கிறார்.
கிருஷின் காதலி ஸ்வேதா தான்.... எனக் கருதும் ஒட்டு மொத்தக் குடும்பமும் அவரை கிருஷ் காதலி காயத்ரியாக கொண்டாடுகிறது! ஸ்வேதாவும் தன்னை துரத்தும் கொலை வெறி கும்பலிடமிருந்து தற்காத்து கொள்ள அப்போதைக்கு கிருஷின் காதலியாக வாழ்கிறார். ஒரு கட்டத்தில் கிருஷ் - ஸ்வேதா இருவரும் மெய்யாலுமே காதலில் விழுகின்றனர். காதலில் விழுந்த இருவரும் கல்யாணத்தில் இணைந்தனரா? கிருஷ் - காயத்ரியின் காதல் என்னாயிற்று..? பரோலில் வந்த ஸ்வேதா மீண்டும் சிறைக்குப் போனாரா..? அவர் செய்த குற்றமென்ன...? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பதில் சொல்கிறது ஓய் படத்தின் மீதிக் கதை! அதை இன்னும் சற்றே லாஜிக்காக சொல்லியிருந்தால் மேலும் ரசிக்கும் படி இருந்திருக்கும் என்பது நம் கருத்து!
மற்றபடி, க்ருஷ் எனும் கிருஷ்ணாவாக புதுமுகம் கீதன், ஸ்வேதாவாக அறிமுகம் ஈஷா, காயத்ரியாக பாப்ரிகோஷ், கிருஷ்ஷின் கிராமத்து தாத்தா ஆவுடையப்பனாக சங்கிலி முருகன், கிருஷ்ஷின் பண்ணையார் அப்பா மெய்யப்பனாக நாகிநீடு, மாமா சிவாவாக காமெடி அர்ஜூனன், நாயகியின் அக்கா நீலிமா - நீலிமாராணி, கிருஷின் தங்கை திவ்யாவாக வர்ஷா, வில்லன் காளியாக நந்தா சரவணன் உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர். அதிலும், பார்த்தியாடா அந்த மாதர் குல மாணிக்கத்தை, தேர்ல ஏத்த வேண்டிய தெய்வத்தை..... என விவரமே புரியாமல் அடிக்கடி பொங்கும் தாத்தா சங்கிலி முருகனும், அவரையே தன் நடிப்பு சங்கிலியால் கட்டிப்போடும் ஸ்வேதா - ஈஷாவும் பேஷ், பேஷ்...சபாஷ்!
இளையராஜாவின் இசையில், ஒருசேட்டிலைட்டு வானம் விட்டு பூமி வந்ததே... , தென்றல் வரும் வழியில் வண்ண நிலவே வா.... , எந்த ஊரு ஆனாலும்.. எங்க ஊரு அம்மன்... " உள்ளிட்ட பாடல்கள் சுபராகம்! யுகா.ஹெச்.சின் ஒளிப்பதிவும் குளிர்ச்சி! மணியின் படத்தொகுப்பு, பாடாவதி தொகுப்பு மல்ல..., பக்கா தொகுப்பும் அல்ல!
அடிப்படையில நல்லவனா இருக்கிற ஒருத்தனால இதெல்லாம் பண்ண முடியாது... , வித்தை தெரிஞ்சவன் எல்லாம் போட்டியில கலந்துக்க முடியும், நுணுக்கம் தெரிந்தவன் தான் ஜெயிக்க முடியும்! ,விட்டுக் கொடுத்தா இப்படி தான் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல சொல்லி காட்ட தோணும்... போன்ற கருத்தாழமிக்க என்.பாஸ்கரின் வசனங்கள் படத்திற்கு பெரிய பலம்.
இவரது வசனங்களும் போலீஸ் பேட்ரோல், பெட்ரோல்.... உள்ளிட்ட காமெடி சீன்களும் பிரான்சிஸ் மார்க்ஸின் எழுத்து, இயக்கத்தில் நிறை! ஆனால், அதேநேரம், பரோலில் வந்த பெண் கைதி, அருகே இருக்கும் ஸ்டேஷனுக்கு கையெழுத்து போடக்கூட போகதது, பிள்ளையின் பேச்சை மதித்துக் கேட்காத பண்ணையார் குடும்பம், அவர் காதலியாக கருதும் ஸ்வேதாவை கொண்டாடுவது, நாயகன் கிருஷ், தன் நிஜக் காதலி காயத்ரி எனும் பாப்ரிகோஷை உடனடியாக போனிலோ, நேரிலோ தொடர்பு கொண்டு உண்மையை தன் குடும்பத்திற்கு புரியவைக்க முயலாதிருப்பது... உள்ளிட்ட லாஜிக் குறைகள், "ஓய்யை ஒரு மாதிரி என்ன ஒய்? என ரசிகனை சலிப்பாக கேட்க வைத்து விடுகின்றன.
ஆகவே, ஒய் - சற்றே பொய்யாய் தெரிவது மெய்!